தீர்ந்த காதல் தீராத் துன்பம்

3fdb0981e1cf2e90eb162036faf004bc--beautiful-paintings-colours

 

 

 

 

 

இன்னும் இரு தினங்களில் அவளுக்கு திருமணம்.

அவள் வீட்டைத் தாண்டிச் சென்ற என்னை ஏதோ ஒரு குரல்

அழைத்தது, “ஏலேய் மக்கா…”

திரும்பிப் பார்த்தேன், பூத்தும் பூக்காத மல்லிகையைப் போல் அலமேலு நின்றுகொண்டிருந்தாள் அவள் வீட்டு வாசலில்.

‘உள்ளே வா’ என செய்கை காட்டினாள். சற்றே பதட்டத்தோடுதான் சென்றேன்.

ஓர் ஓட்டு வீடு, அதிலொரு நார்க்கட்டில், மூலையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, அதனருகே ஒரு நெகிழி நாற்காலி. அந்த நாற்காலியில் என்னை அமரச் சொன்னாள்.

அவள் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

“தண்ணி குடிக்கிறியா?”

“இல்ல வேண்டாம். என்ன சொல்லு செவலட்ட எதாவது சொல்லணுமா?”

அவள் முகம் முற்றாக வாடியது. தொலைக்காட்சியில் ஒளிர்ந்த ஏதோ ஒரு பாடலை பார்ப்பது போல மௌனித்திருந்தாள். வந்த வார்த்தை தொண்டைக்குள்ளேயே திக்கித்து நிற்கிறது. பல கட்ட ஆய்வு போல! சொல்லவா? வேண்டாமா? என…
செவலை கருப்பும், களையுமாக, கலகலப்பாக பேசி எவரையும் கவரக்கூடியவன். என்னை விட சற்று மூப்புதான் ஆனாலும் உற்ற நண்பனைப் போலதான் நடத்துவான்.

கோவில் கொடை, உவரி திருவிழா, ஊரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், சுபவிழாக்கள் என எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு யுவதியை கவர்வான். கவர்வதற்காகவே அலைவான். அதற்காக நிறைய மெனக்கெடுவான். தென்னை மரத்தில் சேலையை சுற்றிவிட்டாலும் ‘பிகர் எப்படி?’ என்பதை ஆராய்ந்து ஏமாந்தால்தான் அவன் கண் அடைபடும். அதது அன்றோடு முடிந்துவிடும் என்பதுதான் அவன் தனித்த தருதலைத்தனம்.
அக்கம் பக்க வீட்டு அக்காக்கள் கூடி தெருவிலமர்ந்து பீடி சுற்றுவார்கள். அலமேலுவும் அவர்களில் ஒருத்திதான்.

ஏதோ தூரத்து உறவின் முறையை தோண்டி அலமேலுவை அத்தை மகள் என கிண்டல் செய்வான் செவலை.

அவள் கண்டுகொள்ளவே மாட்டாள்.

தெருவில் போகும் போதும், வரும் போதும் அவளையே பார்ப்பது, வெடித்து சிரிக்குமளவிற்கு ஏதோ ஒன்றை நகைச்சுவை பொங்கச் செய்வது, சாடையாக அவளையே பேசுவது என பெண்ணை ஈர்க்கும் வித்தை அத்தனையையும் செய்தான்.

அப்படிதான் ஒரு நாள், நானும் செவலயும்தெருவில்வந்து கொண்டிருந்த போது அலமேலு மட்டுமே பீடி தட்டோடு அமர்ந்திருந்தாள். என் தோள்களை அழுத்தி, “மக்கா லேய் அலமேலுட்ட அவள நான் லவ் பண்ணுதேன்னு சொல்லுல” என்றான்.

“நீ ஒருத்திய லவ் பண்ணா பரவால, ஓராயிரம் புள்ளய லவ் பண்ணுவா அதுக்கு நானா பலிகெடா? போடே போடே…”

“அம்ம மேல சத்யம்ல மக்கா. இப்ப அவள மட்டும்தான் லவ் பண்ணுதேன். சொல்லு போ மக்கா” என கெஞ்சினான்.

நான் மெல்ல சென்று அவள் அருகில் அமர்ந்துகொண்டேன். அவள் பீடி தட்டிலுள்ள பிளேடு ஒன்றை எடுத்து என் நகத்தை வெட்டுவது போல பாவ்லா செய்துகொண்டே, “ஏட்ட… செவல உன்னய லவ் பண்ணியானாம்” என்றேன்.
அவள் ஒன்றுமே சொல்லவில்லை. கவிழ்ந்த வாறு சிரித்தாள். எனக்கு சிறு ஆறுதல். நினைத்துக்கொண்டேன். ‘இது ஏற்கனவே அரும்பிய காதல். என பங்கு எதுவுமில்லை’ என்று.
அதன் பிறகு வழக்கமான காதலர்களின் சேட்டைகள் அனைத்தும் சுபமாக நடந்தேறியது.

இடையில் தகவல் தொலை தொடர்பு, பொருட்கள் பரிமாற்றம் மட்டும்தான் என் பங்கு.

ஒரு நாள் நள்ளிரவு 1 மணி இருக்கும். என்னை காவல் வைத்துவிட்டு அலமேலுவும், செவலையும் அலமேலு வீட்டிற்கு அடுத்ததாக ஓர் ஆளற்ற வீட்டில் ஒதுங்கினார்கள். பேரச்சத்துடன் ஓர் இருட்டில் ஒளிந்திருந்தேன் நான்.
சிறிது நேரத்தில் டம் டம் என எவரோ அடிக்கும் ஓசை கேட்டது. நடுநடுங்கிப் போனேன். அலமேலுவின் கூந்தலைப் பற்றிக் கொண்டு அவள் தாய் இழுத்துக்கொண்டு சென்றாள். சிறிது நேரத்தில் செவலை லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு என்னை கவனிக்காதது போன்று கடந்து சென்றான். என்னை காட்டிகொடுத்துவிடக் கூடாது என்கிற தூய எண்ணம்தான் அது.
எனக்கு பயமும் சோகமுமாய் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
எனக்கு செவலையை விட அலமேலுவைதான் நிரம்பப் பிடிக்கும். செவலைக்கு அலமேலு பலரில் ஒருத்தி என்றால், அலமேலுக்கு ஆண் வாடையே செவலைதான். அவள் ஓர் அபளைப் பெண். திடீரெனக் கிடைத்த அதீத அன்பில் திக்குமுக்காடி அவன் விருப்பத்திற்கு இசைந்திருக்கிறாள். மிகுந்த மன உளைச்சலாக இருந்தது.

மறுநாள் செவலையை பார்த்தேன். அவன் எப்போதும் போல் இருந்தான். எந்த சலனமுமில்லை அவனிடம். ஆச்சர்யமாக இருந்தது.

அஞ்சி அலமேலு வீட்டுப் பக்கமே போகவில்லை நான். ஒரு வாரம் கழித்துச் சென்றேன். வீட்டுக்குள்ளிருந்த அலமேலு என்னைப் பார்த்ததும் வேகமாக வாசலுக்கு வந்தாள். வாசலின் முன் அமர்ந்து ஓலைப் பெட்டியை பிண்ணிக்கொண்டிருந்த அவளின் தாயின் பின்னால் நின்று இரு விரல்களைக் காட்டி ஏதோ செய்கை காட்டினாள். எனக்கு ஒன்றுமே விளங்காமல் சென்றுவிட்டேன்.
பிற்பாடு செவலையிடம் சொன்னேன், “ரெண்டு மணிக்கு அவிய அம்ம பீடி கம்பெனிக்கு போயிருவாவ, அந்த நேரத்துல அவட்ட போய் என்ன சொல்லுறானு கேட்டுட்டு வா” என்றான்.
சென்றேன், தடாகத்தில் தவிக்கும் மீனைப் போல கண்கள் நிரம்ப நீர் அவளுக்கு. பரிதாபமாக இருந்தது.

“எங்க வீட்ல எனக்கு மாப்ள பாக்காவ, அவியள என்னய கூட்டிட்டு போவ சொல்லு” என உடைந்த குரலில் சொன்னாள். ஓரிரு தங்க மோதிரங்களை தந்து, “இத வச்சி ஏற்பாட பண்ணச் சொல்லு என்றாள்.

ஏதோ மனதில் ஓர் உற்சாகம் எனக்கு. செவலக்கும் அலமேலுக்கும் கல்யாணம் நடந்தால் அதுவே எனக்கு பிறவிபலனாக தோன்றியது.
அவனிடம் மோதிரத்தை கையளித்தேன். “கல்யாணம் பண்ணணுமாம்ல கூட்டிட்டு போ” என்றேன்.
நெடுநேரம் யோசித்தான். “கல்யாணத்துக்கு நான் இன்னும் தயாராவல, வெளிநாட்டுக்கு போயிட்டு வந்துதான் கட்டுவானாம்னு சொல்லு” என்றான்.

“லேய் கிறுக்கு குன்ன, அவளுக்கு அவிய வீட்ல மாப்ள பாத்துட்டாவளாம்” என படபடப்பாக சொன்னேன்.

“அதுக்கு நா என்ன செய்ய முடியும். நான் வேணும்னா அவள காத்திருக்க சொல்லு. இல்லேனா வூட்ல பாக்க மாப்ளக்கு கழுத்த நீட்டச் சொல்லு” என்றான். அவன் கழுத்தை நெறித்துவிட வேண்டும் போல் தோன்றியது.
நடந்ததை அவளிடம் சொன்னேன், “எதுவுமே சொல்லவில்லை அவள். எப்போதும் போல கண்கள் நிறைந்து வெடுக்கென வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அதன் பிறகும் அவள் வீட்டின் முன் அடிக்கடி செல்வதுண்டு. அவளை காண இயலவே இல்லை. வெயிலில் கருகும் ஈசலைப் போல குற்ற உணர்ச்சியால் செத்துக்கொண்டிர
ுந்தேன்.
அவளுக்கு திருமணம் என்கிற செய்தி கொஞ்சமாய் ஆறுதல் தந்தது.

திருமணத்திற்கு முன்பு ஒரு முறை அவளை சந்தித்துவிட வேண்டுமென்பது என் அவா. அப்படிதான் அந்த நாள் வந்தது.
மௌனமாக இருந்தவளை, “சொல்லு செவலட்ட எதாவது சொல்லணுமா?”

அவள் விழி இப்போதும் நிறைந்துவிட்டது.
எனக்கு அவள் காலில் விழுந்து அழ வேண்டும் போல் இருந்தது.

“பாதி அழுகுரலில், “ஆமா” என்றாள்,

“நான் இப்ப அவன்ட்ட பேச மாட்டேன்” என்றேன்.

“எனக்காக ஒரே ஒருக்கா பேசு” என்றாள்.

நான் எதுவுமே பேசவில்லை. பெருங்காட்டுக்குள் தனித்திருப்பதை போன்று மனம் படபடத்தது.

“அவனுக்காக என்னால காத்திருக்க முடியல. நா மன்னிப்புக் கேட்டேன்னு சொல்லு” என்றாள். அந்த வார்த்தையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் பிறகு தன்னுடைய தவறுதான் என தன்னை நோகிற அளவுக்கான பரிசுத்தமான காதல் பரிதாபமாய் ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த பேரவலச் செயலில் எனக்கும் பங்குள்ளது. என் கண்கள் நிரம்பியது. வெடித்து அழவா முடியும். அடக்கிக்கொண்டு விறுவிறுவென வெளியேறினேன்.
என் குற்ற உணர்வை சுடலை மாடன் பாதத்தில் முட்டி முட்டி இறக்கி வைத்தேன்.

 

*************************************************************************************

தத்தி ஆண்

 

 

index(2)

 

இப்படி அவளை சந்திப்பேனென சற்றும் எதிர்பார்க்கவில்லை.
என்ன எழவோ தெரியவில்லை இதயம் இயல்பிழந்து வெகு வேகமாக துடிக்கிறது. விமானம் உயரே பறக்க துவங்குகையில் அடிவயிற்றை காற்று கவ்வுமே அப்படி இருக்கிறது.

கல்லூரி காலத்தில்
“ஒன்ன தவிர வேற யார்கூடயும் என்னால வாழ முடியாதுடா. Pls Don’t leave me” என
அவள் பேசிய ஒரு வார்த்தை ஏனோ இப்போது ஈரக்கொலையில் வெண்ணீரால் நனைக்கிறது.

தலைமை ஆசிரியர் இருக்கையில் தோரணையாக அமர்ந்திருக்கிறாள். கையில் பேனாவும், கண்ணில் பேரொளியுமாக இயல்பாக என்ன பார்த்தாள். ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ எதுவுமே இல்லை. பெருக்கெடுத்தோடும் அன்பும், வெட்கம் தாளா முகமும் அவளிடம் இப்போது கொஞ்சம் கூட இல்லை. எனக்கு ஆச்சயர்மாக இருந்தது. ஒரு வார்த்தை இப்படி ஒரு பெண்ணை முற்றாக மாற்றிவிடுமா?

“நட்புக்கு எல்லை உண்டல்லவா?

உருகி உருகி காதலிக்கும் நான் உன்னை எனக்கு மட்டும்தான் என எண்ணுவது பேரன்பின் பிழையா?

அது என்ன ஆண் பெண் பேதமற்று மார்பில் கை உருசமளவுக்கு விளையாடுவது! அதை கூட கவனிக்கத் தெரியாமல் அப்படி என்ன நட்பு மயிர்!

இதற்கு பெயர் உன் பார்வையில் சந்தேகமெனில் என் பார்வையில் பொசஸிவ்.”

இவ்வாறாக என் ஆதங்கக் கேள்வி பலவற்றிற்கு அவள் வழியும் கண்ணீரால் ஒற்றை பதில்தான் சொன்னாள்.

“உன்னால மட்டுமில்ல, எந்த ஆம்பளயாலயும் ஒரு பெண்ண புரிஞ்சுக்கவே முடியாது”

அதற்கு மேல் அவள் பேசவில்லை. அவள் விளக்கமளிக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன்.

நான் அவளிடம் எதிர்பார்த்தது “உன்ன விட எவனும் எனக்கு முக்கியமில்லடா” என சொல்லிய வாறு என் தோள் நணைக்கும் அவள் கண்ணீரை தான்.

பெண் சக்தி என்ன என்பதை அவள் வாழ்நாள் மௌனம் உணர்த்திற்று.
கர்வத்தை இழக்க முடியாமலும், அவளையும் மறக்க முடியாமலும் பெருந்துயர் கொண்டேன்.

தன் வீட்டை சுமந்தபடியே செல்லும் நத்தையைப் போல அவளையும், அவள் தந்த வலியையும் சுமந்தபடியே அல்லாடினேன்.

அவள் நண்பனிடம் நெருக்கம் காட்டி என் கண் முன்னேயே, அவ்வப்போது என் தலையைக் கொய்து கையில் தந்தாள்.
கல்லூரி வாழ்வு நிறைவுற்றது. அவள் எங்கோ நான் எங்கோ.
காலம் அவளை என்னிலிருந்து கடத்திக் கொண்டு போய் சேர்த்துவிட்டது.

கிட்டதட்ட இறுபது ஆண்டுகளுக்கு பின் அவளை இன்று சந்திக்கிறேன். இப்படி ஒரு சந்திப்பு நிகழாதா என ஏங்கிய நாட்கள் ஏராளம்.

“ஹாய் வாட்டே சர்ப்ரைஸ். எப்டி இருக்க?”
ஒரு சாதாரண நண்பனிடம் கேட்பது போல் கேட்டாள்.

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? கிணற்றின் ஆழத்திலிருந்து வரும் குரல் போல் வந்தது என்னிலிருந்து.
கைவிரல்களில் பேனாவை சுழற்றிய படி சிரித்தாள்.

“என்ன சிங்கப்பூர் காரங்க இந்த பக்கம்?”

“நான் சிங்கப்பூர்ல இருக்கேன்னு யார் சொன்னது?”

“யாரோ சொன்னாங்க. அத விடு. யாருக்கு அட்மிஷன் வேணும் சொல்லு?”

“என் பிரண்டோட பையனுக்கு.”

“ஓகே குடுத்திடலாம். அப்றம்?”

தோரணையாக அமர்ந்துகொண்டு கேட்டாள்.

“அப்றம் நான் கிளம்புறேன். தேங்ஸ்”
என்று கூறி இருக்கையை விட்டு எழுந்தேன். ஆரம்பத்திலிருந்தே ஒன்று உருத்திக்கொண்டே இருந்தது. அவள் கழுத்தில் தாலி இல்லை. ஒருவேளை திருமணமே இன்றி வாழ்வாளோ? என்கிற நப்பாசை எனக்கு.
வெளியே நடக்க திரும்பியவன் மீண்டும் அவளை பார்த்து திரும்பியபடி கேட்டேன், “உன் குழந்தைகளும் இங்கேதான் படிக்கிறாங்களா?”
சற்று பெருமூச்சு விட்டபடி ஓர் ஏளனச் சிரிப்போடு சொன்னாள்,

“என் பொண்ணு இங்கே படிக்கல. அவள் காலேஜ் போறா.”

“ஓகே ஓகே” என தலைதெரிக்க ஓடி வந்தேன்.

இளங்கோதை

“நானும் கூட வரவா?”
“இல்ல வேண்டாம், நான்
போயிருவேன்”
“இருட்டா இருக்கு, இன்னும் ஒரு
கிலோ மீட்டர் போவணும். ஒத்தயில
போயிருவியா? நானும் கூட
வாரேனே”
“இல்ல நான் போயிடுவேன்”
என்று விருட்டென நடையை
கட்டினாள் கோதை.
தார்ச்சாலை, சாலையின்
இருபுறங்களிலும் கள்ளிச் செடிகள்,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள்,
வானம் முழுக்க படர்ந்த நட்சத்திரங்கள்
மின்மினிப் பூச்சி போல்
மின்னுகின்றன, இரு பாதியாக
வெட்டிய இளநீரைப் போல் நிலா,
கூடடைந்த பறவைகளின் சப்தங்கள்
எங்கோ கேட்கிறது,
கள்ளிச்செடிகளில் தஞ்சம் புகுந்த
வண்டுகள் ரீங்காரமிடுகிறது.
இவை எதிலும் கவனமில்லா கோதை
விருவிருவென நடந்துகொண்டே
இருந்தாள்.
குளிர்ந்த காற்று முகத்தில்
வீசுகிறது அவள் முகம் வெப்பத்தில்
தகிக்கிறது. தலையில் ஏதோ
பெருஞ்சுமை இருப்பது போல்
பாரமாய் இருந்தது, உடலெங்கும்
மெலிதாய் நடுங்கியது, இதயம்
சற்று அதிகமாகவே துடித்தது.
இன்னும் வேகமெடுத்து
முன்னோக்கி நடந்தாள். அவள்
நினைவுகள் பின்னோக்கி
நகர்ந்தன…
*********************
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர்
ஆலை.
கடல் மணலை ஈரம் சொட்டச் சொட்ட
அள்ளி வந்து, கருவிகள் மூலம் உலர
வைத்து தரம் பிரித்து,
மூட்டையிலடைத்து
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
செய்யும் அரசி(யல்வாதிகள்)
அனுமதியோடு இயங்கும் ஆலை.
ஆண்கள், பெண்கள் என்ற
பாகுபாடில்லாமல் அனைவரும்
ஒன்றாக பணி செய்தனர்.
ஒரு நாள் வேகமாக வேலை
செய்துகொண்டிருந்த போது
மிடுக்காக உடையணிந்து, ஓங்கி
உயர்ந்த, ஒருவன் வந்து அவர்கள்
வேலை செய்வதையே
பார்த்துக்கொண்டிருந்தான்.
இவர்கள் எவரும் அவனை
கவனிக்காதது போலவே பணியை
தொடர்ந்துகொண்டிருந்தனர்.
“எத்தே யாருத்தே இவன், ஆள பாத்தா
ஒரு தினுசா மொரட்டு ஆளா
இருக்கான். என்னையவே மொறச்சி
பாக்குறாப்ள இருக்குத்தே” என்று
கேட்டாள் கோதை.
இங்கு பணிக்கு சேர்ந்த நாள்
முதலே அத்தைதான் கோதைக்கு
உற்ற தோழி. 50 வயதிருக்கும்
அத்தைக்கும் கோதைதான் ஒரே
தோழி. ஏதோ தூரத்து உறவின்
முறையை தோண்டி எடுத்து
அதற்கு அத்தை என்று பெயர் சூட்டி
அழைத்து மகிழ்கிறாள்.
“ஏட்டி கோத…அவன் ஒன்னய
மட்டுமில்லட்ட எல்லாரையும்தான்
குருகுருனு பாக்கான்”
கிடுகிடுவென்ற கருவிகள்
இரைச்சலிலும் கோதையும்,
அத்தையும் கமுக்கமாக
பேசிக்கொண்டிருந்தனர் மணல்களை
கைகளால் உலர்த்தியவாறே…
பிரமாண்ட திருமண அரங்கம் போன்ற
ஒரு கட்டிடத்தில் ஐந்தாறு ராட்சத
கருவிகள் பொருத்தப்பட்டு ஆலை
இயங்கிக்கொண்டிருந்தது. திடீரென
அத்தனை கருவிகளும் இயங்குவது
நின்றது.
பெருமழை பொழிந்து ஓய்ந்தது
போன்ற நிசப்தம் நிலவியது ஆலை
முழுவதிலும்…
மேலாளர் ஒருவர் வந்து “,இங்க
பாருங்கமா… இவர் பேரு இளங்கோ,
இவர்தான் புதுசா வந்துருக்குற
சூப்பரேசர், பாத்து கவனமா
வேலைய பாருங்க” என்று தன்
உரையை முடித்தார். கருவிகள்
இயங்க ஆரம்பித்தது.
இளங்கோவும், மேலாளரும்
அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர்.
நாட்கள் சில நகர்ந்தோடியது.
பல பேர் மத்தியிலும் இளங்கோவின்
பார்வை கோதையின் மீது விழுதல்
கூடிக்கொண்டே வந்தது.
கோதையும் கவனித்தேதான்
இருந்தாள்.
அங்கு வேலை செய்யும் பெண்களில்
கோதை சற்று வடிவானவள்.
ஏழ்மையான ஆடையையும்
பளிச்சென்று உடுப்பவள், அளவாகப்
பேசி, தானுண்டு தன்
வேலையுண்டு என இருப்பவள்.
வரும் மேலதிகாரிகள் முதல் சக
ஊழியர்கள் வரை கோதையிடம்
சிமிட்டும் கண்கள் பலவற்றை பார்த்து
சட்டையில் பட்ட தூசியை தட்டுவது
போல் உதரிவிட்டுச் செல்பவள்.
கோதைக்கு இது புதிதல்ல,
இளங்கோவும் அவள் பார்த்த பல
கழுகுகளில் ஒருவன்தான்.
ஆலைக்கு வெளியே சில
வேப்பமரங்கள் உண்டு. அதன்
நிழலில்தான் மதிய உணவு உண்பது
வழக்கம் கோதைக்கும் அத்தைக்கும்.
அன்றொருநாள் இருவரும் வேம்படி
நிழலில் அமர்ந்து உண்ண
ஆயத்தமாயினர்.
இளங்கோ அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தான்.
“ஏட்ட கோதை இவன் ஏம்ட்ட அங்கேயும்
இங்கேயுமா குட்டி போட்ட நாயி
மாதி லாந்தியான்?”
“அட விடுங்கத்த… அவன
எட்டிப்பாக்காதீங்க”
“பாவம்ட்ட சாப்டாம அலையுதான்.
என்னனு கேப்போம்”
என்று கூறி…
“… எளங்கோ சார், என்னாச்சாச்சு
சாப்பிட போவாம இங்கனயே
சுத்துறீங்க?”
என்றாள் அத்தை
“அட அது ஒன்னுமில்லமா…”
“சார் இங்க வாங்க”
சற்று தயங்கியவாறே அருகில்
வந்தான் இளங்கோ…
“தெனசரி இந்நேரமெல்லாம் கார
எடுத்துட்டு சாப்பிட போவீங்க,
இன்னைக்கு என்னாச்சு?”
“இன்னைக்கு அந்த ஊர்ல கோயில்
கொடையாம். ஓட்டல் தெறக்கல”
“வாங்க, இருங்க ஆளுக்கொஞ்சமா
சாப்பிடுவோம்”
“இல்ல வேண்டாம்மா, வவுறு செத்த
மந்தமாவே இருக்கு…”
“சார் உக்காருங்க சார்”
என்று கூறியவாறே தன் சோற்று
வாளியை திறந்து அதன் மூடியில்
இரண்டு பிடி சோறள்ளி வைத்தாள்
அத்தை.
கோதையும் தன் பங்குக்கு ஒரு
பிடி சோறு வைத்தாள்.
குழம்புகள் ஊற்றப்பட்டது,
தயங்கியவாறே அமர்ந்தான் இளங்கோ.
மிக பவ்யமாக வாங்கி நாசுக்காக
உண்டான்.
“கோதை ஏன் எதுவுமே பேச
மாட்டேங்குறா? கல்யாணமாயிருச்ச
ா? வூட்டுக்காரர் என்ன பண்றாரு?”
“கல்யாணமாயி பாட்ட தொலச்சாச்சு”
என்றாள் அத்தை.
கோதை அத்தையின் தொடையை
பிடித்து கிள்ளினாள் ‘எதுவும்
சொல்லிவிடாதே’ என்பது போன்று.
“என்னம்மா இப்டி சொல்ற ஒரு
எளந்தாரி புள்ளய போயி…”
என்றான் இளங்கோ…
கோதை வாயில் வைத்த
பருக்கையை மென்று முழுங்கிய
வாறே சொன்னாள்,
“19 வயசுல பெத்தவங்க சொல்லு
கேக்காம காதலிச்சவனையே
கல்யாணம் பண்ணேன்.
25 வயசுல குடிச்சி குடிச்சே ஈரல்
அவிஞ்சு செத்து போயிட்டாவ…”
“ம்… அப்றம்…”
“அப்றமென்ன அப்றம் 4 வயசு பொம்பள
புள்ளயோட நிம்மதியாதான்
வாழுறேன்”
“இங்க எவ்ளோ சம்பளம் தரானுவ?”
“ஐயாயிரம் ரூவா”
“லீவு போட்டா சம்பளம்
பிடிப்பானுவளே?”
“ஆமா லீவு போட மாட்டேன்.
கஷ்டப்பட்டுடேனேனு எவளும்
கல்யாணத்துக்கும் காடு தர
மாட்டாளுவ, எவளாவது தந்தாலும்
நான் போமாட்டேன். ஆ…மா
மூலிக்கு முகூர்த்த வூட்ல என்ன
வேலை… கோயில் கொடைக்கும்
வரி குடுக்க மாட்டேன். வாங்குற
சம்பளத்துல மூவாயிரம் ரூவா
வாயிக்கும் வயித்துக்குமே
போயிரும், ஒரு அம்பதாயிரம் ரூவா
சீட்டு போட்டுருக்கேன். இது
போதும்…”
பேச்சின் முடிவில் மூவரும் உண்டு
முடித்தார்கள். சற்று இறுக்கமாகவே
இளங்கோ விடைபெற்றான்.
நாட்கள் சில சென்றது.
இளங்கோவின் அவள் மீதான
பார்வையில் இப்போது கனிவு
கலந்திருந்தது. இப்போதெல்லாம்
கோதையிடமும், அத்தையிடமும்
அவன் எந்த வேலையும்
சொல்வதில்லை. அவ்வப்போது
இருவரும் சந்திக்கையில் சிறு
புன்னகைப் பூக்கள் உதிர்கிறது.
“ஏட்டி கோதை, என்ன ஒரு மாதிரி
உம்முனு இருக்கா…?”
“கோயில் கொட வருது,கோயில
எடுத்து கட்ட போறானுவளாம். ஒரு
குடும்பத்துக்கு ஆயிரம் ரூவா
மடக்கு வரி போட்டுருக்கானுவ”
“நீதான் வரி குடுக்க மாட்டியே
பொறவென்ன..?”
“இல்லத்தே… நம்ம காலத்தோடு
முடியுற விசயமில்ல இது.
நாளைக்கே எம்மொவா வளந்து
சாமி கும்புட போனாலும் இந்த
சாதிகெட்ட பயலுவ கைய பிடிச்சு
வெளிய இழுத்து
போட்டுருவானுவளேனுதான்
யோசிக்கிறேன். ஒரு ஆயிரம்
ரூவாய குடுத்து
போட்டுட்டோம்னா நாளைக்கு
நமக்கும் உரிமை இருக்குனு அங்கன
போயி நின்னுக்கலாம்… ம்ஹும் நம்ம
படுய பாட்டுக்கு ஒனக்கு சாமி ஒரு
கேடானு கேக்குறாப்ள இருக்கு…”
“சங்கடப்படாம இரும்மா… மரத்த வச்சவன்
தண்ணி ஊத்தலேனா மழ பெஞ்சி
ஊத்தும். ஒம்பாட்டுக்கு இரு…”
ஓரிரு நாட்கள் கழித்து உணவு
இடைவேளையின் போது,
“ஏ… மருமொவளே ஆயிரம் ரூவா
வேணும்னால்லா நான் தாரேன்
பொறவு ஒங்கிட்ட இருக்கும் போது
தா…”
“நீங்க படுய பாடே பெரும்பாடு
ஒங்ககிட்ட எப்படித்தே ஆயிரம்
ரூவா…”
“சொல்லியேனு கோவப்படாத
எளங்கோ சார் ஒன்னய பத்தி அப்பப்ப
விசாரிப்பாரு, நேத்து
பேசிட்டிருக்கும் போது
சொன்னேன். இன்னைக்கு தந்து
‘குடு’னாரு”
“நீங்க ஏம்த்தே அவர்டலாம் சொல்றீய?
தேவையில்லாத வேலை
ஒங்களுக்கு.. எனக்கு வேண்டாம்
அவர்ட்ட குடுத்துருங்க”
சற்று சிவந்த முகத்தோடு
சினத்துடனே சொன்னாள் கோதை.
“ஏ சில்லாட்டப் பயவுள்ளா அவரும்
ஒன்னய மாதிரிதான். பாவம்
பொஞ்சாதி செத்துப் போயி
தனியாதான் வாழுறாராம். ஒரு
ஆம்பள புள்ள இருக்காம், வேற
கல்யாணமே வேண்டாம்னு
தனியாதான் வாழுறாராம். நல்ல
மனுசன் ஒதவி மனப்பான்மை
உள்ளவரு. நீ வாங்கிக்க பொறவு
நம்மகிட்ட இருக்கும் போது
குடுத்துருவோம்”
அவளால் வாங்கவும் முடியவில்லை,
மறுக்கவும் மனமில்லை, பணம்
தேவை என்பதை விட இளங்கோ மனம்
நோகக்கூடாது என்பதற்காகவே
வாங்கிக்கொண்டாள்.
நாட்கள் சில சென்றது. அத்தை
போன்று இளங்கோ மீதும் நல்ல
அபிப்ராயம் உண்டானது. தன்னைச்
சுற்றி இடப்பட்ட நெருப்பு
வேலியில் இளங்கோவுக்கு மட்டும்
ஒரு தாழ்வாரத்தை திறந்துவிட்டிரு
ந்தாள்.
இளங்கோ பார்ப்பது போன்றே
இவளும் பார்க்கத் துவங்கினாள்.
பிற ஆண்களை விட இளங்கோ மிக
நாணயமானவன். பேச வேண்டிய
விஷயம் தவிர்த்து ஒரு வார்த்தை
கூட கூடுதலாக பேச மாட்டான்.
அந்த ஆயிரம் ரூபாய் குறித்து
இதுவரை கோதையிடம் கேட்டதே
இல்லை.
கோதை ஊருக்கும் பணி செய்யும்
ஆலைக்குமான தூரம் ஏறத்தாழ
நான்கு மைல்கள். அவள்
ஊரிலிருந்து காலை எட்டு
மணிக்கு வரும் பிரத்யேக
சிற்றுந்துதான் அன்றாட பயண
வாகனம்.
ஒரு நாள் சிற்றுந்திலிருந்து
இறங்கி வரும் வழியில் இளங்கோ
நின்றான்.
“என்ன சார் இன்னைக்கு நேரமே
வந்துட்டீங்க போல..”
வெறும் புன்னகை கலந்த
தலையசைப்பு மட்டுமே
இளங்கோவிடமிருந்து பதிலாக
வந்தது.
“சார் இன்னும் ஒரு மாசத்துல சீட்டு
முடியுவு, அதுக்கு அடுத்த மாச
சம்பளத்துல ஒங்க ஆயிரம் ரூவாய
தந்துருவேன்”
“என்ன கோதை இப்டி சொல்லுற…
ஒங்க வூட்டுக்காரர்ட்ட
வாங்கினாலும் நீ திருப்பி
குடுத்துருவியா…?”
கோதை சட்டென தலை நிமிர்ந்து
பார்த்தாள். “என்ன சார் லூசு
மாதிரி பேசுறிய…”
என்று சொல்ல வந்தவளை
இடைமறித்து…
“சாரி சாரி கோதை. உங்க வூட்ல
உள்ளவங்கனு சொல்றதுக்கு பதிலா
வூட்டுக்காரர்னுட்டேன்”
காட்டமற்ற கோபம் களைந்து
“பரவால சார். பதறாதீங்க..”
என்று மிகையாவே சிரித்தாள்.
ஒரு கபடமற்ற வெள்ளந்தியாக
தலையை சுரண்டிய வாறே
சென்றான் இளங்கோ. அன்று
முழுவதும் இளங்கோவை பார்க்கும்
போதெல்லாம் வெடித்துச்
சிரிப்பாள்.
அதன் பிறகும் அன்றாடம்
இளங்கோவை தேடிப்பிடித்து
ஆத்மார்த்தமான சிரிப்பை உதிர்த்த
பிறகே பணியைத் தொடருவாள்.
பல நாட்களாக இருளடைந்த கோதை
மனதிற்குள் சாளரத்தின் வழியாக
சூரியக் கீற்று வந்து எட்டிப்பார்க்கி
றது, புழுங்கி வெந்த அவள்
நெஞ்சத்தில் பூங்காற்று வந்து
வருடுகிறது.
இளங்கோவோடு இப்போதெல்லாம்
வெட்கச் சிணுங்களோடு
பேசுகிறாள், அவனிடம் பேசுவதை
பிறர் பார்க்கிறார்களா என்று
கவனிக்கிறாள்.
அவன் பிற பெண்களிடம் பேசினால்
மனம் வாடுகிறாள்…
மாதம் பிறந்தது. மாலை ஆறு
மணிக்கு வேலை முடிந்த நேரம்
அனைவருக்கும் சம்பளக் கவர்
வழங்கப்பட்டது.
கோதையின் சம்பளக்கவரை
பிரத்யேகமாக இளங்கோ கொண்டு
கையில் கொடுத்தான்.
சிற்றுந்தில் வீட்டுக்குச் செல்லும்
சில நிமிட பயணம் முழுக்க ‘இவரு
ஏன் எங்கிட்ட தனியா கொண்டு வந்து
குடுத்தாரு…’ என்ற ஆழ்ந்த
சிந்தனையிலிருந்தாள். கவரை
பிரிக்கவே இல்லை. அச்சம், நாணம்,
படபடப்பு என அனைத்தும் இதயத்தில்
நடனமாடியது.
வீட்டுக்குச் சென்று குழந்தையை
எடுத்து முத்தமிட்டு உடைமாற்றக்
கூட பொறுமையிழந்து
சம்பளக்கவரை பிரித்தாள்.
ஐயாயிரம் ரூபாயும் ஒரு
வெள்ளைக் காகிகதமும் இருந்தது.
காகிதத்தை திருப்பினாள்.
“எப்படி சொல்வதென்று
தெரியவில்லை, என் நிலை நீ
அறிந்திருப்பாய்.
மனதை திடப்படுத்திக்கொண்டு
சொல்கிறேன். நான் உன்னை
விரும்புகிறேன். உன் பதிலுக்காக
காத்திருக்கிறேன். உனக்கு
விரும்பமில்லையெனில் கடிதத்தை
கிழித்துவிடு எவரிடமும்
சொல்லாதே.”
படித்த மாத்திரத்தில் இதயத்தில்
படபடப்பு கூடியது.
பக்கத்தில் நான்கு வயது பெண்
குழந்தை. கையில் வருங்காலத்தை
வளமாக்கும் கடிதம்.
‘என்னை மனைவியாக
ஏற்றுக்கொள்வான் என்
குழந்தையை…? அவன் குழந்தையாக
ஏற்பானா? அவன் மகன் என்னோடு
ஒட்டுவானா? என் கடந்த காலத்தை
சுட்டிச் சுட்டிச் சுடுபவனாக
இருந்தால்? அவனை பார்த்தால்
அப்படி தெரியவில்லை. அவனை
முற்று முழுதாய் பிடித்திருக்கிற
து. சமூக கட்டமைப்புகள், ஒவ்வாமை
உளவியல்கள் ஆகியவைதான்
அச்சமூட்டுகிறது. வானுமில்லா
பூமியுமில்லா திருசங்கு சொர்க்க
சிம்மாசனத்தில் அமர்ந்ததைப் போன்ற
மனநிலை.
இரவு நெடுநேரம் உறங்காமல்
சிந்தையிலேயே இருந்தாள். பின்பு
எப்போது உறங்கினாளென்றே
தெரியாது
அன்றைய இரவு மிக கடுமையாகக்
கழிந்தது.
காலையில் சிற்றுந்தில் ஓர்
இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
சாலைக் கரையோரம் கடந்தோடும்
கள்ளிச்செடிகளையும், கருவேல
மரங்களையும் கண்ணசைக்காமல்
பார்த்துக்கொண்டே வந்தாள். அவள்
மனதிற்குள் இளங்கோவும், அவள்
மகளும் மாறி மாறி வந்தனர்.
ஆலையை சிற்றுந்து
நெருங்கியது. இவள் நெஞ்சில்
முன்னெப்போதையும் விட
படபடப்பு.
எதிரே இளங்கோ இருந்துவிடக்
கூடாதென்று கடவுளை
வேண்டிக்கொண்டாள்.
சிற்றுந்து வந்தடைந்தது.
இறங்கி ஆலையை பார்த்தாள். அவன்
இல்லை. ஒரு நிம்மதிப் பெருமூச்சு
விட்டுக்கொண்டாள்.
வேகமாக ஆலையினுள்
நுழைந்தாள். அத்தையை
தேடினாள்.
இவள் பின்னால் நின்று
“ஏ மருமொவளே இன்னைக்கு என்ன
மொகத்துல பவுடர் ஏறியிருக்கு,
கண்ணு செவந்திருக்கு, சேலை
புதுசா இருக்கு. எதும்
விசேசமா…”
“அப்டீலாம் இல்லத்தே ஒங்ககிட்ட ஒரு
முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லு கோதை”
வந்த கடிதம், இவளின் குழப்பம்
அத்தனையும் சொன்னாள்.
அத்தை சற்றும் சிந்திக்கவே இல்லை.
“கடவுளா பாத்து ஒரு நல்லத
காட்டியிருக்கான் வுட்றாத
மக்களே… இறுவத்தஞ்சி வயசுல
எல்லாத்தையும் தொலச்சுட்டு
நிக்காளேனு ஒன்னய பத்தி
சங்கடப்படாத நாளே இல்ல மக்கா. அவன
பாத்தா கெட்டிக்காரனா
தெரியுவு. ஒங்க கல்யாணத்த நான்
நின்னு நடத்தி வைக்கேன்
கொழம்பாம சம்மதம் சொல்லு மக்கா…”
கோதை கண்கள் கண்ணீரால்
நிறைந்தது. அது ஆனந்தமா,
ஆற்றாமையா என்பதை தரம் பிரிக்கத்
தெரியவில்லை.
தன் முந்தானையால் கோதையின்
கண்களை துடைத்துவிட்ட வாறே
அவள் முகத்தை தன் தோளில்
சாய்த்து வைத்து அத்தை
தொடர்ந்தாள்
“எம்மொவன் பொண்டாட்டி சொல்ல
கேட்டு என்ன தனியா வுட்டுட்டு
போயிட்டான்.
‘ஒங்களுக்கு புள்ள மாதிரி
இருக்கேன், நீங்க திங்கிற சோத்துல
ஒரு பிடிய தாங்க’னு எங்கிட்ட
ஒருத்தன் கேட்டா நான் அவன
புள்ளயா ஏத்துக்க மாட்டேனா…?
அந்த மாதிரிதான் மக்கா. நானும்
உன் வயச கடந்து வந்தவதான் நாடி
நரம்ப அடக்கி எத்தன நாள் வாழுவ?
நாள ஒனக்கு எதுனா ஒன்னுனா உன்
பிள்ளைக்கு நல்லது கெட்டது யாரு
செய்யுவா? எதையும் யோசிக்காத
மக்கா. ஒனக்கு சொல்ல வெக்கமா
இருக்குனா சொல்லு நான்
அவங்கிட்ட போய் சொல்லுதேன்”
கோதை தலையை நிமிர்த்தினாள்.
அவள் மிகையாவே அழுதாள். ஏதோ
சம்மதம் சொல்வது போல்
தலையசைத்தாள்.
கோதையும் அத்தையும் ஏதேதோ
பேசிய வாறே பணியை
தொடர்ந்தனர். இளங்கோ வந்தான்.
ஆசிரியர் வகுப்பறை வந்ததும்
ஒழுங்காகும் மாணவர்களைப் போல
ஊழியர்கள் அனைவரும் வேலையை
துரிதப்படுத்தினர்.
இவன் கோதையையே பார்த்தான்.
வெகு நேரம் கோதை அவன் பக்கம்
திரும்பவில்லை.
நெடுநேரம் கழித்து அங்கிருந்த
படியே அவனை பார்த்தாள். ஒரு
பேருன்னதமான பார்வையது.
துளியும் மாசற்றிருந்தது அந்த
பார்வை. ஒற்றை பார்வையில்
விருப்பம் தெரிவிக்கும் கலை பிற
பெண்களைப் போன்றே
கோதைக்கும் வசப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பவனைப்
போல் இளங்கோ சிரித்தான்.
காலை முதல் மாலை வரை
அவ்வப்போது இவை
நிகழ்ந்தேறியது.
மாலை ஐந்து மணி வாக்கில்
இளங்கோ ஆலைக்குள் வந்தான்.
“இங்க பாருங்கம்மா கொஞ்சம்
மண்ணு வந்திருக்கு. கொஞ்சம்
அவசரமா பேக் பண்ணணும். ஒரு
நாலு பேரு ரெண்டு மணி நேரம்
ஓவர் டைம் பாக்கணும்”
என்று கூறி அந்நால்வரில் கோதை
பெயரையும் இணைத்திருந்தான்.
“சார் இவுங்க மூணுபேருக்கும்
பக்கத்துல இருக்கிற ஊருதான்.
எனக்கு நாலு மைல் போவணும்.
பஸ்ஸு கெடயாது. வேற
யாரயாவது மாத்தி வுடுங்க”
என்றாள் கோதை.
“அட அத பத்தி நீ ஏன் கவலபடுற நான்
எங்க ஊருக்கு போற வழிதான்.
ஒன்னய எறக்கி விட்டுட்டு போறேன்”
கோதைக்கு புரிந்துவிட்டது. அவள்
மறுப்பேதும் சொல்லவில்லை.
எட்டு மணிக்கு பணி முடியும்.
மணி ஆறாயிற்று.
நேரம் நெருங்க நெருங்க இதயம்
இயல்பை இழந்தது. ‘என்ன
பேசுவாரோ! எப்படி
நடந்துகொள்வாரோ…!
கோதைக்கு வேலை
விளங்கவேயில்லை ஒருவித
நடுக்கத்துடனே இருந்தாள்.
கிட்டதட்ட ஒரு சிறுமியின் நடன
அரங்கேற்றத்திற்கு முன்பான
மனநிலை.
இரவு எட்டு மணியானது. பணி
நிறைவடைந்து ஆலையிலிருந்து
அனைவரும் வெளியேறினர்.
“கோதை நில்லு. நான் வண்டியில
கொண்டு விடுதேன்”
மறுப்பேதும் பேசாமல் நின்றாள்.
அனைவரும் வெளியேறிவிட்டனர்.
இளங்கோ மகிழுந்தை எடுத்து
வந்து
“ஏறு” என்றான்.
பின் கதவை திறக்க முயன்றவளை
“முன்னே ஏறு” என்றான்.
மகிழுந்து முன்னேறிப்
புறப்பட்டது.
ஆலையைக் கடந்தது.
கோதை அவன் பக்கம் திரும்பவே
இல்லை.
சாளரக் கண்ணாடி வழியே
வெளியே பார்த்துக்கொண்ட
ே இருந்தாள்.
குறுகிய அந்த தார்சாலையில்
குண்டிலும், குழியிலும் மேவி
ஏறி மகிழுந்து மெதுவாக
பயணித்தது.
இருவரிடமும் தியான மடம் போன்ற
ஓர் நிசப்தம். யார் பேசுவதென்று
தெரியவில்லை.
ஆசை, காதல், அச்சம், நடுக்கம் என
அனைத்து சூழ்ந்து பொதிந்து
வைத்திருந்தது கோதையை.
“க்..கோ…தை”
இளங்கோ மெல்லிய குரலில்
தயங்கியவாறு அழைத்தான்.
“ம்ம்…” இது கோதை
“நேத்து லட்டர் தந்தேனே ஒன்னுமே
சொல்லல?”
கோதையின் தலை கவிழ்ந்தது.
பதிலேதும் பேசவில்லை…
மீண்டும் சில நிமிட மௌனம்
இருவருக்குள்ளும்.
மீண்டும் அவனே ஆரம்பித்தான்.
“கோதை… ஒனக்கு இஷ்டம்தானே?”
முகத்தை முற்றிலுமாக
ஜன்னலோரம் திருப்பிக்கொண்ட
ு “ம்ம்ம்…” என்றாள்.
“தேங்ஸ்”
“ம்ம்”
குரல் வெடுவெடுக்க, தயங்கித்
தயங்கி கேட்டான்
“கோதை எனக்கு ஒரு முத்தம்
கிடைக்குமா”
அவளின் மௌனம் பதிலானது.
அதற்கு சம்மதமென்பது கூட ஒரு
பொருள் தானே?
மிக மெதுவாகச் சென்ற மகிழுந்து
சாலையின் கரையில் நின்றது.
“கோதை…”
“ம்ம்ம்…”
அவள் திரும்பவே இல்லை
அவன் அமர்ந்தபடியே நகர்ந்து
அவளருகே சென்றான்.
“கோதை…”
அவள் தலை திரும்பவே இல்லை.
அவன் வலது கையால் அவள்
முகத்தை திருப்பினான்.
முகம் முழுக்க இயல்பிழந்திருந்தது.
பழுக்க வைத்த மாம்பழத்தின் மேல்
படிந்திருக்கும் நீர்த்துளிகள் போல்
அவள் முகம் முழுக்க வியர்த்திருந்தத
ு.
‘ப்ச்’ என்று அவள் கன்னத்தில் ஒரு
முத்தத்தை பதித்தான்.
அவள் இரு கைகளாலும் தன்
முகத்தை மூடிக்கொண்டாள்.
கோதையால் அதை முற்றிலுமாக
மறுக்கவும் இயலவில்லை ஏற்கவும்
முடியவில்லை..
அவன் கை அவள் தோள் பட்டையில்
ஊர்ந்தது. நெளிந்தாள் அவள்.
கை மெல்ல நகர்ந்து கழுத்துக்கு
வந்தது.
அவள் உடலெங்கும் காய்ச்சல்
வந்தார்போல் வெப்பமேறியது.
அவன் கைகள் கழுத்தைத் தாண்டி
கீழே வர எத்தனித்தது.
இவள் கையால் அவன் கையை
பற்றிக்கொண்டு சொன்னாள்,
“இதெல்லாம் கல்யாணத்துக்கு
பொறவு…”
அவன் கையை விடுவித்தான்,
நெருக்கமாக இருந்த அவளை விட்டு
சற்று நகர்ந்துகொண்டான்.
“நாம… கல்யாணம் பண்ணிக்கணுமா?
இளங்கோ கேட்டான்.
“…ப்ப்புரியல…”
“இல்ல… நாம கல்யாணம்
பண்ணணுமா…?
கோதைக்கு இறுக்கமான உடல் சற்று
தளர்ந்தது, வெட்கச் சலனம் சற்று
மாறியது, சில நொடி அமைதி…
கோதைக்கு சட்டென தூக்கிவாறி
போட்டது.
திடீரென துணிவு வந்தவளாய்
கேட்டாள்,
“அப்ப விரும்புறேன்னு சொன்னது
ஒங்களுக்கு கூத்தியாளா
இருக்கவா…?
பாக்குற எடத்துல கள்ளத்தனமா
படுக்கவா..?”
இளங்கோ பதிலேதும் பேசவில்லை.
அவன் தலை தானாகத் தொங்கியது.
கதவைத் திறந்து சட்டென
வெளியேறினாள்.
************
ஊரின் அருகே வந்துவிட்டாள்.
வெட்டவெளியில் பெருங்கூட்டத்தில்
தன் ஆடை அவிழ்ந்ததைப் போல
அவமானமாய் இருந்தது
கோதைக்கு.
அவளையே அறியாமல் ‘கிர்ர்ர்…ரென
காரி சாலையில் உமிழ்ந்தாள். முகம்
முழுக்க கோபமும், கண்கள் நிறைந்த
கண்ணீருமாய் வீடு வந்து
சேர்ந்தாள்…
மறுநாள் ஆலையின் வாசலில்
அத்தை கோதைக்காக
காத்திருந்தாள்.
சிற்றுந்து அவளின்றி வந்தது.
கோதை வரவே இல்லை.
ஆலையின் உள்ளேச் சென்றாள்.
இளங்கோ மிடுக்கான உடையணிந்து
நின்றுகொண்டிருந்தான்…

 

 

(முற்றும்)
அன்புடன் # செ_இன்பா

images

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தாயுள்ளம்..!!!

23531938_s

அதி நுட்பமாய் குளிரூட்டப்பட்ட சொகுசு அறையில், பஞ்சு மெத்தை கட்டிலில் படுத்துக்கொண்டே நவீன ரக அகன்ற தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான் நிலவன்.

திடீரென அந்த செய்தி BREAKING NEWS என்ற தலைப்பில் தொலைகாட்சித் திரையில் மின்னியது. “இன்று இரவு 12 மணிக்குப் பின் ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்கள் செல்லாது” என்றிருந்தது அந்த செய்தி.

நிலவனுக்கு உள்ளூர அதீத மகிழ்ச்சி, “என் தேசம் இனி முன்னேறிவிடும், “கறுப்புப் பணங்கள் இனி வெள்ளையாகும், அல்லது செல்லாக்காசாகும்” என மெய்சிலிர்த்தான், தனது மகிழ்ச்சியை வலைத்தளங்களில் பதிவு செய்தான், பிரதமரை புகழ்ந்து தள்ளினான்.

இந்த அறிவிப்பை எதிர்ப்பவர்கள் மீது வசை வார்த்தைகளை அள்ளித்தூவினான். தலை முடி முதல் அடி பாதம் வரை தேசபக்தியால் நிரம்பி வழிந்தான். திடீரென தன் கைபேசி அதிர்வோடு அலறியது. எடுத்து திரையை நோக்கினான். அவனது மனைவி யாழினி.

“மனுசனுக்கு புரட்சி’ங்குற பந்தம் கொளுந்துவிட்டு எரியுறத தண்ணீ ஊத்தி அணைக்குறதுக்காகவே பொண்டாட்டிங்குற ஒரு பந்தத்தை உருவாக்கியிருப்பானுக போல” என உள்ளூர அலுத்துக்கொண்டான்.

கைபேசி திரையில் பச்சை பொத்தானை தடவி “என்ன யாழு பேசி அரை மணி நேரம்தான் ஆகுது அதுக்குள்ள…” எதிர் முனையில் அழுகுரல் “ஏ யாழு என்னாச்சு? ஏன் அழற?”

“என்னங்க அத்த…”

“ஏ லூசு அம்மாக்கு என்னாச்சுடி? சொல்லித் தொல சோதன பண்ணாத…” என்று பதற ……

“என்னங்க அத்த நெஞ்சு வலியில துடிச்சுட்டாங்க. பக்கத்துல உங்க சித்தப்பாக்கு போன் பண்ணி கூப்பிட்டேன். வண்டி கூப்பிட போயிருக்காங்க… என்னங்க வண்டி வந்துருச்சு. நாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறோம், நீங்க உடனே கிளம்புங்க அப்பதான் காலையிலயாவது வர முடியும்…”

“சரி நான் ஒடனே கெளம்புறேன். நீ நம்ம ஊரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவாதே, 20 கிலோ மீட்டர்தான். திருநெல்வேலி பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ…”

“சரிங்க… கொஞ்சம் கழிச்சி போன் பண்ணுங்க நாங்க கெளம்புறோம்” படபடப்பாக சொல்லி அழைப்பை துண்டித்தாள் யாழினி.

நாலு சுவற்றுக்குள் என்ன செய்வதென அறியாமல் அலை மோதினான் நிலவன். சற்று நேரத்தில் முகமெல்லாம் வியர்த்தது… வெகு வேகமாக உடை மாற்றிக் கிளம்பினான்.

சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றினான் நிலவன். கைநிறைய ஊதியமும், அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி ஒரு வீடும் கொடுத்திருந்தது அந்நிறுவனம். நான்காவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக கீழே ஓடி வந்து சாலையோரமாக நின்று அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை கை காட்டி மறைத்தான்.

“எங்க சார் போணும்?” “கோயம்பேடு பஸ்டாண்ட்டுக்குங்க” “300 ரூபா ஆகும் சார்” “பரவாலங்க சீக்கிரம் போங்க” ஆட்டோ செல்லத் துவங்கியது.

“சார் சில்லறை இருக்குதுல்ல?” “இருங்க பாக்குறேன். தன்னிடமுள்ள பணத்தாள்களை சோதனை செய்தான். சில ஆயிரம் ரூபாய்த் தாள்களும், சில ஐநூறு ரூபாய்த்தாள்களும், மூன்று நூறு ரூபாய்த் தாள்களும் இருந்தன. “இருக்குங்க வேகமா போங்க. எங்கனயாவது ATM இருந்தா செத்த நிப்பாட்டுங்க”

“சார் தெரியாதா? ATM பூராத்தையும் பூட்டிட்டு பூட்டானுங்க பிராடு பசங்க”

“சரிங்க வேகமா போங்க” வியர்க்க விறுவிறுக்க சொன்னான், உடல் முழுக்க மெல்லிய நடுக்கம். தன் தாயின் முகம் கண்முன் வந்து வந்து மறைந்ததது.

மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது. “என்ன சொல்லு. ஆஸ்பத்திரிக்கு போயிட்டீங்களா?”

“ஆமாங்க டாக்டர் பாக்குறாங்க. என்னங்க சீக்கிரம் வந்திடுங்க எனக்கு பயமா இருக்கு…” மூக்கு சிந்த விசும்பினாள்.

“ஏ லூசு பயப்படாதேடி. நான் விடியகாலமே வந்துடுவேன். ஒன்னும் ஆகாது நீ எதுக்கும் கவலபடாத. சரி கையில காசு எவ்ளோ வச்சியிருக்க?”
“ஐயாயிரம் ரூவா இருக்குங்க, ATM card இருக்கு”

“ATM லாம் பூட்டிட்டானுவளாம், சரி ஒரு ராத்திரிதான சமாளிக்கலாம். பயப்படாத பஸ்டாண்டு வந்துருச்சு நா பொறவு பேசுதேன்” அழைப்பை துண்டித்து வேகமாக ஓடினான்.

ஏராளமான பேருந்துகள் நின்றன, ஜன நெருக்கடி வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. அனைத்து மக்களும் சிரிப்பை இழந்து ஒருவித நெருக்கடி நிலையிலேயே இருந்தனர். ஒரு பேருந்து தயாராக நின்றது.

பேருந்து படிக்கட்டில் நடத்துநர் நின்றுகொண்டிருந்தார். “சார் திருநெல்வேலிக்குதானே போவுது? “ஆமா சார் 900 ரூவா நூறு ரூவாயா இருந்தா வண்டியில ஏறுங்க” “ஏங்க 12 மணி வரை ஆயிரம், ஐநூறுலாம் செல்லும்தானே? மணி பத்துதானே ஆவுது…”

“சார் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார் எங்க மேலிடம் என்ன சொல்லுதோ அததானே நாங்க செய்ய முடியும்? இது பிரைவேட் வண்டி. கவருமெண்ட் வண்டியிலயே வாங்க மாட்டேங்றானுங்களாம்”

“என்னைக்குதான் இந்த நாடு திருந்த போவுதோ” என்று கூறி அடுத்த பேருந்துக்கு சென்றான். அங்கேயும் அதே பதில். ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கினான். அனைத்திலுமே ஒரே பதில். “நூறு ரூவா நோட்டு இருந்தா வண்டியில ஏறுங்க”

சுற்றிலும் பயணிகள், வாகணங்களின் பேரிறைச்சல், கரையோரம் கடைகள், ஜன்னலோர வியாபாரிகள் ஆயினும் நடுக்கடலில் துடுப்பிழந்த படகில் தனியாக சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தான் நிலவன்…

தன் கைபேசியில் இணையத்தை திறந்தான். தென்னக இரயில்கள் பட்டியலை நோக்கினான். நெல்லைக்கு செல்ல விவரம் கேட்டான். மாலை 5:30 க்கு திருக்குறள் 6:30 க்கு நிஜாமுதின் 7:30 அனந்தபுரி 9 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் என முடிந்துபோனது அந்த பட்டியல் மணி 10:10 ஆயிற்று. இனி இரயில் பயணமும் சாத்தியமில்லை. என்ன செய்வது? தனது கையறு நிலையறிந்து கலங்கினான்.

தன்  அன்னையின் மலர்ந்த முகம், உரக்கப் பேசும் குரல், தலையை கோதிய விரல்கள், தலை சாய்ந்த மடி என நெஞ்சில் நிறைந்த அனைத்தும் நினைவில் வந்து வந்து சென்றது. நடைமேடை இருக்கையிலொன்றில் அமர்ந்தான். என்ன செய்வது? யோசித்தான்.

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாய் தனது கைபேசியில் தனது தோழி விநோதா’வுக்கு அழைப்புவிடுத்தான். “சொல்டா நிலவா. என்ன இந்த நேரத்துல?”

“எங்க இருக்க இப்ப? ஒரு உதவி வேணும்.”

“குடும்பத்தோட திருப்பதி போனோம்டா. இப்ப வந்துட்டு இருக்கேன். என்ன விஷயம் சொல்லு…”

“இல்ல கார் வேணும். திடீர்னு அம்மாவுக்கு…” நடந்த அனைத்தையும் கூறினான். சிறிது பதட்டத்துடன் கூடிய கரிசனத்தோடு “டேய் கவலபடாதே. அநேகமா 12:30 க்குலாம் வந்துடுவேன்”

“ஓகே கோயம்பேடு பஸ்டாண்டுக்கு வா. நான் வெயிட் பண்றேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

“ஏலேய்… நெலவா… சீக்கிரம் வா மக்கா. அம்ம ஒனக்காக காத்துகெடக்கேன். சொந்த ஊருல பொழக்கிறவம்லாம் மனசன் இல்லயாலே?, இப்டி அசலூர்ல போயி கெடக்குறதுக்கா ஒன்னய அரும்பாடுபட்டு படிக்க வச்சேன்?” தன் அன்னை இறுதியாக பேசிய வார்த்தை இது.

திடீரென தன் கைபேசி அதிர்ந்தது. “என்ன யாழினி..?” தளர்ந்த குரலில் கேட்டான் நிலவன்.

“என்னங்க அத்தைக்கு மாரடைப்பாம். ICU ல வச்சிருக்காங்க. ஒடனே மருந்து மாத்திரைலாம் வாங்கணுமாம், 50 ஆயிரம் ரூவா ஆகுமாங்க…”

“சரி சரி பதட்டப்படாத. நீ போன டாக்டர்ட்ட கொடு நா பேசுதேன்”

“இருங்க ஒரு நிமிசம்” “ஹலோ சார் சொல்லுங்க” “சார் நான் நாளைக்கு காலையில வந்துருவேன், நான் இப்ப சென்னையில இருக்கேன் சார். நீங்க ட்ரீட்மென்ட்ட கன்டினிவ் பண்ணுங்க சார் நான் வந்து பணம் செட்டில் பண்றேன் “

“சார் ஐ கேன் அண்டர்ஸ்டன்ட். பட் என்னால ஒண்ணும் பண்ண முடியாது. கொஞ்சம் சிரமம் பாக்காம நண்பர்கள்ட்ட அரேஞ்ச் பண்ணுங்க”

“சார் உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க . நா மணி டிரான்ஸ்பர் பண்ணிடுறேன்”

“ஸ்யூர் சார். தேங்யூ.”

“சார் ஒண்ணு கேக்குறேன் தப்பா நெனக்காதீங்க. எங்கிட்ட நெட் பேங்கிங் வசதி இருக்கு, அதுல பணமும் இருக்கு. நா கொடுத்துட்டேன். இந்த வெவரம் தெரியாதவங்க, பணம் இல்லாதவங்க என்ன செய்வாங்க?” எதிர் னையில் பதிலேதுமில்லை. சில நொடிகள் கழித்து யாழினி பேசினாள்.

“ஏங்க டாக்டர்ட்ட என்ன பேசினீங்க?. அவரு மொகம் வாடி போறாரு..”

“பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நீ பயப்படாதே அம்மைக்கு ஒண்ணும் ஆவாது. நம்ம பொண்ணு எங்க இருக்கா?”

“தொட்டில்ல தூங்கிட்டு இருந்தா, ஒங்க சித்திய பாத்துகிட சொல்லிட்டு வந்தேன்”

“சரி நீ கவனமா இரு. என் மொபைல் சார்ஜ் கொறைவாதான் இருக்கு. ஒருவேள சுவிட்ச் ஆஃப் ஆனாலும் பயப்படாத வந்துடுவேன். அழாத.”

“சரிங்க நீங்க கவனமா வாங்க. எனக்கு இங்க இருக்குற ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப கஷ்டமா இருக்கு. சீக்கிரம் வாங்க.”

“சரி அழாத. கவனமா இரு” எனக்கூறி அழைப்பை துண்டித்தான். தனது பணப்பையில் செல்லும் காசு ஏதேனும் உள்ளதா என பரிசோதித்தான். பத்து ரூபாய்களில் சில இருந்தது. அருகிலிருந்த தேனீர் கடைக்கு சென்று ஒரு தேனீர் அருந்தினான். மீண்டும் அதே நடைமேடை இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“ஏட்ட யாழினி… ஆம்பள சூரியன் சுள்ளுனு குண்டியில சுடுற வரை ஒறங்குவான். பொட்டச்சி சூரியன் உதிக்குறதுக்கு முன்ன முழிக்கணும். செனம் வெளிய வா” உரக்கக் கத்தினாள் நிலவனின் தாய். “அடக்கோழி மாதிரி ஒம்போது மணி வர… பொட்டச்சி இப்டி ஒறங்குனா குடும்பம் வெளங்கிதான் போவும்” வாயில் வைத்து முனங்கியவாறே சென்றாள்.

“என்னங்க ஒங்க அம்மய பாருங்க. புதுசா கல்யாணமான சின்னஞ் சிறிசுகங்குற இங்கிதம் கூட தெரியல”

“சரி சரி விடு பெருசுக அப்டிதான், நாமதான் சமாளிக்கணும்” “வுடுங்க என்னய. ஒங்க அம்மய நீங்க வுட்டு கொடுக்கவா செய்வீங்க” நிலவனின் இறுக்கமான அணைப்பிலிருந்து விடுபட்டு இரு உடலையும் மூடியிருந்த போர்வையை இழுத்து, எறிந்து, எழுந்து உடையணிந்தாள் யாழினி. என்றோ நடந்தது நினைவில் வந்தது நிலவனுக்கு.

“லேய் நெலவா நீ கோடி ரூவா சம்பாதிச்சாலும் சிக்கனமா இல்லேனா பத்து பைசா சில்லற கூட தங்காது. ஒம்பொண்டாட்டிக்கு வாரத்துக்கு மூனு சீல, சாப்பாட்டுக்கு திருநெல்வேலி பெரிய ஓட்டலுன்னு செலவு பண்ணா நீ மெட்ராசுல இல்ல அமெரிக்காவுக்கே போயி சம்பாரிச்சாலும் போதாது. புள்ள உண்டாயி மூணு மாசங்கூட ஆவல. புள்ளய பைக்குல ஏத்திகிட்டு ஊரு ஊரா அலையுதான் போக்கத்தப்பய” நிலவனின் தாய் சொல்ல சொல்ல யாழினி முகம் கோபத்தில் சிவந்தது. படபடவென வேகமாக சென்று கதவை படாரென அடைத்தபடி தன் அறையின் உள் சென்று படுத்துக்கொண்டாள்.

திடீரென கைபேசி ஒலித்தது. நினைவுக்கு வந்தான் நிலவன். “விநோதா எங்க இருக்க?”

“வெளியே வா. என்ட்ரன்ஸ்ல நிக்குறேன்” வேகமாக சென்றான்.

விநோதாவும் அவள் தந்தையும் இவன் வருகைக்காக காத்து நின்றனர். “டேய் டோன்ட் ஃபீல்டா. அம்மாவுக்கு எதுவும் ஆகாது மெதுவா கவனமா போ. நானும் வேணும்னா கூட வரவாடா?”

“இல்ல விநோதா நா பாத்துக்குறேன். அங்கிள் நா உங்கள வீட்ல டிராப் பண்ணிட்டு போகவா?”

“இல்லப்பா நாங்க போயிடுவோம். மணி இப்பவே ஒண்ணாயிடுச்சு நீ கவனமா போயிட்டு வா. பெட்ரோல் டேங் ஃபுல் பண்ணிட்டேன். சோ நத்திங்ட்டு வொர்ரி.”

“சரிங்க அங்கிள், தேங்ஸ் விநோதா. பை” “டேய் லூசு அம்மாவுக்கு எதுவும் ஆகாதுடா. இப்பதான் எல்லாமே ஓகேதானே. அப்புறமும் ஏன் உர்ருனு இருக்குற?” விநோதா கேட்டாள்.

“இல்ல எனக்கு உதவி செய்ய நீ இருக்குற. உதவி கிடைக்காத ஆயிரம் பேர் இன்னும் அந்த பிளாட்பாம்லயே இருக்காங்க. அதுல என்னய போல நெலமயில உள்ளவங்க எத்தன பேரோ…” பெருமூச்சு விட்டான் நிலவன்..

விநோதாவின் கண்கள் லேசாக கலங்கியது… “கண்களை துடைத்துக்கொண்டாள். “எத பத்தியும் நெனக்காம பத்திரமா போயிட்டு வா. டேக் கேர்டா நிலவா”

“பை” சொல்லி புறப்பட்டான். மகிழுந்து தாம்பரம் தாண்டி சென்றது. வேகம் நூறு கிலோ மீட்டரை தொட்டுச் சென்றது.

பழைய நினைவுகளுக்குள் மீண்டும் சென்றான்.

“எம்மோ ஒரு மனுசன் வேலைக்கு போயிட்டு வூட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கணும். ஒண்ணு நீ நொய்யி நொய்யிங்குற, இல்லேனா யாழினி நொய்யுங்குறா. ஒங்க ரெண்டு பேருகிட்ட மாட்டிகிட்டு நாந்தான் மத்தளம் மாதிரி அடிவாங்குறேன்”

“ஒனக்கு ஒம்போது வயசு இருக்கும். ஒங்க அப்பன் யாவாரத்துக்கு போன எடத்துல ஒருத்திகிட்ட பழகிட்டு அவா கூடயே போயிட்டான். போனா போறான் எனக்கு எம்புள்ள இருக்கான்னு, காடு காடா அலஞ்சி கருப்பட்டி வித்து, கஞ்சி குடிச்சும் குடியாமலும் ஒன்னய வளத்தேன். பவுசா படிக்க வச்சி பக்குவமா பொண்ணு கட்டி வச்சதுக்கு நீ நல்ல அழகான வார்த்தய கேட்டுபுட்ட மக்கா…” ராகம் இழுத்தாள் நிலவனின் தாய் கண்களில் கண்ணீர் பொங்க…”

சில நாட்கள் சென்றது மீண்டும் முனுமுனுத்தாள் நிலவனின் தாய். “ஏலேய் ஒழுங்கு மரிவாதையா ஒம்பொண்டாட்டிகிட்ட சொல்லிபுடு. இங்க இருந்தா காலையில முத்தத்துல சாணி தொளிக்குறதுல இருந்து வூட்டுல சோறு கறி பொங்குறது வர எல்லாத்தையும் அவாதான் செய்யணும். என்னால செய்ய முடியும் ஆனா நான் செய்ய மாட்டேன்.”

“எம்மோ அவா அவுக வூட்டுல வளந்த விதம் அப்புடி. எந்த வேலையும் செய்யாமலே வளந்துட்டா. நீதாம்மோ கொஞ்சம் அணுசரிச்சு போவணும்.”

“என்னங்க யாரும் எங்கிட்ட அனுசரிச்சு போவாண்டாம். என் தலையெழுத்து உங்க அம்மகிட்ட கெடந்து சாவணும்னு இருக்கு. விதிப்படி நடக்கட்டும் விடுங்க…” யாழினி கோபம் கொப்பளிக்க சொன்னாள்.

வேகமாக ஓடிச்சென்று யாழினியின் தலைமுடியை பிடித்து “ஏ செறிக்கியுள்ளா நானென்ன அரக்கியா? நா ஒன்னய இங்க கொல்லயா செய்யுதேன்?” வலி தாளாமல் ஓ…வென அழுதாள் யாழினி.

“எம்மோ என்ன காரியம் பண்ணுதா.. வாயும் வயிறுமா இருக்குற புள்ளய போயி… விடு கைய…” என பிடித்து இழுத்தான். நிலவனின் தாயார் தடுமாறி கீழே விழுந்தாள்…

“இனி இது வேலைக்கு ஆகாது. நா அவள அவிய அம்ம வூட்ல கொண்டு விட்டுட்டு மெட்ராஸுக்கு போறேன். இனி வரமாட்டேன்.”

“போ நா செத்தாலும் என் மூஞ்சியில முழிக்காத போயிடு…”

வானம் விடிந்தும் விடியாமல் காணப்பட்டது. மகிழுந்து திருச்சியைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. சாலையோரக் கடையொன்றின் முன் வாகனத்தை நிறுத்தி, ஒரு தேனீர் அருந்தினான். நேரம் காலை 6 மணியை கடந்திருந்தது. கைபேசியை பார்த்தான். அது உயிரற்று செயலிழந்து கிடந்தது. மீண்டும் மகிழுந்தை கிளப்பினான். பழைய நினைவுகள் மீண்டும் நிலவனை ஆட்கொண்டது.

சரியாக மூன்று நாட்கள்தான் ஆகிறது. யாழினியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “என்ன சொல்லு மா. கொழந்த என்ன பண்றா? பால் ஒழுங்கா குடிக்குறாளா?”.

“அதெல்லாம் ஒழுங்காத்தாங்க குடிக்குறா. ஒரு முக்கியமான விசயம்”

“என்ன சொல்லு” “இன்னைக்கு ஒங்க அம்ம எங்க வீட்டுக்கு வந்தாவ”

தூக்கி வாறி போட்டது நிலவனுக்கு… “என்ன சொன்னா? ஏதாவது சண்டையா?” “ச்சே ச்சே இல்லீங்க. எங்க வூட்டுக்குள்ள வரும் போதே ஒரு மாதிரி கூசியேதான் வந்தாவ.. ‘எம்மறுமொவா இருக்காளா?’னு கேட்டாவ… நான் இதுக்கு முன்ன அவியல இப்டி பாத்ததே இல்லீங்க. என் மனசெல்லாம் உருகி போச்சு…”

“என்னடி சொல்லுத என் கண்ணுலாம் கலங்குதுடி, எதுக்கும் அஞ்சாத, எவனுக்கும் பணியாத எங்க அம்மயா ஒங்க வீடு தேடி வந்தா…?”

“ஆமாங்க. இருக்க வச்சி ஒரு தம்ளாருல மொர் கொடுத்தேன்.” ‘எம்மா நான் சின்ன வயசுலேருந்தே யாருக்கும் தலகுணியாம வாழ்ந்துட்டேம்மா. ஆனால் நா பெத்த மக்ககிட்ட என் வீம்பு, பிடிவாதம்லாம் செல்லாக்காசாயி போச்சும்மா, நான் உன்னய காத்தால எந்திரிக்க சொன்னது ஒங்க ஆசாபாசத்த கெடுக்க இல்லமா. பொம்பள விடியுமுன்ன எந்திரிக்கணும். அப்பதான் வூடு முழிப்பா இருக்கும், நான் உன்னய சீல எடுத்ததுக்கு சத்தம் போ்ட்டேன். ஏன்னா நம்ம குடும்பத்தோட வேர் நீ. ஒனக்கு சிக்கனம்னா என்னனு தெரியணும்னுதான். நீ திருநெல்வேலி ஓட்டல்ல போயி சாப்டத நான் குத்தம் சொல்லலமா வயித்துல ரெண்டு மாச புள்ளய வச்சிகிட்டு பைக்குல அலைஞ்சா கரு கலஞ்சு போவும், எனக்கு நெலவன் பொறக்குறதுக்கு முன்ன மூனு பிள்ள கருவுலயே கலஞ்சி போச்சு…”
‘காட்டு வேல செஞ்ச எனக்கு வூட்டு வேல பெரிய கஷ்டம் இல்லம்மா. ஆனா ஒனக்கு வயித்துல ஆறாவது மாசம். அந்த நேரத்துல நல்லா குனிஞ்சு நிமிந்து வேலை செய்யணும் மக்கா அப்பதான் சொகமா புள்ள பொறக்கும். அது மட்டும் இல்லாம நான் இருக்க வர இதெல்லாம் நா பாக்குறேன். எனக்கு முன்னாள மாதிரி ஒடலுக்கு வாக்கா இல்ல. எப்ப வேணாலும் போயிருவேன் போலதான் இருக்கேன். எனக்கு பொறவு நீதான மக்கா இந்த குடும்பத்த பாக்கணும்? ஆனா உன் கொண்ட முடிய பிடிச்சது எந்தப்புதான். ஆனா உன்னய எம்மவ மாதிரி நெனச்சிதாம்மா அவசரப்பட்டுட்டேன்.” ஒங்க அம்ம உன் முடிய பிடிச்சி இழுத்தா பொறுத்துக்குவல்லா மக்கா… னு அழ ஆரம்பிச்சுட்டாங்க… யாழினி விழிகள் நிறைந்து கண்ணீரினால்.

“அத்த அதெல்லாம் ஒண்ணும் இல்லத்த. நீங்க அழாதீங்க.. இருங்க ஒங்க பேத்திய எடுத்துட்டு வாரேன்னு பிள்ளய எடுத்து கையில கொடுத்தேங்க, பிள்ள கையில வச்சிகிட்டு ‘என்னய மாதிரியே இருக்கியே’னு ஆச தீர முத்தம் கொடுத்தாவ, தேம்பி தேம்பி அழுதாவ. அந்த ரெத்த பாசத்துக்கு சரிசமமா இந்த ஒலகத்துல எதுவுமே இல்லங்க” “நிலவனுக்கு வார்த்தை வரவில்லை.

தழுதழுத்த குரலில் சொன்னான். “சரி நீ நாளைக்கே பிள்ளைய தூக்கிட்டு நம்ம வூட்டுக்கு போயிடு…” “சரிங்க” என அழைப்பை துண்டித்தாள்… மகிழுந்து கோவில்பட்டியை தாண்டி சென்றுகொண்டிருந்தது…

“எங்க அம்மைக்கு எதுவும் ஆகாது.” என முழு நம்பிக்கை இருந்தாலும் செருப்பிலேறிய முள் போல் குத்திக்கொண்டே இருந்தது நிலவனுக்கு.

மகிழுந்து நெல்லை மாநகருக்குள் வந்தது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சுக்குள் படார் படாரென அடிப்பது போலிருந்தது. மருத்துவமனையை நெருங்கினான். தன் சொந்தத்தினர் சில மருத்துவமனை வராண்டாவில் நிற்பதை கண்டான். வேகமாக மகிழுந்தை விட்டு கீழிறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தான். அங்கே யாழினி அழுதுகொண்டிருந்தாள்… நிலவனை பார்த்தவுடன் .. அழுகைச் சத்தம் அதிகமானது… நிலவன் புரிந்துகொண்டான். கண்ணாடிக் குடுவைக்குள் மீனைப் போல கண்கள் கண்ணீரினால் சூழப்பட்டிருந்தது. கைகுட்டையினால் துடைத்துக்கொண்டான்.

இறுதி சடங்கு முடிந்தது. இரவாயிற்று. குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது, நிலவன் கட்டிலில் அமர்ந்திருந்தான், யாழினி நிலவன் மடியில் தலைசாய்த்து விசும்பிக் கொண்டிருந்தாள். “யாழு… யாழு குட்டி ஏன்டா அழுற. அம்மைக்கு நல்ல சாக்காலம்டி. எத்தன பேரு வருசக் கணக்குல இழுத்துகிட்டு கெடக்குதாவ. அம்மைக்கு எந்த கஷ்டமும் இல்லாம கடவுள் எடுத்துகிட்டாரு. அம்மயோட ஒரே ஆச நாம நல்லாயிருக்கணும்னுதான். நாம நல்லாதான இருக்கோம்?” யாழினி மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்து இறுக அணைத்தாள்.

அழுதுகொண்டே சொன்னாள். “காலையில அஞ்சி மணியில இருந்தே அத்தைக்கு இழுத்துகிட்டே இருந்துச்சு, நெலவன பாக்கணும், நெலவன பாக்கணும்னு சொல்லிகிட்டே இருந்தாவ. கடைசி வரைக்கும் பாக்காமலே போயிட்டாவளே…” என அழுதாள்.

மருத்துவமனையிலும், இறுதிச் சடங்கிலும் ஆம்பள அழக்கூடாது என கர்வத்தோடு இருந்த நிலவன் அந்த சிறு அறையில் பெரும் சத்தத்தோடு கதறி அழுதான்…

அன்புடன்

செ_இன்பா
 

விதை

vithaigal-nam-kaiyil-irukkattum

 

சுற்றிலும் புத்தகங்களால் சூழப்பட்ட ஒரு
அறையினுள் நாற்காலியில் அமர்ந்திருந்தான்,
புத்தகத்தை பிடித்திருந்த தன் இரு கைகளையும் மேசை
தாங்கிக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு
ஆங்கிலப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான், அதே
மேசையின் மீதிருந்த தொலைப்பேசி
திடீரென சிணுங்கியது…
ச்சே எதையாவது ஆர்வமா படிக்குறப்பதான்
இந்த போன் எழவு வேற வந்து தொலயுது.
“வணக்கம் விவேகன் நீங்க யாருங்க?”
“டேய் நான் அக்கா பேசுறேன்டா”
“என்ன சொல்லு” சற்றே எரிச்சல்
காட்டினான்
“டேய் இப்ப ஏன்டா பொங்குற? ஒரு
சந்தோஷமான செய்தி
சொல்லலாம்னு போன் பண்ணா
ரொம்பதான் பிகு பண்ற”
“அம்மா தாயே
சொல்லித்தொல”
“டேய் விவேகா அத்தான் இப்பதான்டா போன்
பண்ணாரு. இந்த வருசத்துக்கான சிறந்த
சமூக ஆர்வலர் விருது உனக்கு அறிவிச்சிருக்கா
ங்களாம்டா” நாற்பத்தேழு வயதாகிவிட்ட
பின்பும் தன் தம்பியிடம் குழந்தை போன்று
கொஞ்சிப் பேசினாள்.
“அக்கா அதுவா அது நேத்தைக்கே
தெரியும்க்கா.”
“அடக்கிராதகா உன் மொத்த
ரியாக்சனே இவ்ளோதானா?, ஓகே டைம் கிடைக்கும்
போது வீட்டுப் பக்கம் வந்துட்டு போ மூதேவி”
எனக்கூறி தொலைப்பேசியை வைத்தாள்.
விவேகன் புத்தகத்தை மூடினான். தன் மூக்குக்
கண்ணாடியை கழட்டி மேசையின் மீது வைத்தான்.
விழிகளில் நிறைந்து நின்ற நீரை இரு விரல்களால்
அழுத்தி கன்னத்தில் வடிய விட்டு பின்பு துடைத்துக்
கொண்டான், ஆழி சூழ் உலகைப்போல
இருள் சூழ்ந்த எனது வாழ்வில் இந்த
விருதுகளா ஒளி கொடுத்துவிடப்
போகிறது? என சலித்துக்கொண்டான்.
நீரிருந்தும், சத்துமிக்க மண்ணிருந்தும்
பக்கவாட்டில் சிறு புல் கூட இல்லா தனி
மரமாய் இன்று நிற்க காரணம் யார்?
யார் செய்த தவறு? உதிரும் மயிருக்குக் கூட
எண்ணை தேய்த்து வாரி வகுடெடுக்கும்
இந்த மனிதப் பிறவிகள் தன் சக உயிருக்கு
மதிப்பளிப்பதில்லையே? எத்தனை உயிரை
கொன்றாவது தன் பசிக்கு புசிக்க
துடிக்கும் இந்த மனுசசாதியை சாடுவதா?
அல்லது இந்த சாதியை படைத்த சாமியை
சாடுவதா? மனதிற்குள் பல கேள்விக்கனைகளோடு
தன் கடந்த காலத்திற்கு தன் மூளையை
தவழவிட்டான்…
சரியாக 25 ஆண்டுகளுக்கு; முன்பு வளம்
நிறைந்த ஒரு ஊர், உழைத்து வாழும் மக்கள்,
அப்பகுதியை சுற்றியிருக்கும் பச்சை
வயல்வெளியை
இச்சைகொள்ளாதோர் இல்லை எனலாம்
அவ்வளவு எழில் நிறைந்த பகுதியது.
துள்ளித்திரிந்தாடும் வளரிளம் வயதில் படிப்பை
முடித்து பூரணப் பொறியாளனாக
அவ்வூரில் அமைந்திருக்கும்
தொழிற்சாலைக்கு பணிபுரிய
வந்திருந்தான் விவேகன்.
தொழிற்சாலையில் தங்கும் வசதி
கிடையாது என்பதைவிட, அது கூடாது என்பதே
உண்மை. ஊழியர் ஒருவரின் உதவியுடன் அந்த
ஊரின் மையப்பகுதியிலேயே ஒரு வீடு வாடகைக்கு
கிடைத்தது.
முதன்முதலாக தன் வீட்டைவிட்டு
வேறொரு இடம், அதுவும் தனது பழக்க
வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடான
இடம். தனக்கு சற்றும் ஒத்துவராத அதிகாலை
விழிப்பு, விடுதி உணவு என கண்ணைக் கட்டி
காட்டில் விட்டாற்போன்று ஒருவாரம்
தள்ளிவிட்டான். தன் வாழ்விடத்தை விட்டு
இடம்பெயர்ந்த அகதியைப்போல ஒரு உணர்வு.
ஏதோ பாலைவனத்தில் அகப்பட்டது போன்ற ஒரு
அச்சம்.
இது சரிபடாது அப்பாவுக்கு லெட்டர்
எழுதிட வேண்டியதுதான். என வேகவேகமாக
“அப்பா என்னால இங்க இருக்க முடியாது
நான் வீட்டுக்கே வந்துடறேன்” என்ற
பொருள்படும்படியான ஒரு கடிதத்தை
எழுதி தன் அறையைவிட்டு வெளியே வந்தான்.
இந்த ஊர்ல போஸ்ட் ஆஃபிஸ் எங்கனு
தெரியலயே என பேந்த பேந்த விழித்தவாரே
வாசலை விட்டு இறங்கினான். தன் எதிர்
வீட்டிற்கு இடது புற வீட்டு வாசலில் ஒரு கிழவி
அமர்ந்திருந்தாள். அருகினில்
சென்றான்.

“பாட்டி இந்த ஊர்ல போஸ்ட்
ஆஃபிஸ் எங்க இருக்கு?” கிழவி வெற்றிலையை
இடித்தவாறே அமைதியாக தெரியாது
என்ற பாவனையில் கையை அசைத்தாள்.

“ஒருவேளை
இங்கிலீஸ் தெரியாதா இருக்குமோ!,
பாட்டி இங்க தபால் நிலையம் எங்க இருக்கு?”
பாட்டியிடம் பதில் இல்லை. வெற்றிலை
இடிப்பதில் மும்முரம் காட்டினாள். பாட்டியின்
தோளை தட்டியவாறே “பாட்டி……” என்ற
மாத்திரத்தில் “ஏல போல தூர உலக்கயால
அடிச்சி கொன்னுபுடுவேன்” சற்றே
தடுமாறி பின்வாங்கியத் தருணம்
வீட்டினுள்ளிருந்து ஒரு சிரிப்புச் சத்தம்.
யார்ரா அது என எட்டிப் பார்த்தான்.
வெங்காய வண்ண தாவனி, சந்தன
வண்ண பாவாடையில் பச்சை இலைகளும், சிவப்பு
பூக்களுமான வடிவமைப்பு, காதில் தங்க
வளையம், வட்ட வடிவ முகம், ஆங்காங்கே
பருக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட முகம். அவள்
கருவிழி அவனை ஏறெடுத்துப் பார்த்தது.
வடிவான இந்த இதழிலிலிருந்து வார்த்தை
வெளியேறியது “எங்க பாட்டிக்கு காது
கேக்காது”
“உங்க ஊர்ல காது கேக்கலேனா
உலக்கையால அடிக்க வருவாங்களா?”
வெடித்து வந்த சிரிப்பை அடக்க தன் வாயை
மூடிக்கொண்டாள்.
“உங்களுக்கு போஸ்ட் ஆபீசுதான போணும்?
பசாருக்கு போங்க பக்கத்துலதான் இருக்கு.”
“சரிங்க” என்றவாறே நகர்ந்தான். மீண்டும்
அதே சிரிப்பு அவளிமிருந்து…
விவேகனின் கால்கள் முன்னால் நகரநகர
மனம் மட்டும் அவ்விடத்திலேயே ஐக்கியமானது.
குல தெய்வ கோவிலைத் தாண்டி
செல்லும்போது திரும்பிப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வதைப் போன்று
அவள் வீட்டைத் தாண்டும் ஒவ்வொரு
முறையும் திரும்பி பார்த்தே சென்றான். சில
முறை அவள் தென்படுவாள், சிலமுறை அந்த
கிழவி தென்படுவாள், சிலமுறை அவள்
தாயார் தென்படுவாள், சிலமுறை அவள்
அண்ணன் தென்படுவான். சில முறை
இவ்விருவர் விழிகளும் நேருக்கு நேர்
சந்தித்துக்கொள்ளும். சந்திக்கும்
சொர்ப்ப நொடிகளில்
அர்ப்பமாக ஒரு புன்னகையை விவேகன்
உதிர்ப்பான். இலக்கியா முகத்தில் எந்த
வேறுபாடுமிராது. ஆனால் உள்ளூர
மிகையாகவே சிரித்துக்கொள்வாள்.
எப்போதையும் விட சீக்கிரமாகவே விழிக்கத்
துவங்கினான், எப்போதையும்விட நேரம் கழித்தே
உறங்கச் சென்றான், எந்நேரமும் வாசலே
கதியென்றானான்.

எப்போதாவது
அத்திப்பூத்தார்ப் போன்று இலக்கியா அவள்
வீட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்து
சட்டென மறைந்து செல்வாள். தமிழ்
சினிமாவின் ஒட்டுமொத்த டூயட்
பாடல்களின் காட்சியில் இலக்கியாவோடு
நடனமாடினான், கவிதை எழுதுகிறேன் என்று
எதைஎதையோ கிறுக்கி ஏறத்தாழ கிறுக்கனாகிவிட்
டான், உடன் பணிபுரியும் நண்பரிடம்
அன்றாடம் நடைபெறும் அத்தியாவசிய
பார்வைகளை பகிர்ந்து பெரும்பாவச்
செயலுக்கு ஆட்பட்டான், கத்தியோ, சவரப்
பிளேடோ ஏதுமின்றி அவளையே
சொல்லிச்சொல்லி நண்பனை
கழுத்தறுத்தான். எப்போது
உறங்குவானென்று அவனுக்கே
தெரியாது, ஆனால் உலகமே
அழிந்தாலும் அதிகாலை ஐந்து மனிக்கு
விழித்துவிடுவான் காரணம் அவள் கோலமிட
வருவதை கவனிக்க…
அவர் தந்தையிடமிருந்து “மகனே நீ கஷ்டப்படாதே
உடனடியாக கிளம்பி வந்துவிடு” என மடல்
வந்தது” பதில் கடிதம் எழுதினான். “அப்பா
இங்கு எனக்கு இப்போது எந்த குறையுமில்லை, பல
நண்பர்கள் பரிச்சயப்பட்டுவிட்டனர், உணவு
பழகிவிட்டது, என் மனம் கவர்ந்த பலர்
இங்குள்ளனர், என்னைப் பற்றி
கவலைகொள்ளாதீர்கள், நான் சில
நாட்கள் கழித்து வருகிறேன்”
ஒருநாள் உலக அனுமாஸ்ய சக்திகள்
அனைத்தையும் துணைக்கழைத்து ஒரு கடிதத்தை
எழுதினான்.

“நான் உன்னை
அளவுக்கதிகமாக விரும்புகிறேன். என்
மனைவியாக நீ வரவேண்டுமென
ஆவல்கொள்கிறேன்” இடையிடையே எவனோ
எழுதிய கவிதைகளை
இணைத்துக்கொண்டான். கடிதத்தை
எழுதிவிட்டு உறக்கம் வரவில்லை. மனி 2, 3, 4
இந்த கருமம் புடிச்ச நேரம் வேற நகரமாட்டேங்குதே
… குளித்தான், இருப்பதிலேயே நல்ல
உடையொன்றை
அணிந்துகொண்டான், பவுடரை
அள்ளிப் பூசிக்கொண்டான். நடிகர்
ராமராஜனைப்போன்று காட்சியளித்தான்.
மனி ஐந்தாயிற்று… இன்னும் அரைமனி
நேரம்தான். நெஞ்சு படபடத்தது.
கைகால்கள் மெல்லிய நடுக்கம்
கொடுத்தது. மணி 5:20 இன்னும் பத்தே
நிமிடம்தான். பூச்சி, பூனை, பச்சி, பறுந்து என
அனைத்து சீவராசிகளும் குளிருக்கு
முடங்கிகிடக்கும் அந்த நேரத்தில் அவனுக்கு
வியர்த்து விழியத் துவங்கியது… திருவரங்கம்
சொர்க்க வாசல் திறந்து
நாராயணர் காட்சியளிப்பது போன்று கையில்
விளக்குமாறும், ஒரு பானையில் நீரோடும்
வெளியில் வந்தாள். மேடையேறி மைக்கை பிடித்து
பேச திராணியின்றி தினரும் சிறுபிள்ளையைப் போன்று
செய்வதறியாது அவளையே பார்த்து
நின்றான். அவள் கையில் விளக்குமாறோடு
இவனை முறைத்துப் பார்த்தாள்.
அவ்வளவுதான் அச்சத்தின் உச்சிக்கு
சென்று திரும்பிக்கொண்டான்.
சில நொடிகள் அனைத்து கடவுளையும்
துணைக்கழைத்து அவளை நோக்கிச் சென்றான்.
அவள் இவன் வருகையில் சற்று நிலைகுலைந்துதான்
போனாள். பத்தடி தூரத்தில் நின்று கடிதத்தை எட்டி
வீசினான். காண்டாமிருகம் வாயில்
அகப்பட்டு தப்பிவிட்டதைப்போல் விருட்டென்று
வீட்டிற்குள் சென்றுவிட்டான்…
விட்டிற்குள் சென்று ஒரு குவளை நீர்
பருகினான். அசுர பலத்துடன் உள்ள எதிரி
நாட்டை போர் புரிந்து வெற்றுவிட்ட வீரனைப்
போல இறுமாந்தான். சில நிமிடங்கள் கழித்தது.
பதட்டத்துடனே வெளியில் வந்தான்.
அவள் ஏதொரு சலனமுமின்றி அதை
இடத்தில் கோலமிட்டுக்கொண்
டிருந்தாள். ஆனால் அவன் வீசியெறிந்த
இடத்தில் கடிதம் இல்லை. கோலத்தை முடித்து ஒரு
கனிவுப் பார்வையுடனேயே வீட்டிற்குள்
சென்றாள் இலக்கியா…
மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்குள்
அனுப்பிவிட்டு பதட்டத்துடன் காத்திருக்கும்
கணவனைப் போல எதிர்பாத்திருந்தான்
இலக்கியாவின் பதிலுக்காக. மறுநாள்
அதிகாலை அதே நேரம். வழக்கம் போலவே
வந்தாள், முற்றத்தை சுத்தம் செய்தாள்,
சாணம் தெளித்தாள், கோலமிட்டாள்.
விவேகன் பதட்டத்துடன் பரிதாபமாக
வெறித்துக்கொண்டிருந்தான்.
இறுதியில் சிறிய காகிதமொன்றை
அவனைப் போலவே வீசியெறிந்து
சென்றாள் விசீகரச் சிரிப்புடன்…
வேகமாக கடிதத்தை கைப்பற்றினான். வீட்டிற்குள்
சென்றான். கடிதத்தை பிரித்தான்.

ஒரே
வரி “சம்மதம்”
பாவப்பட்ட பாமரனுக்கு கோடி ரூபாய்
லாட்டரி விழுந்ததைப் போன்று மகிழ்ச்சியில் துள்ளிக்
குதித்தான். காதல் பார்வையோடும்,
புன்னைகையோடும், கடிதங்களோடும் பயணித்தது.
நாட்கள் சில சென்றது, அருகருகே வீடு,
பேசும் ஆவலில் இரவு ஊரடங்கிய பின்பு வீட்டின்
பின்புறத்தில் சந்தித்தனர். பல நாட்கள் சில
பல முத்தங்களோடு காதல் இனித்தது.
அப்படியொரு தருணத்தில் மாட்டுக்கு
தண்ணீர் வைக்கும் தொட்டி கவிழ்த்து
வைக்கப்பட்டிருந்ததின் மேல் இருவரும்
அமர்ந்திருந்தனர், விவேகனின் மார்மீது
இலக்கியாவின் முகம் பதிந்திருந்தது. பத்து
விரல்களும் பின்னிக்கொண்டிருந்தது.
ஏதோ இயற்கை உபாதைக்காக பின்புறம் வந்த
இலக்கியாவின் தாய் கண்டு அதிர்ந்து
நின்றாள். இலக்கியாவின் கன்னத்தில்
பளாரென்று இரண்டு அடி
கொடுத்தாள். “வீட்டுக்குள்ள போ கழுத”
இலக்கியா அழுதுகொண்டே
வீட்டிற்குள் சென்றாள்…
விவேகன் செய்வதறியாது திகைத்து
நின்றான்.
இலக்கியாவின் தாய் முகத்தில்
கொப்பளிக்கும் கோபம், கண்களில்
கண்ணீர் பெருகி நின்றது..
“எய்யா உன்னய நல்ல பையன்னு
நெனச்சிருந்தே இப்டி பண்ணிட்டேய்யா.
ஒங்க வூட்டுக்குள்ள எவனாவது இப்டி வந்தா
நீ சும்மா வுடுவியா? எனக்கு புருசன் இல்ல.
ரெண்டு பிள்ளையளையும் வச்சிகிட்டு இந்த
ஆடுமாட்டையும் வச்சி கஞ்சி குடிச்சிட்டுருக்கோம்.
ஊருகாரி எவளுக்காவது இது
தெரிஞ்சா நாங்க மூனுவேரும்
நாண்டுகிட்டுதாம்யா சாவணும். எய்யா
உன் கால்ல வேணும்னாலும் விழுறேன் நீ
நல்லாருப்பா நாளைக்கு ஒங்க ஊருக்கு
போயிருய்யா.”
விவேகனுக்கு எங்கிருந்து அத்தனை துணிவு வந்ததோ
தெரியவில்லை
“ஏங்க இப்டி பேசுறீங்க? உங்க மகளும் நானும்
மனசார விரும்புறோம், எனக்கு அம்மா இல்ல
அப்பா மட்டும்தான், அக்காவும், நானும்
தான் எங்க வீட்ல, சொந்தமா
எங்களுக்கு வீடு இருக்கு, நான் படிச்சிருக்கேன்.
உங்க மகளை கொடுங்க நான்
பாத்துக்குறேன்.”
“வேண்டாப்பு. எங்க சாதிசனத்துல அது
பழக்கமில்ல, உனக்கு இன்னைக்கு கெட்டி
கொடுத்தேம்னா நாளைக்கு எம்
பையனுக்கு எவளும் பொண்ணு
கொடுக்க மாட்டாளுவ. ஐயா உன்
கால்ல விழுறேன் நீ போயிரு…” என விவேகனின்
காலில் விழுந்தவளை சட்டென நகர்ந்து
அமர்ந்துவிட்டான் விவேகன்.
“நான் ஊருக்கு போயிடுறேம்மா.
தயவுசெய்து நீங்க கால்ல
விழாதீங்க…”
என அழுதான், நடைபிணமாக வீட்டிற்குள்
வந்தான்
தன் உறவுகள், செல்வம், படைபலம்,, உடல்
பலம், உடை, உடமை என அனைத்தையும் ஒருசேர
இழந்ததைப்போன்று அதிர்ந்து நின்றான்.
செய்வதறியாது பித்துபிடித்ததைப் போல
பரிதாபமாய் இருந்தான், மிகுந்த சிரமப்பட்டு
உயரமான மலைக்கு கயிறு பிடித்து ஏறி உச்சிக்கு
சென்று கை நழுவி அதளபாதாளத்தில்
விழுந்ததைப் போன்று துயரமாக இருந்தான்.
அதிகாலை மனி நான்கு இருக்கும் ஆழ்ந்த
நிசப்தத்தில் வீட்டுக் கதவு மெதுவாக
திறப்பது போன்ற ஒரு சப்தம். பதட்டம்
பற்றிக்கொண்டது யாராக
இருக்கும்? மெதுவாக சென்றான்.
அழுதழுது கண்கள் வீக்கத்தோடு இலக்கியா!
“இலக்கியா நீயா? வாய் பேச
வார்த்தையில்லை. சத்தமிட்டு வாய்விட்டு அழவும்
வாய்பில்லை. இருவரும் இறுக்கமாக
அணைத்துக்கொண்டனர்.
“விவேகா என்னய உங்கூட கூட்டிட்டு போயிரு”
அவள் தாய் தன்னிடம் கூறியதனைத்தையும்
கூறினான். அழுதான், ஏங்கி ஏங்கி
அழுதான்.
“எனக்கு யாரபத்தியும் கவல இல்ல. நீ
இல்லேனா நான் செத்துருவேன்,
உன்னால என்னய கூட்டிட்டு போவ முடியுமா
முடியாதா சொல்லு”
“சரி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.
கொஞ்ச நாள் பொறு. எங்க
அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சுறட்டும்
நானும் அதுக்குள்ள கொஞ்ச காசு
சம்பாதிச்சுடறேன். எங்க கம்பெனியில
இருந்து வெளிநாட்டுக்கு ஆள்
அனுப்புறாங்க, போறேன் போயிட்டு ரெண்டே
வருஷத்துல வந்துடறேன் என்ன
சொல்ற?”
“ம்ம்ம்… சரி நான் ஒவ்வொரு
நிமிசமும் ஒனக்காகதான் காத்துட்டுருப்பேன்.
பக்கத்து வூட்டு விலாசத்துக்கு கடுதாசி போடு,
நானும் ஒனக்கு கடிதாசி போடுறேன். சீக்கிரமா
வந்துரு விவேகா. நீ இல்லாம என்னால
வாழமுடியாது விவேகா…” என
ஓ…வென அழுதாள். கன்னத்தில்
முத்தமழை பொழிந்தாள்.
“சரி சொவர் ஏறி குதிச்சி வந்தேன்.
நான் வூட்டுக்கு போறேன். கண்டிப்பா கடுசாசி
போடு” என்று கூறி அழுதுகொண்டே
விடைபெற்றாள்.
அதிகாலையிலேயே உடமைகளை எடுத்து
கிளம்பிவிட்டான் விவேகன்..
கடிதப்போக்குவரத்துடன் காதல் உயிர்ப்பித்திருந்தது… இரண்டாண்டுகளை
நெறுங்கிக்கொண்டிருந்தது. தன்
அக்கா திருமணம் முடிந்தாயிற்று, தனக்கு
வாழத் தேவையான பணமும் சேர்ந்தாயிற்று..
எதிர்கால கனவுகளோடு வாழ்கை வெகு
மகிழ்ச்சியாக
சென்றுகொண்டிருந்தது. அப்போது
எதிர்பாராவிதமாக அந்த செய்தி
காட்டுத்தீ போன்று பரவியது.
குறிப்பிட்ட அந்த தொழிற்சாலையில்
ஏற்பட்ட விபத்தினால் விசவாயு தாக்கி ஒரு
கிராமத்தில் ஏராளமான உயிர்கள் பலி…
துடிதுடித்துப் போனான். பயம், அதிலும் ஒரு அசட்டு
நம்பிக்கை. என் இலக்கியாவுக்கு எதுவும்
ஆயிருக்காது. இருப்பு கொள்ளவில்லை.
உடனடியாக ஊருக்கு கிளம்பினான். விபத்து
ஏற்பட்டு இரண்டு நாட்களில் ஊர் வந்து
சேர்ந்தான். அந்த கிராமத்தை அடைந்தான்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த
கிராமத்தில் ஆளரவமற்று காணப்பட்டது.
ஆங்காங்கே ஆடுமாடுகள் மடிந்துகிடந்தன,
பெரும்பாலான வீடுகள் திறந்தே
கிடந்தன, ஆயினும் உள்ளே ஆட்கள் யாரும்
இல்லை..
பயம் தொற்றிக்கொண்டது.
நம்பிக்கை மெல்ல இழக்கத்துவங்கியது.
கண்ணீர் வழிந்தோடி கன்னம் கறைப்பட்டது.
வேகமாக தொழிற்சாலையை நோக்கி
நடந்தான். தொழிற்சாலை
பூட்டப்பட்டிருந்தது. தலையில் கவசத்தோடு
இராணுவ உடையணிந்த சிலர் அதன்
வாயிலில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் கேட்டான்.”சார் இந்த ஊர்ல
உள்ள மக்கள் எல்லோரும் எங்க?
எல்லோரும் வெவ்வேறு ஊருக்கு போயிட்டாங்க,
நிறையபேர் இறந்துட்டாங்க, சில பேர் உயிரோட
பெரிய ஆஸ்பத்திரியில இருக்காங்க.”
என் இலக்கியா செத்துருக்கமாட்டா,
கண்டிப்பா உயிரோட இருப்பா. ஆஸ்பத்திரியில
போய் பாக்கலாம் என முடிவெடுத்து
விரைந்தான்…
அரசு மருத்துவமனை நிரம்ப நோயாளியாய்
இருந்தனர். ஒவ்வொரு வார்டாக
சென்று பார்த்தான், கண்களில்
கண்ணீர், உடல்முழுக்க வியர்வை, பசி மயக்கம்,
சோர்ந்து போனான். இறுதியாக ஒரு வார்டு.
அகன்று விரிந்த ஒரு அறை. பல்வேறு பல
நோயாளிகள். துர்நாற்றம் முக்கைத் துளைத்தது.
வாந்தி வருவது போலிருந்தது. சுற்றி
பார்த்தான். வலது புறம் ஓரத்தில் அவன்
முதன்முதலாக பார்த்த வெங்காய
வண்ண தாவனி கண்ணில்பட்டது…
விரைந்தான். ஆம் இலக்கியாவேதான். சில
நாட்களாக அடர்பாலைவனத்தில் அகப்பட்டு
பசி தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு
குவளை அமிர்தம் கிடைத்ததைப் போலிருந்தது
விவேகனுக்கு. பெருமூச்சிரைத்தவாறே கட்டிலில்
கிடந்தாள். அருகினில் சென்றான்.
இலக்கியா…..வென ஓவென
கதரினான். அவளால் வாய் பேச
முடியவில்லை. கண்களில் நீர் வழிந்தது. தன்
கண்களால் முகத்தினருகே அழைத்தாள்.
தன் முகத்தை கொண்டு
சென்றான்..
மெதுவான கரகரப்பான குரலில்
“ஒன்ன பாக்கதான் என் உசுர பிடிச்சி
வச்சிருக்கேன். எங்க வீட்ல யாரயும் நான்
பாக்கல.. எல்லாரும் செத்துபோயிருப்பாவனு நெனக்கேன். என அவன்
நெற்றியில் முத்தமிட்டாள் தன்
வரண்டுபோன இதழால்…
“செல்லம் உனக்கு எதுவும் ஆகாதுடி. நீ
கவல படாத. நம்ம கல்யாணம்
பண்ணிக்கலாம்டி..” இலக்கியாவுக்கு
உதட்டில் புன்னகை கண்களில் கண்ணீர் சரி
என்பது போல் தலையசைக்கும்போதே மூச்சி மேலும் கீழும்
இரைத்தது…”
விவேகனின் கையை இருக்கமாக
பிடித்துக்கொண்டாள். அவன் கையை
உறுவி டாக்டர் என்று வேகமாக கத்தினான்.
அவள் மேலும் அழுத்தமாக பிடித்து போகாதே
என்பது போல் தலையசைத்தாள்.
அழுது கொண்டே கத்தினான். உனக்கு
ஒன்னுமில்லடி செல்லம் என முகத்தை
தடவினான். மூச்சிமுட்டு அதிகமானது சற்று
நேரத்தில் ஒட்டுமொத்த மூச்சும்
நின்றுவிட்டது…
அவனுக்கு அழுவதைத் தவிர வேறு
வழியொன்றுமில்லை…
மேசையில் சாய்ந்தவாறே நிகழ்காலத்துக்கு
திரும்பினான்…
பேருன்னதமான காதல் யாருக்காக,
எதற்காக சிதைந்தது? இனி என்றுமே
கிடைக்கப்பெறாத அந்த அன்பு
அயோக்கியர்களின் பணத்தாசையால் மாண்டு
போனதே! மக்களை வாழவைப்பதுதானே வளர்ச்சி?
அழிப்பதற்கு பெயர்
தொழிற்ச்சாலையா? இழப்பீடு
எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் ofஎன் இலக்கியாவின் அன்புக்கு
ஈடாகுமா? என் போன்ற எத்தனை விவேகனோ!
எத்தனை இலக்கியாவோ இந்த விஷவாயு
உறுஞ்சிக் குடித்தது… விவேகனுக்குள் பல
கேள்விகளை விதைத்தது இலக்கியாவின் மரணம்.
ஆம்! இலக்கியா உயிரை விடவில்லை இவனுக்குள்
விதை தான் விதைத்துச் சென்றுள்ளாள்
அவள் விதைத்த விதைதான் இன்று மரமாகி பல
மக்களுக்கு நிழல் தருகிறான்…. நிறைய
எழுதுகிறான், பேசுகிறான், உலகம் முழுக்க
பயணம் செய்கிறான். அவ்வப்போது சிறை
செல்கிறான், மக்கள் மனதிற்குள்ளும்
செல்கிறான். ஆம் விவேகன் சிறந்த
சமூகப் போராளியாகிவிட்டான் தனிமரமாக.
(முற்றும்)

நன்றியுடன்

செ இன்பமுத்துராஜ்

 

 

 

சாராயமும்_சாதியும்

news-women-harassment-against-female-employees-stations-will-1-65897-65897-woman-beating

செவ்வானம் தரையில் படுத்துறங்குவது

போன்ற செம்மண் சூழ்ந்த முந்திரிக்காடு,
ஒவ்வொரு முந்திரித் தோப்புகளுக்கு
காவலாக கள்ளிச்செடிகளாலான
வேலிகள். இத்தோப்புகளினூடே அரசின் அதீத
கரிசனத்தில் ஒரு மகிழுந்து மட்டுமே
செல்லுமளவிலான தார்சாலை. கரையில்

“தேரிவிளை 1 கிமீ” என எழுதப்பட்ட ஒரு மைல் கல்.
அதன் மேலமர்ந்து யாரையோ எதிர்பார்த்து
காத்திருந்தான் மதியழகன்.
இது மூன்றாண்டுகால முயற்சியின் இறுதி
கட்டமென
எண்ணிக்கொண்டான்.. கையிலிருக்கும்
கடிகாரத்தை பார்த்தான் நேரம் மாலை 5
மணியாயிற்று. மனதிற்குள் ஆழிப்பேரலை
சுழன்றடிக்கத் துவங்கியது.

“ச்சே அது என்ன
எழவோ தெரியல. மத்த நேரம்லாம் நல்ல
தைரியமாத்தான் இருக்கேன்.அவ வர்ர நேரம்
மட்டும் எதுக்கு இப்படி பதட்டமா இருக்குனு
தெரியலயே… சரி என்ன நடந்தாலும் சரி
இன்னைக்கு விட்டுறகூடாதுலேய் மதி… என்று
உள்ளூற துணிச்சலூட்டிக்கொண்டான்.
வாடைக்காற்று சற்று வேகமாகவே வீசியது.
வீசிய முரட்டுக்காற்றில் முந்திரி மர இலைதழைகள்
வேலி தாண்டி பறந்த வண்ணமாயிருந்தன.
காற்றுக்கேற்றார் போன்று பனையோலைகள்
அசைந்தாடும் சத்தம் எங்கிருந்தோ கேட்டது.
புழுதிக்காற்று வீசியது. வீசிய காற்றில் கைவீசி
வெகு தூரத்திலிருந்து மூன்று பெண்கள்
நடந்துவந்தவண்ணமாயிருந்தனர்.
மதியழகன் தனது பார்வையை சற்று
விசாலமாக்கினான், வருவது
யாரென பார்வையை கூர்மைபடுத்தினான்.
வந்துவிட்டாளென இதயப் படபடப்பு
கூறியது. மனதிற்குள்ளே அவளிடம் பேசப்போகும்
வசனங்களை கூறி ஒத்திகை
பார்த்துக்கொண்டான். அருகில்
வந்துவிட்டாள். இதய ஓசை சற்று வேகமாகியது.
அலைவீசும் காற்றிலும் முகத்தில் அணலாடி
வியர்வை சிந்தத் துவங்கியது. தன்னருகில்
வந்துவிட்டாள்.

“மதி துணிந்து செயல்படு
உன்னை கடக்கிறாள்” என மனது உசுப்பிவிட்டது.

“ஏ குழலி நான் கொஞ்சம் தனியா
பேசணும்”
எப்படியோபேசிவிட்டான்.
அவள் தோழியிடமிருந்து பதில் வந்தது

“இவ்ளோ நேரம் தனியாதான இருந்திய
பேசவேண்டியதுதானே?”
குபுக்கென்று சிரிப்பு முட்டியது பூங்குழலிக்கும்
சக தோழியருக்கும். தனது துப்பட்டாவால்
வாயை மூடிக்கொண்டாள்.
பேச திணறிய வாயுடனே அடுத்த வார்த்தை
கூறினான்.

“நான் குழலிகிட்ட கொஞ்சம்
தனியா பேசணும்

“என்ன பேச போறிய? நீங்க எவ்ளோதான் கோழியா
கூவினாலும் எங்க அப்பா உங்களுக்கு
கட்டிதர மாட்டாவ. அது ஏன்னு உங்களுக்கே
தெரியும்.”

குழலியிடம் இந்த பதில் எதிர்பார்த்ததுதான்.

“தெரியுது நல்லாவே தெரியுது. எங்க
அப்பன் வேற சாதியில பொண்ணு
கட்டுனாருனு உங்க அப்பா எனக்கு கட்டித்தர
மாட்டாவங்குற அப்படிதானே?
எங்க அம்ம வேற சாதியா இருக்கலாம்
ஆனா அவ சாமிக்கு சமம். எங்க அப்பன்
மனசுக்கு பிடிச்ச வாழ்கையை யாருக்கும்
பயப்படாம வாழ்ந்த துணிச்சல்காரன்.

உங்க அப்பனை மாதிரி குடிகாரனில்ல,
கூத்தியா வைக்கல, புளியமரம் நெழலுல
இருந்து சீட்டு வெளயாடி
சொத்துபத்தெல்லாம் இழக்கல.
நான் கவுரவமா காரு ஓட்டி
பொழப்பு நடத்துதேன். மூனு லட்ச ரூவா
பேங்குல போட்டு வச்சிருக்கேன். துணிஞ்சி வா
உன்ன ராணி மாதிரி ஒக்கார வச்சி நான்
கஞ்சி ஊத்துறேன்.”

இத்தனை நாட்களில் இவன் இத்தனை
காட்டமாக., இத்தனை தீர்க்கமாக,
பேசியதில்லை. குழலி பதிலேதும் கூறவில்லை. அவன்
முகம் பார்க்காமல் திரும்பி நின்று
கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏட்டி வா போயிரலாம்” என தோழியர்கள்
இழுத்துக்கொண்டிருந்தனர். தூரத்தில்
பதநீர் கலசங்களோடு யாரோ மிதிவண்டியில்
வந்துகொண்டிருந்தார்.
குழலி நடந்தவாறே கூறினாள்.

“யாருக்கு
எங்கன்னு இருக்கோ அங்கதான் நடக்கும்.
பேசாம பொழப்ப பாருங்க”
குழலி நடந்துகொண்டேயிருந்தாள். மதி
அதே இடத்தில் நின்றுவிட்டான்.
உரத்த குரலில் கத்தினான்.

“ஏ..ட்டி குழலி சாதி மாத்தி
பொறந்ததுல எந்தப்பு என்ன
இருக்குனு சொல்லிட்டுப்போ.”
குழலி நிற்கவேயில்லை. எப்போதும் இவன்
பின்னால் அலைவதை கண்டு
எள்ளிநகையாடுவாள் இன்று இறுக்கமான
முகத்தோடிருந்தாள். கண்களில் லேசாக
கண்ணீர் கசியத் துவங்கியது. கைகளால்
துடைத்துக் கொண்டாள்.
சொல்ல முடியாது இந்த கண்ணீருக்கு
காரணம் காதலாக கூட இருக்கலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் இலக்கற்று
நடப்பதைப் போன்று நடைபிணமாய் திரும்பி
நடந்தான் மதியழகன்.
இருபக்கமுமிருந்து தோழியர்கள் பேசிய வார்த்தைகள்
ஏதும் செவியை கடந்து மனதிற்குள்
இறங்கவில்லை பூங்குழலிக்கு. அவன் கூறிய

“சாதி மாத்தி பொறந்ததில எந்தப்பு
என்ன இருக்கு?” என்ற ஒரு சொல்
மட்டுமே மனதில் ரீங்காரமிட்டது.
அவன் ஞாபகத்திலேயே தேரிவிளை வந்தடைந்தாள்.
காங்கிரீட்

வசதியில்லா காலத்து பனை
மரத்தினால் வெய்யப்பட்ட உத்திரம்
வைத்த மாடிவீடு. இவ்வில்லத்தின் பின்புறம்
மாட்டு தொழுவம். இவ்விரண்டிற்கும்
அரணாக பனை மட்டைகளால் குறுக்கும்
நெடுக்குமாய் ஆணியறையப்பட்டு
வேலியமைக்கப்பட்டிருந்தது. வாயில் கதவு கூட
பனை மட்டைகள்தான்.

குழலி தன் வீட்டுமுன் வந்தாள். தன் தாய்
இசக்கி வீட்டு வாசலில் ஒரு கருங்கல்லின்
மேலமர்ந்திருத்தாள்.

“ஏ…ட்டி இன்னைக்கு ஏன் இவ்ளோ நேரம்” குழலியின்
தாயார் இசக்கியம்மாள் கேட்டாள்.

“எப்பயும் போலதான வாரேன். இதோட நேரத்துல
வரணும்னா எலிகாப்டர்லதான் வரணும்”

“இப்ப ஏன் நான் என்ன கேட்டேன்னு இப்டி
தெறிக்கா? போ போயி சாப்பிடு. போ.”
படலையை (கதவை) திறந்து வீட்டிற்குள்
சென்றாள் குழலி.
இசக்கியம்மாள் ராகம் இழுத்தாள்.

“என்ன ஆக்கத்துல பொறந்தேனோ
தெரியல. பெத்த பிள்ளையும் நம்மள
மதிக்க மாட்டேங்குது. கட்டுன புருசனும் மதிக்க
மாட்டேங்குறான். எங்க அப்பாதான் இந்த
ஊருலேயே பெரிய மிராசு. அப்பவே மச்சி வூடு
கட்டியவரு. தோட்டம்தொரவுலாம்
ஏகப்பட்டது இருந்துச்சி. இந்த
ஆக்கங்கெட்ட குடிகாரனுக்கு
கெட்டிகுடுத்து இன்னைக்கு,இந்த வூடும்
வெளங்காடுந்தான் மிச்சம். மாடு
நான் அரும்பாடுபட்டு வாங்கியது.
குலசைக்கு வேசம் கட்டியாச்சி, உவரிக்கு மண்ணு
சொமந்து பாத்தாச்சு, ஐயா
நாராயணசாமிய ஞாயித்து
கெழமையெல்லாம் கும்பிட்டு
பாத்தாச்சு, சொடலமாடனுக்கு
கெடா நேந்துவுட்டு பாத்தாச்சி. இதுல
வேற வேதகாரனுவ யேசுவ கும்பிடுங்கனு நோட்டீசு
தரானுவ.
எத்தன சாமிய கும்பிட்டும் இந்த நாறப்பய
திருந்தமாட்டேங்குறானே!,,,”
குழலி நைட்டியை மாத்திக்கொண்டு கையில்
சாப்பாடு தட்டோடு விரைந்து வந்தாள்.

“எம்மோவ் இப்ப ஏன் தெருவுல கெடந்து
கத்துறா? அப்பா ஒழுங்கு
தெரியாதா இந்த தெருவுக்கு? நீ
பொலம்புறத கேட்டு சந்தோசபடதான்
ஆளு இருக்கு. ஆறுதலுக்கு யாருமே இல்ல
பேசாம வூட்டுக்குள்ள வா.”

“இந்த மாட்டுல கறக்குற பால வச்சி
இருவத்தி ஐயாயிரம் ரூவா சீட்டு போட்டேன். கடேசி
சீட்டு முடிஞ்சி நேத்துதான் ரூவாய வாங்கி
மொளவு பெட்டிக்குள்ள போட்டு
வச்சிருந்தேன். இப்ப அதுல பத்தாயிரம் ரூவா
கொறையுது. நான் யாருகிட்ட
சொல்லி அழ? இருவத்தோரு மாசமா
கட்டி எடுத்த பணம். இந்த இடிவுழுவான்
வாயில மண்ணு வுழுந்துட்டே நான் என்ன
செய்ய?
கருத்து தடித்திருந்த இசக்கியம்மாள் முகத்தில்
கண்ணீர் வழிந்தோடியது.

“ஆ..மா இவர சொல்லி என்ன
கொற? குடிக்க தண்ணியெடுக்க
ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாத்தியாரு தோட்டம்
வரைக்கும் போகவேண்டியிருக்கு. ஆனா குடிக்க
பிராந்தி அந்த சைக்கிள் கடையிலேயே பிளாக்குல
கெடைக்குது.”
இசக்கியம்மாள் ஒன்னுமே பேசவில்லை. கண்ணீர்
மட்டுமே கன்னத்தை ஈரமாக்கிகொண்டிருந்தது.கருத்த மேனி, மேல் சட்டையின்றி ஒரு துண்டு மட்டுமே
தோளிலிருந்தது. ஒரு வெள்ளை வேட்டியை
ஏறத்தாழ காவி நிறத்தில் உடுத்தியிருந்தார்
சுடலைக்கண்ணு. மிதமிஞ்சிய போதையில் தன் வீட்டின்
முன் வந்தார். அவர் வந்ததும்
இசக்கியம்மாள் வீட்டினுள் சென்று கதவை
பூட்டிக்கொண்டாள்.
படலையை திறந்து வீட்டிற்குள் சென்று
திண்ணையில் படுத்துக்கொண்டான்.

“சிரிக்கி, கட்டுன புருசன வெளிய போட்டு கதவ
பூட்டுறியா. இருடி…” என்றவாறே
கண்ணயர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து கதவை திறந்து இசக்கி
வெளியே வந்தாள். சுடலை குறட்டையிடத்
துவங்கியிருந்தான்.

“வெளங்காதபய சாப்டானோ
சாப்டலயோ தெரியலயே” என்றவாறு
இசக்கி ஒரு போர்வையை போர்த்திவிட்டாள்.”
“ரொம்ப முக்கியம்மோ. உனக்கு
கொஞ்சம் நல்ல புருசன்
கெடச்சிருந்தாலும் சரிதான்” என குழலி
எள்ளிநகையாடினாள்.
இது இன்று மட்டுமே நடைபெறும் சம்பவமல்ல,
இது இக்குடும்பத்தின்
அன்றாடங்களிலொன்று.
சில நாட்கள் சென்றது. தினம் தினம்
தையல் பள்ளி செல்லும் வழியில் மதியழகனை
குழலியின் கண்கள் தேட ஆரம்பித்தது. அவன்
வரவேயில்லை. அவன் மகிழுந்துகள் நிறுத்துமிடத்தி
ற்கு வேண்டுமென்றே சென்றாள்.
அவனை காணவில்லை. அருகினில் ஒரு கடையில்
தன் தோழியோரோடு நன்னாரி சர்பத் தரக்கூறி
காத்து நின்றிருந்தாள்.
திடீரென மதி’யென்ற பெயர்
பொறித்த வெள்ளைநிற
மகிழுந்தொன்று வந்து நின்றது. தனது
கருவிழிகளால் ஓரப்பார்வையை
செலுத்தினாள். அவனேதான்.
மதியழகன். என்ன காரணமோ
தெரியவில்லை. வழக்கத்திற்கு மாறாக
அழகனாயுள்ளான். மனதிற்குள் ஆதவன்
பிரகாசமாய் எழத்துவங்கினான் குழலிக்கு.
வாகன நிறுத்தத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு
வெளியே வந்தான். எதிர்த்த கடையில்
குழலி. யாரும் எதிர்பாரா சமயத்தில்
பெய்யும் கோடை மழைபோன்று நெஞ்சில்
அத்தனை இதம்.
குழலி சர்பத்தை கையில் வாங்கினாள்.
மதி அவளையே வெறித்துக்கொண்டிருந்தான்.
மெதுவாக கையிலிருக்கும் சர்பத்தை தன்
செவ்விதழுக்கு அர்பணித்தாள். பார்வை
மதியிருக்கும் திசை நோக்கி ஓரமாக பாய்த்தது.
இதழுக்கு விடைகொடுத்து சர்பத்தை
இறக்கினாள். உதடு லேசாக புன்னகைத்தது.
கண்கள் மதியழகனையே
பார்த்துக்கொண்டிருந்தது.
மதி மனதில் குற்றாலச் சாரல். இதுவரை
காணாத மகிழ்ச்சி, பல ஆண்டுகளாக
வறுமையில் தவிக்கும் திரைப்பட கலைஞனுக்கு
கதாநாயகன் வாய்ப்பு கிட்டியதைப்போல்
அத்தனை ஆர்ப்பரிப்பு மதியழகனுக்கு.
கண்களால் “செல்கிறேன்” என
நாசூக்காக கூறி விடைபெற்றாள்.
இவனும் கண்களாலேயே சரியென
கூறினான்.

மெத்த மகிழ்ச்சியில் குழலி வீடு
திரும்பினாள். போதையில் தனது தந்தை
சுடலைக்கண்ணு வீட்டிலிருந்து தன் தாயிடம்
கெட்ட வார்த்தைகளில் எதையெதையோ
பேசிக்கொண்டிருந்தான்.
குழலிக்கு இது பழக்கப்பட்ட ஒன்றுதான்.

“எம்மோவ் இன்னைக்கு என்ன கொழம்பு
வச்ச?”
இசக்கி பதிலேதும் பேசவில்லை.
சுடலைக்கண்ணு தனது தோளிலுள்ள துண்டை எடுத்து
வியர்த்து வழியும் தன் முகத்தை
துடைத்துக்கொண்டான்.
சுடலைக்கண்ணுவின் குருதி படிந்த கண்களால்
குழலியை ஏறெடுத்துப்பார்த்தான்.
குழலி அஞ்சுவதாகத் தெரியவில்லை.
மண்ணின் குணம் அப்படி..அவளென்ன
செய்வாள்?.
மெதுவாக ஆரம்பித்தான்
சுடலைக்கண்ணு.
“சைக்கிள் கடையில பிராந்தி வாங்க
நின்னுட்டுருந்தேன். சைக்கிளு சரிபண்ண
ராசமணியும் நின்னுட்டுருந்தான். அப்பதான்
தலையில இடிய போடுற மாதிரி ஒன்னு
சொன்னான். நீ
கொல்லாங்காட்டுக்குள்ள
(முந்திரிக்காடு) அந்த சாதிகெட்ட பயகூட
பேசிட்டுருந்தியாம்ல?”
குழலியிடம் பதிலேதுமில்லை.

“ஏ…ய் செரிக்கி மொவள பதில
சொல்லு”
“ஆமா பேசிட்டுதான இருந்தேன். பேசுறது
தப்பா?”
“பேசுறது தப்பு இல்ல. சாதிகெட்ட பயகூட
பேசுறதுதான் தப்பு”
“சாராயம் குடிச்சி பொண்டாட்டி
புள்ளய தவிக்க வுடுறத விடவும் சாதி
கெட்டதா?”
இசக்கி குழலியை நிமிர்ந்து பார்த்தாள்.
சுடலைக்கண்ணு கொப்பளிக்கும்
கோபத்தில் பல்லை நெறுநெறுவென
கடித்தபடியே கூறினான்.
“குடிகாரன் குடிய விட்ட மறுநாளே சாதா
மனுசன். ஆனா சாதிகெட்டபய
சாவுற வரைக்கும் சாதி
கெட்டவன்தான்”
“எவன் என்ன சாதியா இருந்தா எனக்கு
என்ன. பொஞ்சாதிய கவுரவமா
வச்சி வாழ்ந்தா போதும். அவந்தான் ஒசந்த
சாதி”
தோளிலிருக்கும் துண்டை உதரியவாறே எழுந்துநின்று
சொன்னான் சுடலை. “அந்த
சாதிகெட்டபய கூட போனா உன்னையும்
கொல்லுவேன் உங்க அம்மையையும்
கொல்லுவேன். உனக்கு நான்
மாப்ள பாத்துட்டேன். எந்தங்கச்சி
மொவன்தான் உனக்கு மாப்ள.”
சட்டென துள்ளியெழுந்தாள் இசக்கி.
“ஏ….மனுசா! நீ ஆளுதானா? நானும் ஏதோ
மவகிட்ட அக்கறையா பேசுதானு
பொறுமையா இருந்தா
உந்தொங்கச்சி மவனுக்கு
கட்டிகொடுக்க போறியா மனுசா?
அவன் உன்னவிட பெரிய குடிகாரபய.
குடிக்க காசு வாங்கிட்டு எம்மொவள
கூட்டிகொடுக்க போறியா
சண்டாளா…”
பளாரென ஓங்கியறைந்தான் இசக்கியை.
அறைந்துவிட்டு கதவை வேகமாக சாத்திவிட்டு
வெளியே சென்றுவிட்டான்
சுடலைக்கண்ணு.
மறுநாள் தையலகத்திற்கு சென்று
திரும்பிக்கொண்டிருந்தாள். அதே
தேரிவிளை மைல் கல்லில் மதியழகன் வாடி நிற்கும்
கொக்கைப்போல அமர்ந்திருந்தான். மதி
வருவானென அவளுக்கு தெரியும்.
குழலி அருகினில் வந்தாள். தனது தோழியரை
“நீங்க போங்க நான் வாரேன்” என
சொல்லியனுப்பிவிட்டாள்.
ஆனந்தம், உரிமை, காதல்,
பெண்மையருகினிலாதலால்
மெல்லிய காமம் என மொத்த
சொர்க்கமும் மதியின் முன்னே.
தலைகுனிந்தபடியே குழலி தன்னகன்ற கருவிழியை
மட்டும் மேல்நோக்கினாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம்
பேசணும்”
“இதுக்குதானே மூனு வருசமா
தவங்கெடக்கேன்”
“நேத்தைக்கு எங்க வூட்ல சண்ட. எங்க
அப்பாவுக்கு நம்ம அன்னைக்கு பேசினது
தெரிஞ்சுபோச்சி. என்னைய ஏசினாவ. நான்
உங்களதான் கல்யாணம் பண்ணுவேன்னு
சொல்லிட்டேன். அப்புறம்தான்
சொன்னாவ எங்க அத்த
மொவன எனக்கு மாப்ள
பாத்துருக்காவளாம். எங்க அம்மாக்கு
இதுல சம்பந்தம் இல்ல. இருந்தாலும் மனசு
எதுக்கோ சஞ்சலமாவே இருக்கு”
மதி தனக்கு அதீத கோவம் வந்ததுபோல் சற்றே
சீற்றத்துடன் “நீ இனி அந்த வூட்டுக்கு
போகவேண்டாம். வா நம்ம வீட்டுக்கு.”
பைத்தியம் மாதிரி பேசாத. எங்க அம்ம
எனக்குதான் சாதகமா இருக்காவ.
எல்லாம் ஒனக்கு தெரியணுமேனு
சொன்னேன். அவ்ளோதான்.”
“ம்ம்ம் எதுனாலும் நா பாத்துக்குறேன்.
தைரியமா இரு”
பல ஆண்டுகளாக கணவன் மனைவியாய்
வாழ்ந்தது போன்று உரிமையோடு
பேசிக்கொண்டிருந்தனர்.
“சரி நான் வாரேன். எங்க அம்ம தேடுவா”
என வேகவேகமாக நடந்தாள்.
வீட்டிற்குள் சென்றாள். வீட்டில்
யாருமில்லை. சுடிதாரை அவிழ்த்து நைட்டியை
அணிந்துகொண்டாள்.
சோத்துப்பாணையை பார்த்தாள். சோறு இருக்கிறது.
குழம்பு பானையை பார்த்தாள். பருப்பு குழம்பு.
“ச்சே பருப்புனாலே நமக்கு வெறுப்பாச்சே”
கூட்டுக்கு என்ன பார்க்கலாம் என்று கவிழ்த்து
வைத்திருந்த மண்பானையொன்றை
திறந்தாள். நாட்டுக்கோழி முட்டை சில இருந்தன.
இரண்டு முட்டையை எடுத்தாள். ஒரு
வெங்காயத்தை எடுத்தாள். கத்தியை
தேடினாள். அகப்படவில்லை. அருகினில்
அரிவாள்மனை இருந்தது.
அரிவாள்மனையை எடுத்து தரையில் வைத்து
வெங்காயத்தை வெட்டினாள்.
அரிவாள்மனை அதே இடத்திலிருந்தது.
முட்டையை வறுத்தெடுத்தாள். தட்டில்
பருப்புக்குழம்புச் சோறோடு வருத்த முட்டை கச்சிதமான
உணவு. சமையலறையினிலேயே ரசித்து
உண்டுகொண்டிருந்தாள்.
சடாரென கதவுதிறக்கும் சப்தம்
கேட்டது.சுடலைகண்ணு சற்று கோபத்தோடே வந்தார்.
பானையில் தண்ணீர் மொண்டு
மடக்மடக்கென குடித்தார்.
இது எதையும் கவனிக்காதது போல தன் வேலையில்
மும்மரமாக இருந்தாள் குழலி.
“ஏ… நாய. நான் நேத்தைக்குதான் நாயி
மாதிரி தட்டோளமிட்டுருக்கேன்.நீ இன்னைக்கும் அந்த
நாயிகிட்ட பேசியிருக்கா”
வாய் நிறைய சோறு “ம்ம் ஆவ்மா” சோத்தை
மெண்டு முழுங்கினாள். “ஆமா அதுக்கு
இப்ப என்ன? நான் அவனதான் கட்ட
போறேன்”
“அடச்சீ சில்லாட்டப்பயவுள்ளா. எந்தங்கச்சி
மொவனதான் நீ கட்டணும். இது
நடக்கும்”
“உங்க தங்கச்சி மொவனுக்கு
கல்யாணம் நடக்கணும்னு ஆசை இருந்தா
உங்க கூத்தியா மொவ எவளாவது
இருப்பா அவளுக்கு கட்டி வையுங்க. எங்க
அம்மய மாதிரி குடிகாரனுக்கு நான் கழுத்த
நீட்ட மாட்டேன்”
சுடலைக்கு கோபம் தலைக்கேறியது. மிதமிஞ்சிய போதை
வேறு. குழலியை நோக்கி ஓடிச் சென்று
மார்பிலேயே மிதித்தான். சரிந்து மல்லாந்து
விழுந்தாள் குழலி.
அவள் தலை மயிரை பிடித்து அவளை தூக்கினான்.
“செரிக்கியுள்ளா நானும் கிளிப்பிள்ளைக்கு
சொன்னது போல சொல்லிட்டு
இருக்கேன். நீ ஒருபடியாதான் துள்ளுற?”
என்றபடியே தலைமயிரை பிடித்து வேகமாக
இழுத்தான்.
வலிதாளாமல் தனது முழு ஆற்றலையும்
ஒன்றுபடுத்தி வேகமாக ஒரு தள்ளு
தள்ளினாள்.
போதையினால் ஆற்றலிழந்த சுடலை சிறிது தூரத்தில்
சென்று பொதக்கென்று
விழுந்தார்.
விழுந்தவர் விழுந்தவர்தான். எந்த அசைவும்
இல்லை. கோபத்தில் மேலும் கீழுமாக மூச்சிரைத்தது
குழலிக்கு. விழுந்த தன் தந்தையை பார்த்தாள்.
கவிழ்ந்து கிடந்தார். கூர்ந்து கவனித்தாள்.
இரத்தம் கசிந்து பள்ளம் நோக்கி வந்தது. கடவுளே
என்ன இது.என பதறிஓடி தன் தந்தையை
எழுப்பினாள். எந்த அசைவுமில்லை.
கவிழ்துகிடந்தவரை பெருஞ்சிரத்தையெ
டுத்து திருப்பினாள். அரிவாள்மனை கழுத்தில்
பதிந்திருந்தது. சிர் சிர்ரென குருதி
கசிந்துக்கொண்டிருந்தது.
கீர்ரென்ற சத்தத்துடன் குழலி மயங்கிச்
சரிந்தாள்
இப்போது சுடலை ஒரு பக்கம் இறந்துகிடக்கிறான்,
குழலி ஒரு பக்கம் மயங்கிகிடக்கிறாள். ஆழ்ந்த
நிசப்தம். நேரம் மாலை நிலவரப்படி 6:30.
தலையில் புல்லு கட்டுடன் வியர்க்க விறுவிறுக்க
இசக்கி வந்தாள். படலை திறந்திருந்தது. சிறிது
மூச்சிரைத்தவாறே
“ஏ…ய் குழலி… படலய தொறந்து
போடாதேனு எத்தன தடவதான்
சொல்லணும் ஒனக்கு…?”
உள்ளிருந்து எந்த சப்தமும் இல்லை.
“கூப்டா சத்தம் தருதானு பாரு திமிரு பிடிச்ச
பயவுள்ள..”
வாழ்கை எப்போது எந்த அதிர்ச்சியை தருமென
அவதாரங்களுக்கே தெரியாது பாவம்
இசக்கியம்மாளுக்கா தெரிந்துவிடும்.?
மாட்டுத் தொழுவத்தில் புல்லுக்கட்டை
இறக்கி வைத்தாள். தன் முந்தானையினால்
தன்முகத்தை துடைத்துக்கொண்டு பின்
வாசல் வழியியே வீட்டினுள் நுழைந்தாள்.
பேரதிர்ச்சி…! தன் கணவன் இரத்த
வெள்ளத்தில் கிடப்பதை பார்க்கிறாள்.
“ஏ… என்ன பெத்த அம்மா இது யாரு
செஞ்ச வேலை…” கதறுகிறாள். கணவனின்
திறந்திருக்கும் கண்கள் இவளையே பரிதாபமாய்
பார்ப்பது போலுள்ளது. இசக்கி கை கால்கள்
நடுங்குகிறது.
சற்று வலப்புறம் பார்க்கிறாள். குழலி
மல்லாந்து கிடக்கிறாள். அவளது மார்பு
மேலும் கீழும் ஏறியிறஙகுகிறது.
“கடவுளே எம்பிள்ளைக்கு உசுரு இருக்கு…”
அருகிலிருந்த குவளையில் நீரெடுத்து குழலி
முகத்தில் தெளித்தாள்.
சிறிய முனகல் சத்தத்தோடு குழலி கண்
விழித்தாள்…
“ஏ… பாவிமட்ட என்னாச்சு மக்கா…?
தலைவிறி கோலமாய் கண்களில் கண்ணீரும்,
மூக்கிலிருந்து நீரும் வழிந்தோடியபடியே இசக்கி
கேட்டாள்.
அழுதழுதே பதட்டத்தோடே, பயத்தோடே நடந்ததனைத்தையும்
கூறினாள்.
இருவரும் உடைந்து அப்படியே அமர்ந்திருந்தனர். சில
மணித்துளிகள் கடந்தன… ஏங்கி ஏங்கி
சப்தமில்லா அழுகையுடன் இசக்கி எழுந்தாள்.
சுடலை கழுத்தில் சொறுகியிருக்கும்
அரிவாள்மனையை உறுவினாள்.
குருதி பீரிட்டது.
துணிக்கடை பிளாசுட்டிக் பையொன்றில்
அரிவாள்மனையை வைத்துக்கொண்டாள்.
மகளை “வா ட்டி” என்று கரம் பற்றி
இழுத்தாள்.

“எங்கம்மா?”

“பேசாம வா”

அரிவாள்மனை பை ஒரு கையில், மகளின் கை ஒரு
கையில்.
வேகமாக நடையைகட்டினாள்.
ஊரைத்தாண்டியாயிற்று.
நிலவொளியும், நட்சத்திர ஒளியும்
சாலையில் நடக்குமளவிற்கு வெளிச்சம்
கொடுத்தன.
நான்கு கண்களிலும் வழியும் கண்ணீர்
நிற்கவேயில்லை. காற்று வேகமாக வீசியது.
காற்றைக்கிழித்துக்கொண்டு இருவரும்
வேகமாக நடந்தனர்.
வேகமாக நடந்து ஒரு வீட்டின் கதவை
தட்டினார்கள்.
உள்ளிருந்து வெறும் கைலியணிந்தபடியே
கதவைத் திறந்தான் மதியழகன்.
இவரிருவரும் நிற்கும் கோலத்தை பார்த்ததும்
அதிர்ச்சியில் உறைந்துநின்றான் மதி…

“வா…ங்..க…எ..ன்ன்ன..இந்த.நேரத்துல?”

“எய்யா நான் சாமிய தவிர வேற
யாருகிட்டயும் எதையும் கேட்டதில்லய்யா.
உன்னய சாமியா நெனச்சி இந்த
உதவிய கேக்கேன். எம்மொவள கடைசி
வரைக்கும் கை விட்டுறாதேய்யா. இது உலகம்
தெரியாத புள்ள. எம்பிள்ளய இது
வரைக்கும் ஒரு அடிகூட அடிக்காம
நொடிக்காம வளத்துருக்கேன். நீ
நல்லாயிருப்பய்யா உசுரே போனாலும் குடிக்க
மட்டும் செஞ்சிராதே.. இந்த நாசமாபோன
குடியால இன்னைக்கு எங்குடும்பமே அழிஞ்சுபோச்சு.
எம்பிள்ளய பாத்துக்க”
சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருவரும்.

“சரி நீங்க கவல
படாதீங்க.மொதல்ல என்ன
நடந்துச்சினு சொல்லுங்க”

“அதை பெறவு எம்மொவா
சொல்லுவா. நான் வாரேன். நீ
இவள மட்டும்பாத்துக.”

“எம்மோ நீ என்னய விட்டுட்டு எங்க போறா?”

“நான் வந்துருவேன். எதுக்கும் கவலபடாதே.
நல்லா வாழுங்க மக்கா. நான்
உங்களுக்காகதான் இன்னும் உசுரோட
இருக்கேன். வாரேன் மக்கா” என்று தன் மகளை
இருக்கியணைத்து முத்தமிட்டு் அவ்விருட்டில்
வேகமாக நடந்தாள்.
அவள் நடந்த இருட்டையே மதியும் குழலியும்
பார்த்துக்கொண்டே இருந்தனர்.
சேவல்கள் தட்டிக்கூவின. கிழக்கு வெளுத்தது.
சுத்துபட்டி ஊரே ஒரே பரபரப்பாக இருந்தது.
அனைத்து நாளேடுகளிலும் செய்தி
வெளியானது.

“குடிகார கணவன் கொடுமை
தாங்காமல் அரிவாள்மனையால் கழுத்தை
அறுத்துக்கொன்ற மனைவி”
ஆம். இசக்கி காவல்நிலையத்தில்
அவ்வாறுதான் வாக்குமூலமளித்த
ுள்ளாள்.
இந்த இசக்கி இனி எப்போது விடுதலையடைவாளோ
தெரியவில்லை. ஆனால் சாதியும்
சாராயமும் ஒழியாமல் நம் மண்ணில்
இசக்கியம்மாள்களுக்கு ஒருபோதும் விடுதலையில்லை
என்பது மட்டும் திண்ணம்…
(முற்றும்)

நன்றியுடன்

செ_இன்பா

சுவடுகள்

inline-image-1-footprints

 

வயது மூத்து வசதிக்கேற்ப வெகுதூரம்

சென்று வாழ்ந்தாலும் பிடுங்கிய
செடியில் படிந்த மண்ணைப் போன்ற பால்ய
பருவ நினைவுகள் சில நெஞ்சில்
நிழலாடுகிறது. நினைவுகள் ஊடுருவ ஊடுருவ
மனதிற்குள் ஆழ்ந்த நிசப்தமும், பேரிரைச்சலுமாய்
முரண்படுகிறது.

என் பெயர் சுயம்பு. அப்போது ஆறாம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

கூகுள் வரைபடத்தில் கூட காண இயலாத ஒரு
குக்கிராமம் எங்கள் ஊர். நெல்லைக்கு
தெற்கே ஏறத்தாழ 60 மைல்கள் பயணிக்க
வேண்டும்.

தலைமுடியை எண்ணைய் தேய்த்து வாரி
வகுடெடுத்து, எண்ணை வடியும் முகத்தில்
கோகுல் சாண்டல் பவுடர் பூசி, நெற்றியில்
வடிவாக திருநீர் பூசி சிங்காரமாய் பள்ளிக்கு
புறப்படுவேன். துணிக்கடை மஞ்சள் பையில்
புத்தகங்களை புல்லு கட்டு போன்று அள்ளி சுருட்டி
வைத்து தோளில் தொங்கவிட்டவாறே
ஒய்யாரமாக நடந்து செல்வேன்.

குறுகிய சாலை, சாலையின் இரண்டு பக்கமும்
சிவப்பேறிக்கிடக்கும் மண். வழியெங்கும்
கள்ளிச்செடி, அடர்ந்து பரந்து விரிந்த
ஆலமரத்தடியிலும், வேப்பமரத்தடியிலும்
கம்பீரமான சுடலைமாடன் ஆலயங்களும் சில
உண்டு.

எங்கள் ஊரிலிருந்து சுமார் ஒன்றரை மைல்
தொலைவில் உள்ளது எனது
பள்ளிக்கூடம். அந்த பகுதியில் பிரசித்தி
பெற்ற அரசுப் பள்ளி அது.
வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட
கட்டடமாயினும் அத்தனை
பிரமாண்டமானதல்ல. ஓடுகளால்
வெய்யப்பட்ட மூன்று பெரிய
வரவேற்பறைதான் மொத்த பள்ளியும்.

ஆங்கிலமோகம் அதிகமில்லாத காலகட்டமது,
கல்வி அப்போது வியாபாரமாக்கப்படவில்லை.
இப்போது கற்பனையில் கூட காண இயலாத
அளவிற்கு மாணவர்கள் எண்ணிக்கை
கூடுதலாக உண்டு.

மூன்று பெரிய அறைகளிலும் பிரமாண்ட
பலகைகளை ஒவ்வொன்றாக வைத்து
ஒவ்வொரு அறையையும் வகுத்திருந்தார்
கள்.

அங்கு ஐந்தாம் வகுப்பிலிருக்கும் மாணவன்
சாதுர்யமானவனெனில் ஆறாம்
வகுப்பு பாடத்தையும் ஐந்தாம் வகுப்பிலேயே
கற்றுக்கொள்ளலாம். அத்தனை
அசௌகரியத்தில்தான் அன்றைய மாணவன்
மட்டுமின்றி ஆசிரியரும் இருந்தார்கள்.

இசக்கியப்பன் என்றொரு ஆசிரியர்.

அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே
நாங்களெல்லாம் குதுகுலமாகிவிடுவோம்.
காரணம் மாணவர்களோடு
மாணவர்களாக இருந்து மாணவர்களுக்கு
கற்பிக்கும் மகத்தான ஆசிரியர் அவர்.

“FASHION” என்ற ஆங்கில பாடம்
நடத்திக்கொண்டிருந்தார்.

“Fashionனா என்ன? நாகரீகம். நாகரீகம் எப்டிஉருவாகிறது…? யாருக்காவது
தெரியுமா?” ஆசிரியர் தனக்கே உரிய
பாணியில் கேட்டார். அணிச்சையாய்
அவ்வப்போது தன் மூக்குக்கண்ணாடியை
சரிசெய்துகொண்டார்.
மாணவர்கள்

மத்தியில் மூச்சு பேச்சில்லை.
ஆசிரியர் தொடர்ந்தார்.

“ஒருவன் தெருவில் நடந்து போயிட்டுருந்தான்.
அவன் போட்டுருந்த சட்டை லேசா கிழிஞ்சுருந்துச்சு.
அதை ஒருத்தன் பட்டிக்காட்டான்
மிட்டாய்கடைய பாக்குற மாதிரி குறுகுறுனு
பாத்துட்டே இருந்தான்.

‘இந்த மாடல் நல்லாருக்கே’னு பாத்தான்.

அடுத்து சட்டைய கிழிச்சே தச்சான்.

இவ்வாறு நாகரீகங்கள் பரிணாமமடைகிறது”
. என முடித்தார்.
நான் அவ்வளவு துணிச்சலானவனெல்
லாம் கிடையாது. ஆயினும் அந்த ஆசிரியர்
மாணவர்கள் எதிர் கேள்வி கேட்குமளவிற்கு
கொடுத்திருந்த சுதந்திரம் என்னை
சட்டென எழ வைத்தது.
“சார் ஒரு டவுட்டு சார்”

“ஏலேய் சொயம்பு ஆச்சர்யமா
இருக்குலே மக்கா. கேளுல”

“சார் நேத்து எங்க தெருவுல ஒரு சின்ன
பய நடந்து போயிட்டு இருந்தான். அவன் நடக்கும்
போதே அவன் போட்டுருந்த டவுசர் உருவி விழுந்துட்டு.
எவனாவது இதை பாத்தா இது கூட புது
ஃபேஷனாயிடுமா?”
வகுப்பரை முழுக்க பலத்த சிரிப்பொலி.

ஆசிரியரும் தன் பங்குக்கு சிரித்துவைத்தார்.

“ஏலே ராசா நீலாம் பெரிய
விஞ்ஞானியாதாம்லே வருவா” என்று கூறி
சிரித்தபடியே என் முதுகில் செல்லமாக
தட்டினார்.

“சரி சிரிச்சது போதும் பாடத்த கவனி” என
ஆசிரியர் கூற வகுப்பரை அமைதியானது.
ஒரே ஒரு மாணவி மட்டும் சிறு சிணுங்கள் போன்ற
சிரிப்பை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பெயர் மணிமேகலை. மேகலா என்று
அனைவரும் அழைப்பர். தெத்துப் பற்களும்,
மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு, வெள்ளை
இந்நான்கு வண்ணங்களையும் ஒன்றாக
உரலில் ஊர வைத்து இடித்தால்
ஒரு நிறம் கிடைக்கும் அந்த நிறம்தான் அவள்
நிறம்.

அடைமழையில் நணைந்த பனை
மரத்தையொத்த அடர் கருப்பு
நிறம்தான் நான். எங்களிருவரையும் ஒருசேரப்
பார்த்தால் திமுக
கொடியையொத்து இருக்கும்.
விஷயத்திற்கு வருகிறேன். அன்று அந்த மாயச்
சிணுங்களின் மந்திரமோ என்னவோ அனுதினமும்
அவளை கவனிக்க ஆரம்பித்தேன். திண்ணமாகச்
சொல்கிறேன் இது காதலில்லை. ஏதோ
அசுரக் காற்றில் உயரேப் பறக்கும் பாலித்தீன்
பையைப் போன்றதொரு நிலை. எப்போது
வேண்டுமானாலும் தரையில் தவழும்
துர்பாக்கிய நிலையில்தான் இருந்தேன்.

பொதுவாகவே இக்கால
மாணவர்கள் போன்றவர்களல்ல அப்போதைய
மாணவர்கள். இப்போது ஒரே இருக்கையில் கூட
ஆணும் பெண்ணும் சேர்ந்தே
இருக்கிறார்கள், நாங்கள் மாணவிகளிடம்
பேசுவதற்கு கூட கூசுவோம், எங்களில் ஓரிருவரே
மாணவிகளிடம் இயல்பாக பேசுவார்கள்.

அவர்களுக்கு நாங்கள் வித்யாசமான
பெயர்களைச் சூட்டி எள்ளிநகையாடுவதும்
உண்டு.

நிலை இவ்வாறிருக்க மனதளவில் சஞ்சலப்பட்ட
பெண்ணிடம் இயல்பாக பேசுவது நடக்கிற
விஷயமா என்ன…?
இவ்வண்ணமே ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம்
வகுப்பு, ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம்
வகுப்பை எட்டியாயிற்று.
எட்டாம் வகுப்பு ஏறத்தாழ இறுதி கட்டத்தை
நெறுங்கியாயிற்று; அவளை உருகி உருகி
காதலிக்கவேண்டும், திருமணம் முடிந்து அவளோடே
வாழ வேண்டுமென்ற
எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது.

ஒருவேளை அந்த வயது அவ்வாறான
நினைப்புக்கு லாயக்கற்றவையோ என்னவோ… ஏதோ
ஒரு மர்ம ஆசை. அதை வார்த்தையால்
வடிப்பதொன்றும் அத்தனை
எளிதானதல்ல.
சுற்றுவட்டார பள்ளிகளையெல்லாம்
இணைத்து கபடிப் போட்டி எங்கள் பள்ளியில் வைத்து
நடந்தது. எங்கள் பகுதியில் கபடிப் விளையாட்டு
அறியாத சிறுவர்களோ, இளைஞர்களோ இல்லை
என்றே சொல்லலாம். தமிழனின்
பாரம்பர்யத்தின் எச்சமான கபடி
விளையாட்டு அவ்வளவு பிரசித்தம் எங்கள்
மண்ணில்…
வாழ்வில் நாம் அதீதமாய் மகிழ்ச்சியில்
திளைத்த நாட்களை நாம் விரல் விட்டு
எண்ணிவிடலாம். அப்படியொரு
நாள் அது.
எங்கள் பள்ளி கபடி அணியில் நானும்
ஒருவன். என் வகுப்பிலிருந்து நான் மட்டுமே.
அன்று போட்டி ஆட்டங்கள் வெகு
உற்சாகமாய் நடந்தது. எங்கள் பள்ளி
என்பதால் எங்கள் அணிக்கு ஏகபோக ஆதரவுக்
குரல். விளையாட்டில் மிகுந்த சிரத்தையோடு இருப்பது
போன்று கடிணப்பட்டு நடித்தேன்.
ஒவ்வொரு முறை பாடிச்
செல்லும்போதும் “மேகலா என்னைப்
பார்க்கிறாள்” என்ற சிந்தனையிலேயே
செல்வேன். எப்படியோ ஓரளவு
சொதப்பாமல் சமாளித்தேன்.
ஒவ்வொரு முறையும் புள்ளிகளைப்
பெறும்போதும் மேகலாவின் கைத்தட்டல் ஒசை
மட்டுமே காதில் ஒலித்தது.
அன்றைய போட்டியில் எங்கள் அணி இரண்டாம்
பரிசு பெற்றது. சாயங்காலம் பரிசளிப்பு
நடைபெற்றது. ஆளுக்கொரு சிறிய
கோப்பையும் சான்றிதழும் கிடைத்தது.

நான் கோப்பையை வாங்கும் போது திடீரென
பலத்த கரகோசை. எனக்கு ஆச்சர்யம். எனக்கு
மட்டும் ஏன் இத்தனை பெரிய கைத்தட்டல்.
இரையை வேகமாக உண்டு பின்பு மெதுவாய்
அசைபோடும் மாடுகளைப் போல அங்கு கைத்தட்டிய
குழுவை யோசித்துப் பார்த்தேன்.
அவர்கள் அனைவரும் என் வகுப்பு மாணவிகள்.

மிக உற்சாகமாய் கைத்தட்டியது சாட்சாத்
மேகலாவேதான். அதே தெத்துப்பற்கள்
மின்ன பிரகாசமாய் சிரித்தபடி
ஓ……வென கூச்சலிட்டவாறே…
நான் எங்கேயோ மேலே பறந்தேன். பெருமிதம்
தாங்கவில்லை, மகிழ்ச்சி கட்டவிழ்த்து விட்டக்
காளையைப் போன்று கரைகடந்து ஓடுகிறது.
இரவெல்லாம் தூக்கமே இல்லை. நான்
விளையாடிய சிறப்பான சில தருணங்களும்,
மேகலாவின் தெத்துப்பல் சிரிப்பும் என்
உறக்கத்தை முற்றுலுமாய் சிதைத்துவிட்டது.
எட்டாம் வகுப்பு முழுவாண்டுத் தேர்வுக்கு சில
நாட்களே உள்ள நிலையில் பிரியாவிடை நிகழ்ச்சி
ஏற்பாடானது. குளிர்பாணங்களும்,
நொறுக்குத்தீணிகளுமாக விழா
வயிற்றுக்கு வாட்டமின்றி
தொடர்ந்தது.

மாணவர்கள் ஒருவருக்கொருவர்
பரஸ்பர அன்பை காகித்தில்
எழுதிக்கொடுப்பது வழமை.
பல நண்பர்கள், நண்பிகள் எழுதித் தந்தனர் .
என் எதிர்பார்ப்பு மேகலா. கடைசி
பேருந்திற்காக ஆளரவமற்ற கும்மிருட்டு
நிறுத்ததில் நிற்பது போன்று தவித்து நின்றேன்.

யாரிடமோ எதையோ பேசி மிச்சம் வைத்தவாறு
படபடவென வந்தாள் மேகலா.

“ஏய் சொயம்பு என் நோட்டுல ஏதாவது
எழுதி தா” என்றாள்.
நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.
ஆறுதலடைந்தேன்.

“தா எழுதித்தாரேன். ப்டியே நீயும் எனக்கு எழுதி
தா” என்று என் கையிலிருந காகிதக்
கொத்தை அவளிடம் அளித்தேன்.
அவள் எழுதிக்கொண்டிருந்தாள்.
‘எல்லோருக்கும் எப்படி எழுதிக்
கொடுத்தேனோ அப்படியே எழுதலாமா,
அல்லது அவளின் மீதான ஈர்ப்பை இதன்மூலம்
தெரியப்படுத்தலாமா என சில விநாடி
பட்டிமன்றம் மனதிற்குள் வெகு சிறப்பாய்
நடைபெற்று ஒரு தீர்மானத்திற்கு வந்தது.

“ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம்
வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம்
வேண்டும் ”
என எழுதினேன். எஜமான் படம்
வெளியான நேரம் அது
என் காகிதக் கொத்தை என்னிடம்
கொடுத்தாள். திறந்து பார்த்தேன் .
“Best of luck”
என்றும் அன்புடன் மேகலா என்று
எழுதியிருந்தாள்.
அவளுக்கு நான் எழுதியதை அவளிடம்
கொடுத்தேன். அவள் திறந்து
பார்க்காமலே “வரேன்” என
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

“பார்க்காமலே சென்றுவிட்டாளே! எப்போது
பார்ப்பாள்? நிச்சயம் இரவாவது
பார்ப்பாள்.
சிறு சிறு தீவுகளை சுனாமிப் பேரலை சூழ்ந்ததைப்
போன்று மனதிற்குள் அவளே முழுவதுமாய்
ஆக்கிரமித்திருந்தாள்.

மறுநாள் வானம் எப்போது
வெளுக்குமென இரவு முழுக்க மனசு
ஏக்கத்தில் தவித்தது தூக்கத்தை
தொலைத்து.
மறுநாள் தார்சாலையில் வெள்ளை
சாயம் பூசியது போன்று சற்று அதிகமாகவே
பவுடரை பூசி பள்ளிக்கு சென்றேன். மகிழ்ச்சி,
பதட்டம், அசட்டுத்துணிவு, ஒருவேளை
நிராகரிக்கப்பட்டால்? என்ற கவலை என
அனைத்து உணர்ச்சிகளும்
ஆட்கொணர்வு மனுவளித்து என்னை
ஒரு வழியாக்கியது.
நான் எனது வகுப்பரை வாசலிலேயே நின்றேன்.
இன்று சற்று சீக்கிரமாகவே வந்துவிட்டேன்.

மாணவர்கள் ஓரிருவரே வந்திருந்தனர். அவள்
வருகைக்காய் வாடி நிற்கும் கொக்கைப்
போல நின்றுகொண்டிருந்தேன்.
ஒருவழியாக வந்தாள். அதே
ஆட்கொணர்வு தம்பட்டமடிக்கத்
துவங்கியது. என்னை நெருங்கிவிட்டாள்.
நான் அவளையே
வெறித்துக்கொண்டிருந்தேன்.
இயல்பாய் ஒரு புன்னகையை உதிர்த்து என்னை
கடத்து சென்றாள்.
அந்த புன்னகையே எனக்கு புதையல் கிடைத்தது
போன்றதொரு மகிழ்ச்சியை தந்தது.

முழுவாண்டுத் தேர்வுக்கு ஓரிரு நாட்களே உள்ள
நிலையில் வகுப்பரையில் எப்போதுமே
படித்துக்கொண்டேயிருக்குமாறு
அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களும்
நிர்பந்தித்தனர்.
புத்தகத்தை மேசையில் வைத்துக்கொண்டு
கண்களை மேகலா மீது வைத்திருந்தேன்.

அவளும் என்னை அவ்வப்போது நிமிர்ந்து
பார்ப்பாள். நான் அவளையே பார்ப்பதை
அவள் நெறுங்கிய தோழியிடம் ஏதோ
செய்கையில் சுட்டுவாள்.
நானென்ன அதற்கெல்லாம்
அஞ்சிய ஆளா என்ன? என் பார்வை அவளை
விடுத்து மாறுபடாது ஆசிரியர்
கண்டுபிடிக்காத வாறே சாதுர்யமாக.
.

இவ்வாறே சுவாரஸ்யமாக
சென்றுகொண்டிருந்தது. தேர்வு
நாளும் வந்தது. அவளை படித்தேன். தேர்வில் ஏதோ
எழுதினேன்.

கடைசி நாள் சமூகவியல் பரீட்சை நடைபெற்றது.
நான் எழுதியும் எழுதாமலும் அவசர
அவசரமாக எழுதி தேர்வுத்தாளை
கண்காணிப்பாளரிடம் அளித்துவிட்டு
வெளியேறினேன்.

இன்று அவளிடம் எப்படியாவது முழுவதையும்
பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
அவள் வருகைக்காக பள்ளியின் முகப்பு
வாசலின் அருகேயுள்ள ஒரு வேப்ப மரத்தின் மீது
சாய்ந்து நின்றுகொண்டிருந்தேன்.
பரீட்ச்சை

முடிந்ததாக பள்ளியின் மணி ஓசை
கூறியது.

வந்துகொண்டிருந்தனர். எனது
தோழர்கள் சிலர் எனக்கு கையசைத்த வாறே
சென்றுகொண்டிருந்தனர்.
ஓரிருவர் என்னை நோக்கி வந்தனர். அவர்களிடம்

“நீங்க போங்க நான் வரேன்” என்பது போல்
கையசைத்து சாமர்த்தியமாக நழுவினேன்.

தன் தோழி ஒருத்தியிடம் வினாத்தாளை காட்டி
ஏதோ பேசிக்கொண்டே நடந்து
வந்துகொண்டிருந்தாள் அதே
தெத்துப் பற்கள் மின்ன,
மென்மையான கண்கள்
கொஞ்ச. மரத்தில் சாய்ந்திருந்த
நான் அவளை பார்ந்ததும் எழுந்து ஒழுங்காக
நின்றேன்.

அங்கிருந்தே யதேச்சையாய் என்னைப்
பார்த்துவிட்டாள். அந்த சிரிப்பு இன்னும்
வசீகரமானது. அவள் என்னையே
பார்த்துக்கொண்டே வந்தாள்.
வாய் ஏதோ அவள் தோழியிடம்
பேசிக்கொண்டே இருந்தது.
என்னை நெருங்கினாள்.

“மேகலா…” அழைத்தேன் நான்.”.

“நீ போ நான் வாரேன்” என தன் தோழியிடம்
கூறிவிட்டு என்னிடம் வந்தாள்.

“சொல்லு சொயம்பு. பரிச்ச
எப்டி எழுதியிருக்கா?”

“ம்ம் ஏதோ எழுதிருக்கேன். ஒங்கிட்ட ஒண்ணு
பேசணும் ”

அவள் கண்களில் லேசான நாணம், இதழில்
லேசான துடிப்பு, முகம் லேசாக சிவந்ததிருந்தது.
“ம்ம் சொல்லு சொயம்பு”
எனக்கு பதட்டமோ, பயமோ எதுவுமே இல்லை.
எப்படியாவது சொல்லிவிட
வேண்டுமென்ற படபடப்பு மட்டுமே இருந்தது.

“நா ஃபேரவல் டே’யில உன் நோட்டுல எழுதி தந்தத
படிச்சியா?”

“ஆமா படிச்சேன்”

“ஒண்ணுமே சொல்லல…?”

“ம்ம்ம்… சொல்லியேன். அடுத்து எந்த
ஸ்கூல்ல படிக்க போறா?”

“நீ எங்க படிக்க போறா?”
பள்ளியின் பெயரைச்
சொன்னாள்.

“அப்ப நானும் அங்கதான் படிப்பேன்”

“நம்ம ஒம்போதாம் வகுப்புல சேந்தததும்
சொல்லியேன்”

“அது வரைக்கும் எப்டி தாக்குபிடிக்க போறேன்?”
சட்டென மனதிற்குள் வந்தது அதுதான்.

“சரி உன் வீடு எங்க இருக்கு?”

“எதுக்குலே?”

“இல்ல லீவுல எப்பயாவது வந்தா
பாக்கதான்”

“நான் லீவுல தூத்துக்குடிக்கு எங்க பாட்டி
வீட்டுக்கு போயிருவேன். லீவு முடிஞ்ச
பொறவுதான் வருவேன்”

“ம்ம்ம்… வா ஒனக்காக காத்துட்டே
இருப்பேன்………..
லேசான ஒரு சிணுங்கள் சிரிப்பு.

“சரி வீட்ல தேடுவாவ நான் வாரேன் என்ன”

என்றவாறே என் பதிலுக்குக் காத்திராமல்
சென்றாள்.
போகும் போது அவ்வப்போது திரும்பித் திரும்பி
பார்த்தாள் அதே தெத்து பற்கள்
மின்னுகிறது, அந்த கண்கள் ஏதோ கவிதை
வாசிக்கிறது. என் வண்ணத்துப்பூச்சி என்
இதயத்தில் தன் சாயத்தை பூசிவிட்டு
செல்கிறது.
இரண்டு மாத விடுமுறையில் அப்பாவோடு
தோட்டத்திற்கு செல்வேன். அங்கே கள்ளிச்
செடிகள்தான் வேலிகள். அந்த கள்ளிச்
செடிகளிலெல்லாம் நாட்டுக்
கருவேலமர முள்ளெடுத்து அவள் பெயரை
கிறுக்கினேன். ஏறத்தாழ கிறுக்கனாகவே
ஆனேன்.
இரண்டு மாதத்தில் அவள் நினைவின்றி ஒரு
நாளில் ஒரு மணி நேரம் கூட நகராது.

ஒரு வழியாக பள்ளியை திறந்துவிட்டார்கள் .
ஒன்றாம் வகுப்பு முதலே விடுமுறை முடிந்து பள்ளி
திறக்கும் போது என் கரம் பிடித்து என் தந்தை
நடக்கும் போது சுடலை மாடனுக்கு கெடா
வெட்ட அழைத்து செல்வது போன்றே
எனக்கு தோன்றும். ஆனால் இன்று
இளவரசனுக்கு பதவிப்பிரமானம் செய்து
வைக்க அழைத்து செல்வது போன்ற ஒரு
உணர்வு.

பள்ளியில் சேர்ந்த அந்த கணம் முதல் என்
மேகலாவையே தேடினேன். என் வகுப்பில் அவள்
இல்லை. 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் உண்டு.
ஒவ்வொன்றாய் தேடினேன். அவள்
இல்லை.

வாழ்கையில் முதன் முதலாய் இதயம்
கணத்தது. மறுநாள் தேடினேன். அவள்
வரவில்லை. இவ்வாறு ஒரு வாரம்
சென்றது. என் மேகலாவை மன்னிக்கவும்
மேகலாவை காணவில்லை.
அவள் தோழி 9C வகுப்பில் இருந்தாள். மதிய
உணவு வேளை ஒன்றில் அவளிடம் கேட்டேன்.
அப்போதுதான் “அவள் அந்த ஊர்
தபால்காரர் மகள் என்றும், அவருக்கு
இடமாற்றம் கிடைத்து வெளியூர்
சென்றுவிட்டதாகவும் கூறினாள்.
அணை மீறும் நீரைப்போன்று கட்டுப்படுத்த
இயலாமல் கண்ணீர் இமை மீறியது. அந்நேரம்
மட்டுமல்ல அன்று முதல் பல நாட்கள்.

ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள
முடியாத வயது பாவம் என்ன
செய்யும்…?
மேலே போகும் எதுவும் கீழே விழும் என்பது நியூட்டனின்
விதி மட்டுமல்ல மனிதர்களின் தலைவிதியும்தான்
. நான் மட்டும் விதிவிலக்கா என்ன…
நினைவுகள் எப்போதுமே விநோதமானவை…
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து
அழவைக்கும், சில நேரங்களில் அழுத நாட்களை
நினைத்து சிரிக்க வைக்கும். அவை சுவடுகளாக
சுவையாகவும், சுமையாகவும் அவ்வப்போது
சிலிர்ப்பூட்டும்…

அன்புடன்

செ. இன்பா

 

 

 

 

 

 

 

பேரச்சம்..!!

shutterstock_185032865-700x467

 

“சார் எங்கே எறக்கி விடணும்?”

“அந்த முக்கு ரோட்டுல விடுப்பா”

“சரிங்க சார்”

மகிழுந்து சர்ரென பாய்ந்தது. சுமார்
பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

“சார் இங்கதான?”

“ஆமாப்பா. ரொம்ப நன்றி.
என்னைய கொண்டு விட்டத
யாருகிட்டயும் சொல்லிடாத.
யாராவது கேட்டா நா
சொல்லிக்கிறேன்”

“சரிங்க சார். இந்த ராத்தியில அதுவும்
பயங்கர இருட்டா இருக்கு, வழியில
நெறயா நாய்ங்க இருக்கும், தனியா
வேற…”

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சன
இல்லப்பா. நா பாத்துக்குறேன்”

“சரிங்க சார் பாத்து போங்க”

“ம்ம்ம்”

கும்மிருட்டு, ஆளரவமற்ற பாதை, தமிழகத்தின்
பிற பகுதிகளை போன்றே நாய்கள்
தொல்லை.
மெல்லிய அச்சம் குடிகொண்டது
பொழிலனுக்கு.
இருந்தும் அச்சத்தை விட அவன் மனைவி

“ஏங்க எந்நேரமானாலும் பரவால
வந்திடுங்க”
என கூறியது காதில்
ஒலித்துக்கொண்டே இருந்தது.

“கல்யாணமாகி அம்பது நாளுதான்
ஆகுது. அதை கூட புரிஞ்சுக்காம இந்த மங்குனி
மேனேசர் நைட் டூட்டி போட்டுட்டானே படுக்காளி பய.
பகல்ல வேற வூட்டுல நெலவரம் சரியில்ல.

ச்சே பத்து ரூவா சம்பாதிக்க என்ன
பாடுலாம் பட வேண்டியிருக்கு.
விறுவிறுவெற நடந்துகொண்டே
கடிந்துகொண்டான்.
அழகிய கிராமம்தான் ஆயினும்
இரவென்றால்… சற்றே திகில் வருவது
இயல்புதானே? நெறுக்கமான
வீடுகளில்லா வீதிகள். சிறிது தூரம்
நடந்துதான் செல்ல முடியும். மின் தேவைக்கு
என கூறி அணுஉலைகள் கோலோச்சும் இந்நாட்டில்
கிராமங்களின் இருட்டுகள் நாம்
அறிந்ததுதானே?

40% ஆசையும், 20% வீரமும் மீதமுள்ள 40%
அச்சத்தை வென்று பொழிலனை
வேகமாக நடக்க வைத்தது.
ஊஊஊஊ…வென நாய்கள் எங்கிருந்தோ
ஊளையிடும் சப்தம் பொழிலன்
காதுகளில் ரீங்காரமிடுகிறது.
அச்சத்தின் அளவு சற்று அதிகமானது. அரை
வட்ட நிலவொளி மட்டுமின்றி வேறேதும்
வெளிச்சமில்லை.

“திடீரென நாய்கள் முற்றுகையிட்டால்
என்ன செய்வது? ம்ம்ம்… கற்களை எடுத்து
கையில் வைத்துக்கொள்வோம்”

நடக்க நடக்க சில பல கற்களை சேகரித்து கையில்
வைத்துக்கொண்டான்.
வீசும் காற்றின் வேகம் புதிய திகிலிசையை தந்தது.
சர்ரட்.. சர்ரட்…சர்ரட்..
அவன் நடக்கும் ஓசையே அவனுக்கு பல திகில்
படங்களின் பின்னணி இசையை நினைவூட்டியது.
நாய்களின் ஊளைச் சத்தம் சற்று வேகமாக
கேட்டது.
நாற்புறங்களிலும் இருட்டு. அருகில் வீடேதும்
இல்லை. மருந்துக்கூட உதவிக்கு ஆட்களில்லை.

“ஊளையிடும் சத்தத்தை பார்த்தால் எப்படியும்
நான்கைந்து நாய்கள் இருக்கும். எப்படி இந்த
கொடூர பயத்திலிருந்து தப்புவது?

“அப்பனே முருகா… என்னய நல்லபடியா
வீட்டுல கொண்டு சேத்துரு வர்ர
வெள்ளிக்கிழமையே நானும்
எம்பொண்டாட்டியும் உன்
சன்னதிக்கு வாரோம்யா..”

முன்னோக்கி செல்ல செல்ல
நாய்களின் ஓசை இன்னும் வேகமாக
எழும்பியது.
இருபதடி தூரத்தில் அவன் எண்ணியபடியே
நான்கைந்து நாய்கள்
நெஞ்சில் நான்கு கிலோ சுத்தியலை வைத்து
அடிப்பது போன்று இதயம் படபடத்தது. “நம்ம
ஓடுனாதான் நாய் நம்ம வெரட்டும்னு
ரண் படத்துல ரகுவரனே
சொல்லியிருக்காரு. எந்த காரணத்தை
கொண்டும் ஓடிடாதேடா
பொழிலா..”

நாய்கள் இவனை நோட்டமிட்டது.. இவனுக்கு கை,
கால்கள் உதர ஆரம்பித்துவிட்டது. “ஒருவேளை
என்னய நோக்கி பாய்ஞ்சுருமா… முருகா
காப்பாத்து”

ங்ங்ர்ர்ர்ர்ர்ரென அதிலொரு
செவலை நாய் இவனை பார்த்து உறுமியது.
இவனுக்கு அடிவயிற்றில் ஏதோ
கடமுடாவென சத்தம் கேட்டது. கையில்
வைத்திருந்த கற்களை தயார் நிலையில்
வைத்துக்கொண்டான்.
நாய்கள் பெரும் சத்தத்துடன் குரைக்கத்
துவங்கியது. பொழிலன் முன்னேறுவதை
நிறுத்தவில்லை.

” நாய்களும் இவனை நோக்கியே முன்னேறியது.
பேரச்சத்தின் வெளிப்பாடாக குளிர்ந்த
காற்றுகள் வீசிடினும் பொழிலன்
உடலில் வெப்பம் அனலாகி வியர்வை
வழிந்தோடியது.
நாய்கள் இவனை தொடும் அளவிற்கு
நெறுங்கி பெரும் ஓசை எழுப்பியது.
கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளை போல
நடுக்கத்தை உடலில் காட்டாமல் நடையை
தொடரந்தான். நாய்களும் இவனை
பின் தொடர்ந்தது.
மரண பீதியிலும் தளராமல்
நடத்துகொண்டே இருந்தான்.

சிறிய தூரம் கடந்ததுமே நாய்கள் அவ்விடத்திலேயே
நின்றுகொண்டது.

ஏற இறங்க மூச்சி வாங்கியபின் சற்று
ஆசுவாசமாகிக்கொண்டான்.
‘அப்பனே முருகா எனக்கு பொறக்க
போற புள்ளைக்கு உன் கோயில்லயே மொட்ட
போடுறேம்பா” வேண்டிக்கொண்டான்.

மீண்டும் மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.
ஆசையின் அளவு இப்போது 60% ஆனது. இன்னும்
கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு
போயிடலாம். அப்புறம்…… மனம் முழுக்க விரக
தாபம்.
நடை இன்னும் வேகமானது. தூரத்தில் ஒரு
தெரு விளக்கு எரிந்துகொண்டிரு
ந்தது.
அது ஒரு முச்சந்தி. அந்த விளக்கின் ஒளியில்
சிவப்பு ஆடையணிந்த ஒரு உருவம் தெரிந்தது.
கூர்ந்து நோக்கினான். முகம் மட்டுப்படவில்லை.
உருவம் மட்டுமே தெரிந்தது.

“இந்நேரத்துல இங்க யாரு இருப்பா? நம்மூரு
பொம்பளைங்களுக்கு இந்த ராத்திரி
இதுல நிக்கிற அளவுக்கு துணிச்சல் கிடையாதே..
ஒருவேளை…
இந்த ஏரியாவுல எப்பயும் பத்து காவாளி
பயலுக கும்மாளம் போடுவானுங்க. அவனுங்க
எதுனாவது ஐட்டத்த தள்ளிட்டு
வந்துட்டானுங்களா…?”
நெறுங்கி வர வர உருவம் இன்னும்
பிரகாசமானது. “அட கருமமே இன்னைக்கு
யாரு மொகத்துலடா முழிச்சேன்?”

இன்னும் சற்று தூரம் சென்றான். உருவம்
தத்ரூபமாக தெரிந்தது. இவனுக்கு
உடலெல்லாம் சிலிர்த்தது.
சிவப்பு ஆடையில் சிங்காரமான தோற்றம்.
வறுமையும், செழிப்பும் ஒன்றுகூடிய
வதவதப்பான தேக அமைப்பு.
முகத்தை கூர்ந்து கவனித்தான். தன் கருகரு
கூந்தலை முகத்தின் மீது படரவிட்டிருந்தாள்.

“வித்யாசப்படுதே!”
மிக அருகில் வந்துவிட்டான். மனதில் டிங்டாங்
அச்ச மணி மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.
தலையை மேலும் கீழுமாக அசைத்து “என்ன?” என
கேட்டாள். பொழிலன் பதிலேதும்
பேசாமல் தவறு செய்து ஆசிரியரிடம்
மாட்டிக்கொண்ட மாணவனைப் போல
விக்கி விறைத்து நின்றான்.
இகாகாகாவென கெக்கலிட்டு
சிரித்தாள்.

“ஆஆஆஆஆஆஆஆ பேயி… என அலரியடித்து
பின்னோக்கி ஓடினான் பொழிலன். சிறு
தூரம் சென்று திரும்பி பார்த்தான். அவள்
அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். “இதை தாண்டி பின்னால்
சென்றால் நாய்கள். முன்னோக்கி
சென்றால் பேய். என்ன செய்வது?
பொழிலனின் கையறு நிலை கண்டு
கதிகலங்கி நின்றான்.

“உண்மையாவே இது பேய்தானா? பேய் அப்டீனு
ஒன்னு உண்டா? செத்து போனா பேயா
அலைவாங்களா? ஈழத்தில் ஒன்னே முக்கால்
இலட்சம் பேரை கொன்னானுங்க.
அவங்களாம் பேயா வந்தால் ராசபக்சே
இன்னுமா உசுரோட இருப்பான்? ஆனாலும்
பேய் இருக்குதுனு அமெரிக்கா காரனே
ஒப்புக்கொண்டுட்டானே? மிக
முக்கியமானது இந்த நேரத்தில் ஒரு பெண்
எப்படி இங்கே?”

பல கேள்விகளுக்கிடையே பேய்தான்
என தீர்மானத்திற்கு வந்தான். சரி அப்படியே
பேயா இருந்தாலும் இது யாரா இருக்கும்?
நம்ம ஊர்ல இப்படி ஒருத்தி இல்லையே? இவள்
அங்க அசைவுகளை எங்கேயே பார்த்திருக்கிறேனே!
எங்கே? எங்கே? எங்கே…?
அய்யோ…! இயல் தானே இவள்? ஆம் என்
இயலிசையே தான். நெஞ்சில் அச்சம் மறைந்து
கண்ணில் நீர் நிறைந்தது பொழிலனுக்கு.
___________________________________
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
(பின்னோக்கி செல்வோம்)
நடுக்கத்தோடு கை பேசியில் பத்து எண்களை
அழுத்தினான் பொழிலன்.
டிரிங்…. டிரிங்…. டிரிங்… சில பல மணியடித்தது.

“அலோ யார் நீங்க”
(மாதா கோவில் மணி ஓசை போல அத்தனை
சுகமான குரல்)

“அலோ நீங்க யாரு?”
சில நொடிகள் பதிலில்லை.

“அலோ சார் நீங்கதானே போன் போட்டீங்க?
யார்னு சொல்லுங்க இல்லேனா போன
வையுங்க”

“நான்… நான்…”

“ஏலேய் எவம்ல நீ? வந்தேன்…
வெளுத்துபுடுவேன் ராசுக்கோல்”

“அலோ என்ன திடீர்னு ஆம்பள குரல்ல பேசுறீங்க?
நீங்க இயலிசை தானே?”

“லேய் நான் அவ அப்பன் பேசுதேம்ல, நீ
யாருலே?”
(அட கருமமே அப்பனா)

“நான்… நேத்து பொண்ணு பாக்க
வந்தேம்லா. பொழிலன் பேசுதேன்”

“அட நீங்களா? மொதல்லயே
சொல்லியிருக்கலாம்ல. என்ன
விசயம் சொல்லுங்க?”

“இல்ல இயல் கிட்ட கொஞ்சம்
பேசணும்… அதான்”

“அதான் கல்யாண தேதிலாம் குறிச்சாச்சே
அப்புறம் ஏன் இவ்ளோ தயக்கம்? இந்தா
கொடுக்குறேன். ஏம்மா இயலு மாப்ள
உங்கட்ட ஏதோ பேசணுமாம்.”

“அலோ. சொல்லுங்க நான் இயல்
பேசுதே”

“இல்ல பேசணும்னு தோணுது. ஆனா என்ன
பேசுறதுனு தோணல. உனக்கு எதாவது
தோணுதா?”

“ஆமா.எனக்கு ஒன்னு தோணுது”

“என்ன தோணுது?”

“நீங்க ரொம்ப தைரியசாலினு தோணுது”

“எப்படி கண்டுபிடிச்ச?”

“இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு? நேத்து
நான் உங்கள பாத்துட்டே இருந்தேன். நீங்க
யாராவது பாக்குறாங்களானு பாத்து
பவ்யமா எப்பயாவது லுக்கு விட்டீங்க.
அப்புறம் நீங்க தனியா பேச ஆசைப் படுவீங்கனு
ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா
நீங்க வரவே இல்ல. உங்க முகம் வேற
படபடப்பாவே இருந்துச்சு.”

“(அடங்கொய்யால என்னய
பயந்தவன்னு சொல்றததான் இவ்ளோ
பில்டப்பா சொன்னியா?)”

“சரி இயல் சொல்லு. என்னய உனக்கு
பிடிச்சிருக்கா?”

“எனக்கு உங்களை பத்தி
இன்னொன்னும் தோணுதுங்க”

“என்ன என்ன சொல்லு”

“நீங்க ஒரு ட்யூப் லைட்னு தோணுது”
(உஷ்ஷ்ஷ்….)

“ஏன்? எனக்கு உன்னய ரொம்ப
பிடிச்சிருக்கு. நீ எனக்காகவே பொறந்த
பொண்ணு”

“நான் பொண்ணு இல்லங்க. உங்க
பொண்டாட்டி”
பேச்சு இனிக்க இனிக்க நீண்டுகொண்டே
சென்றது.

திருமணம் நான்கு
மாதத்திற்கு பிறகுதான் என்று இரு
வீட்டாரும் பேசி வைத்திருந்த நிலையில்
இவ்விருவருக்கும் கைபேசியே கடவுளானது.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை அயராது
உழைத்தார்கள் ஏர்டெல்
கம்பெனிகாரனுக்காக.
இருவருக்குள்ளும் அன்பு அதீதமானது. எல்லா
ஆண்களையும் போல பள்ளி, கல்லூரி என பல
கட்டங்களில் பல பெண்களை
கடந்திருந்தாலும் மனைவி என தெரிந்தால்
அந்த அன்புக்கு ஈடு இணை ஏது?

அளவுக்கதிகமாய் காதலித்தான்
இயலிசையை.
இருபத்தி நான்கு மணி நேரமும் அவன் உதடும்,
மனதும் அசைபோடும் ஒரே பெயர் “இயல்”
இயலின்றி இன்பமில்லை, இயலின்றி இச்சையில்லை,
இயலின்றி வாழ்கையே இல்லை, இயலின்றி எதுவுமே
இல்லை. இயல், இயல், இயல் மூச்சிக்காற்றில்
கலந்துவிட்டாள் அவள்.
கைபேசி மணி ஒலித்தது.
இயல்தான். “அலோ செல்லம்”

“ம்ம்ம் சார் என்ன சாப்டீங்களா?”

“ஏன். சாப்டலேனா சோறு போட போறியா?”

“வீட்டுக்கு வாங்க போடுறேன்”

“அப்புறம் வந்துருவேன்”

“தைரியமிருந்தா வாங்க” புன்னகைத்தாள்.

“வீட்ல அப்பா இல்ல?”

“ம்ம்ம்…. இல்ல்ல…”
என்று கூறி வெக்கத்தில் கைபேசியை
வைத்துவிட்டாள் இயல்.
இயல் ஊருக்கும் பொழிலன் ஊருக்கும்
ஏறத்தாழ 5 மைல்கள்.

நண்பன் ஒருவனிடம் மோட்டார் சைக்கிளை
வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
இயல் வீடு சென்றடைந்தான்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டான்.

ஏதோ நீதிமன்றம் செல்வதை போன்று
பவ்யமாக சென்றான்.
சிவப்பு நிற சுடிதாரில் சுந்தரியாக காட்சி
தந்தாள் இயல்.
கபடமற்ற குழந்தையின் முக மலர்ச்சியோடு அவன்
வருவதை பார்த்து ரசித்துக்
கொண்டிருந்தாள்.

“உக்காருங்க”

“ம்ம்ம்… எ…ன்ன வரச் சொன்ன?”

“சரி நீங்க உங்க
பொண்டாட்டியைதானே பாக்க
வந்தீங்க? ஏதோ அம்மாவை பாத்த மந்திரி
மாதிரி நடுங்குறீங்க.”

“சரி சரி கேவல படுத்தாதே.”
குபுக்கென்று ஒரு சிரிப்பை தெளித்தாள்
இயல்.

“முதல்முறையா ஒரு பொண்ணு கூட
தனியா…”

“மறுபடியும் சொல்றேன். நான்
பொண்ணு இல்ல உங்க
பொண்டாட்டி”
உள்ளூர மனமகிழ்ந்தான்.

“சரி கொஞ்சம் தண்ணி
கொடு செல்லம்”
கொலுசொலி முழங்க
வசீகரமாக நடந்து சென்றாள்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே வீட்டுச்
சுவற்றில் தொங்கவிடப்பட்ட
புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான், அவன் செவிகள் அவள்
வருகிறாளா என அவளின்
கொலுசொலியை கவனித்துக்
கொண்டிருந்தது.
ஒரு குவளை நீரோடு தேவதை போல வந்தாள்
பதட்டத்தோடு கையிலிருந்து நீரை வாங்கினான்.
கரங்களிரண்டிலும் லேசான உரசல். உடலில்
வெப்பம் மெல்ல பரவியது
பொழிலனுக்கு.”

“அப்பா எப்போ வருவாரு?”

“தெரியல. சந்தைக்கு போயிருக்காரு. ஒருவேளை
சாயந்திரம் ஆகும்”

“ம்ம்ம்… நான் வரட்டுமா?”
மனசே இல்லாமல். மனசுக்குள்
திட்டிக்கொண்டே

“ம்ம்ம்” என்றாள்.

“ம்ம்ம்… இயல்… ஒன்னு கேக்கணும்.”

“என்ன?”

“இல்ல… அது வந்து… இது வரைக்கும் இப்படி
ஆனது இல்ல. எப்படி கேக்குறதுனு தெரியல.
ஒரு பொம்பள புள்ளகிட்ட இத கேக்குறது
தப்புதான். ஆனா ஆசையா இருக்கு”

“என்ன முத்தம் வேணுமா?”

“புருவத்தை உயர்த்தினான். கற்பூர புத்தி
உனக்கு”

“அதெல்லாம் கிடையாது போங்க.எல்லாம்
கல்யாணத்துக்கு அப்புறந்தான். இன்னும்
ஒரு மாசம்தான இருக்கு.
அப்புறமென்ன?”

“போன்ல மட்டும் கொடுக்குற. இப்ப
மாட்டேங்குற”

“உங்களுக்கா கொடுத்தேன்?
போனுக்குதானே கொடுத்தேன்”

“சரி இன்னும் தாகமாதான் இருக்கு
கொஞ்சம் தண்ணி கொடு”

சொம்பு தண்ணீரோடு அருகில்
சென்றாள். தண்ணீரை வாங்குவது போல்
அவள் கரத்தை பற்றினான்.
செய்வதறியாது
“அய்ய விடுங்க யாராவது வந்திட போறாங்க
என்று கூறும்போதே இறுக அணைத்தான்.
அழுத்தமாக கன்னத்தில்
முத்தமொன்றை பதித்தான். இரு
உடல்களின் நெருக்கத்தால் இரத்த
நாளங்கள் பித்து பிடித்து விளையாடின.
இரு உடலும் ஒன்றையொன்று
பின்னிக்கொண்டன.
கோதையவள் இடையை பற்றினான், கோவை இதழை
கவ்வினான். இராட்சத ஆசை அவனை
விழுங்கும் நேரத்தில்.
“ச்சீ போதும் விடுங்க. என்ன இது அசுரத்தனமா?
போயிட்டு வாங்க அப்பா வந்திருவாங்க”
மனமே இல்லாமல்தான்
சொன்னாள்.

சரியென தலையசத்து கிளம்பினான்.
அன்று இரவு இருவருக்குமே உறக்கமில்லை. முத்த
சத்தமும், ஒட்டிய தேகமும் இருவருக்கும் மூளையில்
புரண்டு விளையாடி முழித்திருக்கச் செய்தது.
மூடிய கண்களுடன் விழத்துக்கொண்டு
இருந்தார்கள்…
“ஐயோ… இன்னும் ஒரு மாதம் உள்ளதே! இந்த
ஒரு ராத்திரிய தாண்டுறதே ஏழு கடலினை
தாண்டுறது மாதிரி இருக்குது இன்னும் முப்பது
நாட்கள் மூச்சு முட்டுதே ஆண்டவா…!
வாழ்கை என்றால் இதுதான் என மிகுந்த
மகிழ்ச்சியோடு நகர்ந்தது.

“ஏலேய் விசயம் தெரியுமா?”
பொழிலனின் தாய் ராகம்
இழுத்தாள்.’

” தெரியாது என்ன விசயம்மா?”

“ஒனக்கு பொண்ணு பாத்தோம்லா?
அவ அப்பங்காரன் போன் பண்ணினான்”
முகமலர்ச்சியோடு “என்னம்மா
சொன்னாரு?”

“அது ஒன்னுமில்ல. அந்த புள்ள நகை எல்லாம்
அடவு வச்சிருந்தானாம். தோட்டத்துல
ரெண்டாயிரம் வாழை போட்டுருந்தானாம். வெட்டுக்கு வர்ர நேரத்துல எல்லாம்
காத்துல முறிஞ்சி போச்சாம் வாழைய
குத்தகைக்கு கொடுத்துருப்பான் போல.
இப்ப குத்தவகாரன் பத்து பைசா தர முடியாது
உன் வாழைய நீதானே வச்சிக்க. தந்த
அட்டுவான்ச திருப்பி தா’னு கேக்கானாம்”
பொழிலன் முகம் மாறிது.”

“ம்ம்ம் பொரவு?”

தாய் தொடர்ந்தாள்
“ஏற்கனவே கூட்டுறவுல நெறயா கடன்
இருக்குதாம். இந்த வாழைய நம்பிதான்
கல்யாணத்த பேசியிருக்கான். இப்ப பேங்கு
காரன் கடன கட்ட
சொல்றானாம், வாழையும்
எல்லாம் சீரழிஞ்சி போச்சு. பாவம் என்ன
செய்யனு தெரியாம கல்யாணத்த
அப்புறம் வச்சுகிடலாம்னான்”

“நீ என்ன சொன்ன?” கோபமாக
கேட்டான் பொழிலன்.

“நான் கல்யாணத்துக்கு இன்னும் இருவது
நாளுதான் இருக்கு.
சொந்தகாரவக கிட்டலாம்
சொல்லியாச்சு. இனி ஒன்னும்
செய்ய முடியாது
எங்கனயாவது கடனவுடன பாத்து
கல்யாணத்த நடத்துனு சொன்னேன்.”

“லூசாம்மா நீ?
கொஞ்சநாள்கழிச்சி கல்யாணம்
பண்ணா நா ஒண்ணும்
கெழவனாயிர மாட்டேன்”
என அருகிலிருந்த நாற்காலியை மிதித்து
தள்ளிவிட்டு வேகமாக வெளியேறினான்.
தன் சட்டைப்பையில கைபேசியை தேடினான்.
இல்லை.
“ஓ… அரங்கு வீட்டுக்குள்ள சார்ச் குத்தி போட்டேன்
மறந்துட்டேன்” வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்.
கைபேசியை கைப்பற்றினான்.
திரையை நோக்கினான். இயலிசையிடமிருந்து
குறுந்தகவல் ஒன்று வந்து கிடந்தது.
திறந்து நோக்கினான்.

” என்னங்க, பல தலைமுறையா ஊருக்கெல்லாம் சோறு
போட்ட விவசாயி இன்னைக்கு தான் சாப்பிட
வழியில்லாமல் சாவத் துணிகிறான். நம்
நாட்டோட கேடுகெட்ட இந்த இழிநிலைக்கு
பரம்பரை விவசாயியான என் குடும்பமும்
தப்பவில்லை.
தலைமுறை தலைமுறையாக வளமும் வாழ்வும்
கொடுத்த இந்த பூமி என் தலைமுறையோடு
ஓய்வெடுக்க சென்றுவிட்டது. பூச்சிக்
கொல்லி மருந்துகளை மண்ணில்
ஊற்றியதற்கு கூலியாக மண் மனிதனை
கொல்லும் ஆயுதமாக மாறிவிட்டது.
மாற்றிவிட்டார்கள்.
எல்லோரையும் போல என் தந்தையும் நிலத்தை
காற்றாலை நிறுவனங்களுக்கு
சொர்ப விலைக்கு
கொடுத்திருந்தால் கூட இன்று
சொகுசாக வாழ்ந்திருக்கலாம்
போல. எதற்கும் அஞ்சாமல் மீசையை முறுக்கி சுடலை
மாடன் போல கம்பீரமாய் தோன்றும் என் தந்தை
இன்று கவிழ்ந்து அழும் அவலத்தை என்னால்
கண்கொண்டு காண இயலவில்லை.
ஒருவேளை நான் இல்லாவிட்டால் இன்றும்
அதே கம்பீரத்தை கடைபிடித்திருக்கலாம்.
பணம்தானே இங்கு அனைத்தையும்
தீர்மானிக்கிறது. ஒருவேளை பணத்தின்
பாதிப்பினால் நம் திருமணம் தானே
தடைபடுவதை விட எனக்கு இம்முடிவு
நல்லதாய்ப்படுகிறது.
நான் எடுத்த இந்த முடிவு உங்களை
பொருத்தவரை பாதகம்தான்.
ஆனால் பெற்று வளர்த்த தந்தைக்கு
பாரமாக இருப்பதற்காக இந்த பாதகத்தை
செய்கிறேன். இந்த பாதகத்தியை
மன்னித்துவிடுங்கள்.
என் அப்பாவின் கதறலை என்னால் சகிக்க
இயலவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்,
விடுங்கள். எப்போதும் சொல்வதைதான்
சொல்கிறேன். நான் உங்களுக்கு
பார்த்த பொண்ணு இல்லை உங்கள்
பொண்டாட்டி. வருகிறேன்.
கண்டிப்பாக வருவேன்.”
இயல் எண்ணுக்கு பல முறை அழைத்தான்.

“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர் எண் அணைத்து
வைக்கப்பட்டுள்ளது”
என கணினிப்பெண் மீண்டும் மீண்டும்
பேசினாள்.
இதயத்தில் வெந்நீரை காய்ச்சி ஊற்றியது
போலிருந்தது பொழிலனுக்கு. என்ன
செய்வதென்று தெரியவில்லை.
தன் நண்பனை அலைபேசியில்
தொடர்புகொண்டு மோட்டார்
சைக்கிளை எடுத்து வரச் சொன்னான்.
இருவரும் வேகமாக இயல் வீடு
சென்றடைந்தனர். வீடு முழுக்க மக்களால்
நிறைந்திருந்தது. ஒப்பாரி ஓசை
வெகுசத்தமாக கேட்டது.
உடல் நடுக்கம், இதய வலி,
“இயல் உனக்கு ஒன்னும் ஆயிருக்காது” என்று
உள்மனதில்
சொல்லிக்கொண்டே… மக்களை
விலக்கி உள் சென்றான்
நாற்க்கட்டிலில் சிவப்பு நிற சுடிதாரோடு
சடலமாக கிடந்தாள் இயல்…

“நான் பட்ட கடனுக்கு எம்பிள்ள தூக்கு
போட்டுருச்சே… நானே எம்பிள்ளய
கொன்னுட்டேனே…” என இயலிசையின்
தந்தையின் கதறல் காண்போரை எல்லாம்
உலுக்கியது.

“அடி பாவி. என்னய அவ்ளோ
கேவலமானவன்னா நெனச்ச? கேவலம்
பணம்தானட்டி. இதை எங்கிட்ட ஒரு வார்த்த
சொல்லணும்னு தோணலயா உனக்கு?
இப்டி அவசரப்பட்டு தூக்கு போட்டு என்னய ஒரே
அடியாதூக்கி போட்டுட்டுட்டியேடி” என அவ்வப்போது
கண்ணீரால் கரைந்தான் பொழிலன்.

உயிரோடு இறந்துவிட்டான் பொழிலன்.
கோமா நிலையிலுள்ளவன் போன்று பல மாதங்களை
கழித்துவிட்டான்.

“இயலு, எல்லோரும் உன்னய செத்து
போயிட்டனு சொல்றாங்க. ஆனால்
என்னால ஏன் அதை நம்பவே முடியல? பல பேரு
கூடி நின்னு கூப்பாடு போடுறாங்க, உங்க
அப்பா தலையில அடிச்சி அழுறாரு, ஆனாலும்
என்னால நம்பவே முடியல. அந்த சிவப்பு கலரு
சுடிதாருல மல்லாந்து படுத்து அசந்து தூங்கிட்டு
இருக்கனுதான் இப்பயும் நினைக்க தோணுது.
எல்லோரும் அவ இனி வரமாட்டானு
சொல்றானுவ. ஆனா என்னால
அப்டி நினைக்கவே முடியல. திடீர் திடீர்னு
காதுக்குள்ள வந்து ஏதோதொ பேசுற.
அப்புறம் காணாம போயிடுற. வந்துரு
செல்லம். எனக்கு தெரியும் நீ
வந்துடுவ. நீ இல்லாம ரொம்ப
கசுட்டமா இருக்குதுட்டி வா. இங்க பாரு
எனக்கு வெவரம் தெரிஞ்சி நான்
எப்போ அழுதேன்னு கூட நெனவு இல்ல.
ஆனால் இப்ப எதுக்குனே தெரியல தேவையே
இல்லாம கண்ணீரா சாடுது.”
பல நாட்களாக பொழிலன்
தனிமையில் புலம்புவது இப்படிதான்.

“பொழிலா, உன்னால் இதை கடந்து
செல்ல இயலும். எழு, நீ இவ்வாறு
இருப்பதை உன் இயல் ஒருபோதும்
விரும்பமாட்டாள், எழு, உக்காரு, நட, ஓடு,
அழு, சிரி, பேசு, எழுது, படி, கற்பி, கடரு, எதையாவது
செய், தயவுசெய்து ஒரே இடத்தில்
தேங்காதே” என உள் மனம் எவ்வளவோ ஆறுதல்
கூறியது பொழிலனுக்கு.
காலம் அனைத்திற்கும் அருமருந்து. அனைத்தையும்
மாற்றக்கூடியது.
தன் தாய், நண்பர்கள், கோவில்கள்,
மருத்துவர்கள் என பல கட்ட முயற்சிகள்
பொழிலனைய சிறிது சிறிதாக மாற்றி
மீண்டும் ஒரு திருமணத்திற்கு திடப்படுத்தியது.
______________________________________
நிகழ்காலம்
பொழிலனுக்கு கண்ணீர் தாரை
தாரையாக வழிந்தது. எதையும்
யோசிக்காதவனாய் அந்த உருவத்தை நோக்கி
சென்றான். அருகில்
சென்றுவிட்டான். இயலின் பாதத்தை
தொட்டு கதரி அழுவதென
உத்தேசம்.
அருகில் சென்றான். அந்த உருவம் அதே
சிரிப்புடன் அதே இடத்தில் நின்றது.

“இயல்… இயல்…”

உருவத்திடம் சிரிப்பை தவிர வேறேதும் இல்லை.

“இயல் என்னய மன்னிச்சிரு…”

அந்த உருவத்தின் முகத்தை இரு கையால்
பற்றினான். அது திமிரியது. இவன்
விடுவதாயில்லை.
முகத்தை மூடியிருந்த கூந்தலை விலக்கினான்.
முகத்தை உற்று நோக்கினான். அதிர்ந்தான்.
இது என் இயல் இல்லை. யோசித்தான். யார்
இது? அதே அச்சம் மனதில்.
யோசித்தான் லேசாக உருவம் பிடிபட்டது. இது
சில ஆண்டுகளாக சித்த பிரமையால்
பாதிக்கப்பட்ட பக்கத்து தெரு
இளம்பெண் என்பதை
அறிந்துகொண்டான்.
சட்டென கையை
விலக்கிக்கொண்டான். அந்த
மனநிலை பாதிப்படைந்த பெண் அவனை விட்டு
சற்றே அகன்றாள். ஆயினும் அதே சிரிப்பு.

“நான் அவ இல்லப்பா… ஆனா அவ
வருவா. கண்டிப்பா வருவா” என
சிரித்தபடியே எங்கோ பார்த்து கூறினாள்
அப்பெண்.

மெல்ல நகர்ந்து சென்றான்.
பொழிலனின் பேரச்சம் பேசாமலே
சென்றுவிட்டது.

அப்பெண் கூறியது போலவே இயல் ஆண்டு
கழித்து வந்தாள். பொழிலனின்
பெண் குழந்தையாக…
ஆம்… பொழிலனின் குழந்தையின்
பெயர் இயலிசை…

(முற்றும்)

நன்றியுடன்

செ_இன்பா

விடிந்தது..!!

sunrise1_cs

 

அதிகாலை ஐந்து மனிக்கு அலைபேசி அலறியது. அயர்ந்த உறக்கம் விடை கொடுத்து பல

நாளாகி விட்ட செழியனுக்கு அலைபேசி அலறலில் விழிப்பதொன்றும் அத்தனை கடினமல்ல

ஒளிப் பீரிட்டு அலரிய அவ்வலைப்பேசியை கையிலெடுத்தான்.

இந்நேரத்தில் யாராக இருக்குமென அனாயாசமாக கைபேசியை கையிலெடுத்து ஒளித்திரையை

உற்று நோக்கினான் அதிர்ந்து நின்றான். ஈராண்டுகளாக கண்ணீரால் கழுவி

கரையெடுத்தபோதும் துளியளவும் அகலாமல் அகத்தில் நின்றாடும் அவளின் அழைப்பு

இது… என்ன செய்வது? வாழ்வில் எப்போதுமே எண்ணியிராத துன்பத்தை தந்தவள், உயிரை

உருவி தன்னகத்தே வைத்து வெறும் உடலை வீதியெங்கும் நடமாடவிட்டவள். அலைப்பேசியை

எடுக்கலாமா? வேண்டாமா? குழப்பத்தில் கை பச்சை பொத்தானை தடவியது.

“யாரு இந்த நேரத்துல?

” நான்…”

சப்த சுரங்களும் நர்த்தனமாடும் அதே குரல்…

“நான் னா யாரு?”

“நான் நறுமுகை…”

ஆணென்ற கர்வம் அகன்று கண்கள் நிறைந்தது செழினுக்கு.

“சரி என்ன இந்த நேரத்துல? அதுவும் இத்தனை வருசம் கழிச்சி…”

“இல்ல இதை உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சி அதான் போன் பண்ணேன்.”

“சரி சொல்லு…”

“எனக்கு குழந்தை பொறந்திருக்கு. உங்கிட்ட சொல்லணும்னு ஆசை அதான்…”

“சரி எந்த ஆஸ்பத்திரி?”

மருத்துவமனையின் விலாசத்தை கூறி அலைப்பேசியை அணைத்தாள் நறுமுகை.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப் போகிறோமென்ற மகிழ்ச்சி, ச்சீ.. அடுத்தவன்

மனைவியை பார்க்க ஏன் இத்தனை குதூகலம் வெக்கங்கெட்ட மனசே? என்று தன் தற்காலிக

மகிழ்ச்சிக்கு அவ்வப்போது கடிவாளத்தையும் போட்டுக் கொண்டான். ஒருநாளுமில்லாத

திருநாளாக பரபரப்பாக கிளம்பினான். போகும்போது வெறுங்கையோடு போகக்கூடாது.

எதேனும் வாங்க வேண்டுமென்றாலும் கடை திறக்க வேண்டுமே? ச்சே நேரம் வேறு ஆமை

போன்று…

ஒருவழியாக மணி எட்டானது. தோரணையாக உடையணிந்து கொண்டான். அவள் பெயர் பொறித்த

ஸ்கார்பியோவில் ஏறினான். வாகனம் ஊரைத்தாண்டி சாலையில் சென்றது, எங்கோ தெரிகிற

தோட்டம், இடையில் பனைமரங்கள், சாலை ஓரமெங்கும் கருவேல மரங்கள், தார்ச்சாலைதான்

ஆயினும் கரடுமுரடு. எங்கே எனது கவிதை என்ற பாடலின் ரீங்காரம். இவன் மனம்

இவயனைத்தையும் சிறிதும் கவனிக்காமல் நறுமுகையுடன் தன் கடந்தகால காதலை

அசைப்போடத் துவங்கினான்…

சுமார் ஐந்தாறு ஆண்டுகளிருக்கும். பங்குனி உத்திரத்திருநாளன்று அய்யானார்

ஆலயத்திற்கு குடும்ப சகிதமாக சென்றிருந்தான் செழியன். பனைமரக் காடுகளினூடே

அமைந்திருக்கு அந்த ஆலயத்திற்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலிருந்து மக்கள்

குவிவார்கள். ஆங்காங்கே மேளதாளங்கள் ஒரு புறம், சண்டை சச்சரவுகள் ஒரு புறம்,

குடும்பம் குடும்பமாக கூடிச் சிரித்தல் ஒரு புறம். எட்டெட்டு பேராக சீட்டாட்ட

களம் ஒருபுறம், வளையல் கடைகள், குளிர்பானக் கடைகள், சிறுவர் விளையாட்டு

ராட்டிணங்கள் குடிபோதையில் சுட்டெரிக்கும் வெயிலிலும் குதுகுலமாக குலாவும்

தமிழகத்தின் அமுதசுரபிகள் என திருவிழா களைகட்டியது. செழியனும் தன் தோழனும்

வேர்க்கடலை விற்கும் ஒரு பாட்டியிடம் ஐந்து ரூபாய்க்கு வேர்க்கடலையை

வாங்கிக்கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு பாட்டியிடம் பழங்காலத்தை

குறித்து கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது செழியனின் முதுகுக்குப் பின்னால்

ஒரு குரல். “பாட்டி நெலக்கடல எவ்ளவு?”

“ஒரு ஒலக்கு அஞ்சு ரூவாம்மா” என்றாள் பாட்டி. வெடுகென்று நிலக்கடலையை

பறித்தவாறே நடையைக் கட்டினாள் நறுமுகை.

“சரி பாட்டி நாங்களும் வரோம்” என இருவரும் நடந்தனர்.

ஒரு பந்தலின் நிழலில் செழியனின் குடும்பம் அமர்ந்திருந்ததில் இருவரும்

ஐக்கியமானார்கள். அதனருகினிலேயே நறுமுகையின் குடும்பதாருடன் நறுமுகை…

வாலிப வயதிற்கே உண்டான விழியோட்டத்தை நறுமுகை மீது பரவ விட்டான். நறுமுகை

திரும்பவேயில்லை. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல இவனும் பார்வையை

மாற்றவே இல்லை.

எப்போதாவது நறுமுகை திரும்புகிற தருணம் “உன் பெயர் என்ன?” என்பது போல்

வாயசைத்தான். “சரியான பொம்பள பொறுக்கியா இருப்பானோ” என்று நினைத்தவாறே

திரும்பிக்கொண்டாள்.

இரவு நேரமானது. செழியன் குடும்பமும் அருகிலிருக்கும் நறுமுகை குடும்பமும்

ஒருவருக்குருவர் அறிமுகமானார்கள். தன் மகன் செழியனை பற்றி அவன் தாய்

அவர்களிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தாள். ” அவுங்க அப்பா அவனுக்கு 13 வயசு

இருக்கும்போதே தவறிட்டாங்க. ஒத்த புள்ள அவன் ஆசப்பட்டதெல்லாம் ஒன்னு கூட கொற

வைக்காம வாங்கி கொடுப்பாவ எங்க வூட்டுக்காரவிய. இனி நம்ம எப்படி வளக்கக்க

போறோமோனு தவிச்சிட்டு இருந்தேன். ஆனா எம்புள்ள அவனா படிச்சான், அவனா வேலைக்கு

போனான், எம்மா ஒரு பிஸினஸ் பண்ண போறேம்மா என்றான். ஏம்லே நமக்கு எதற்க்கு

அதெல்லாம்? நமக்கு தோப்பு இருக்கு நீ வேலைக்கு போயிட்டு வந்து அந்த தென்னையை

காப்பாத்தினாலே போதுமே மக்கா. தேவையில்லாம பணத்த வீணாக்கிபுடாத மக்கானு

சொன்னேன். இல்லமா கண்டிப்பா நான் வீணாக்க மாட்டேன்னு சொல்லி ஆரம்பிச்சான்.

இன்னைக்கு கொஞ்சம் நெலம் வாங்கியிருக்கான், வீட்ட கொஞ்சம் எடுத்து

கட்டியிருக்கான். என்னய நல்லா பாத்துக்குறாம்மா. எந்த கெட்டப் பழக்கமும்

இல்லாம வளந்திருக்கான்.”

“ச்சே.. இவ்வளவு நல்லவனை நாம தப்பா நெனச்சிட்டோமே” என நறுமுகை முதன்முதலாக

“கனிவு பார்வையை” வீசினாள் அந்த அகன்ற கருவிழிகளால்…

பல மாதங்களாக தவமிருந்து தெய்வத்தை கண்ட முனிவரைப் போல ஆனந்தத்தில்

ஆர்ப்பரித்தான் செழியன்.

“எத்தனையோ முறை இந்த ஆலயம் வந்துவிட்டோம், எத்தனையோ அழகிய பெண்களை

கடந்துவிட்டோம் இவளிடம் மட்டும் ஏன் இந்த ஈர்ப்பு? இந்த அயோக்கிய கண்களில்

விழுந்த கன்னிகள் ஏராளம். ஆனால் விழுந்த உருவங்கள் கண்களை தாண்டி சென்றதே

இல்லை. இவள் மட்டும் எப்படி மனதிற்குள் ஊடுருவுகிறாள்? ஏதோ இறைவன் போட்ட

முடிச்சு” என செழியன் மனதிற்குள் வழக்காடு மன்றமே நடத்தினான்.

இரு குடும்பத்தாரும் சூழ்ந்திருந்தாலும் இவரிருவரின் பார்வைகள் மட்டும்

ஒன்றுக்கொன்று பரிச்சயப்பட்டது. கதிர் பாயும் கண்களுக்கு இடையில் கடவுளே வந்து

நின்றாலும்… ம்ம்கூம் முடியாது.

strong> பனைமரக் காடுகளினுள் பல கேளிக்கைகள், மின் அலங்காரங்கள், இன்னிசை கச்சேரி,

அருள் வந்து ஆடும் சாமிகள் என எவ்வளவோ நடைபெறுகிறது ஆயினும் ஒட்டுமொத்த

சொர்கமும் நறுமுகையை சுற்றி இருப்பதாகவே நினைத்தான். அதி நுட்ப சிரத்தையோடு

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரைப் போன்று துளி நிமிடம் தவறாமல்

பார்த்துக்கொண்டே இருந்தான்.

அர்த்த சாமமாயிற்று இவரிருவரை சுற்றியிருந்த அனைவரும் உறங்கிவிட்டனர். செழியன்

மெல்ல சைகை காட்டினான். “உன் பேரு என்ன?” ஒன்றும் புரியாதவளாய் விழித்தாள்

நறுமுகை. சுண்டு விரலையும், பெருவிரலையும் நீட்டி மற்ற மூன்று விரலையும்

மடக்கி தன் காதருகே வைத்து “போன் நம்பர் கொடு” என்றான்.

“ஐய்யோ எங்கிட்ட போன் இல்லை”

“பரவால என் நம்பர் தரவா?”

“வேண்டாம்” என்றவள் தன் தாயின் அருகே படுத்துவிட்டாள் நறுமுகை.

என்னடா இது என்று தலைகவிழ்ந்து தன் தாடையில் கைவைத்த வாறே அமர்ந்திருந்தான்.

விடிய விடிய படித்து ஒரு மதிப்பெண்ணில் தேர்வில் தோற்றவன் போன்ற பரிதாபமான ஒரு

முகபாவம் அது. நறுமுகை பார்க்கிறாளா என மெல்ல பார்த்தான். படுபாதகி

உறங்கிவிட்டாள். “அட கெரகமே கொஞ்ச நேரத்தில் நாம எதைஎதையோ நினைச்சிட்டோமே”

என்று தன் நண்பனருகே படுத்தான். இரவு மணி  மூன்று இருக்கும். உறங்கிவிட்டான்.

விடிந்தும் விடியாப் பொழுது. சுற்றிலும் இறைச்சல் இருப்பினும் அயர்ந்த

உறக்கம். யாரோ தன் காலில் மிதிப்பது போன்று ஒரு வலி கடும் அசதியுடன் யாரென்று

பார்த்தான். நறுமுகை. படபடத்து எழுந்தான். சிறிய தென்னையோலையில் மிகச் சிறிதாக

பத்து இலக்க எண்கள் வீசியெறிந்து தன் குடும்பத்தோடு சென்றாள் நறுமுகை..

பேரானந்தம், உலகிலேயே இந்த அய்யனார் மட்டுமே சக்தி வாய்ந்தவர் என்று

எண்ணிக்கொண்டான். கடவுளுக்கு நன்றி கூறினான்.

ஒருவழியாக திருவிழா முடிந்தது. வீடு திரும்பினார்கள். முதல் வேலையாக போன்

செய்தான். சில பல ரிங் சென்றுவிட்டது… எடுப்பார் யாரும் இல்லை. திடீரென ஒரு

கணத்த குரல் “அலோ யாரு நீங்க?”

நா…ன்..

“அலோ சொல்லுங்க யாரு நீங்க?”

என்ன பேசுவதென்று தெரியவில்லை… மரண தண்டனை கைதியின் கடைசி நிமிடம் போன்று

அத்தனை படபடத்தது இருதயம்.
சற்றே தட்டுத்தடுமாறிய குரலில் “நான் கோயில்ல பாத்தோம்லா”

“கோயில்ல பாத்தோமே?… இழுத்தவாறே இருந்தபோது திடீரென ஒரு குரல் “அலோ சாரி

ராங் நம்பர்” என்றது.

“ஒருவேளை நம்பரை மாத்தி கொடுத்து நம்மை ஏமாத்திபுட்டாளோ?” என பல்வேறு

கேள்விகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கையில் அதே எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல்.

“Sorry Amma ph Atten pannittanga. I call u later. U don’t call me”

“ok Thank you so much”

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

இரண்டு நாட்கள் அழைப்பும் இல்லை. எந்த அழைப்பு வந்தாலும் அவளா என

எதிர்பார்த்தான். உடனிருக்கும் உறுப்பைப் போல உறக்கத்திலும் கைபேசியை கையிலேயே

வைத்திருந்தான்.

ஒருநாள் கைபேசி சிணுங்கியது…

அவளே தான். பச்சை பொத்தானை அழுத்தினான். “நறுமுகை” என்றான்.

“ம்ம்ம் நாந்தான். நல்லா இருக்கியலா?”

நான் நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்கா? இந்த ரெண்டு நாளா உன் போனுக்காக

காத்துகெடக்கேன், ரொம்ப தவிச்சிட்டேன்” இருதய படபடப்புக்கிடையே பேசிவிட்டான்.

“வீட்ல அம்மா இருந்தாக்கா பேச முடியாது. அதான் பேச முடியல…”

“சரி என்னய உனக்கு பிடிச்சிருக்கா?”

“நான் உங்ககிட்ட பிரண்ட்லியாதான் பேசுதேன். நீங்க வேற எதும் கற்பன பண்ணாதீங்க.

சரி என்ன ஒங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“உன் அழகு என்னய திரும்ப வச்சிச்சு, உன் குணம் எப்படீனு பாத்துதான் விரும்ப

வைக்கும்”

“என் குணம் ரொம்ப மோசமான குணம். நான் ஒரு வாயாடி, சில்லாட்ட”

என உறையாடல் நீண்டுகொண்டே சென்றது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்

துவங்கினர். ஒருநாள் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக திட்டம்.

தன் தோழியின் வீட்டுக்கு செல்வதாக பொய் சொல்லி கிளம்பினாள் நறுமுகை.

பேருந்து ஏறியாகிவிட்டது. முதன்முதலாக தவறு செய்கிறோம். அம்மாவிடம் அபாண்டமான

பொய் சொல்லிவிட்டோம். கடவுளே என்னை மன்னிச்சிடு. செழியனை பார்க்கும் ஆவலில்

strong> அனைத்து துணிவும் வந்தது.

நாற்பது நிமிட பேருந்து பயணம் நிறைவு. பேருந்து நெல்லை வந்தடைந்தது.

பேருந்தை விட்டு இறங்கினாள். அவனை காணவில்லை. நெஞ்சு படபடத்து. கைப்பேசியில்

எண்களை அழுத்தினாள். எண் தொடர்பு எல்லைக்கு அப்பால்.

“கடவுளே நான் என்ன செய்வேன்? அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்ததுக்கு எனக்கு

இது தேவைதான்”

கருவிழி குளமானது. ஈக்கள் கருகும் தீகக்கும் வெயில். இருபது நிமிடமாகிவிட்டது.

கண்ணீர் தாரைதாரையாய் வடியத் துவங்கியது.

“சரி கடைசியாக ஒரு தடவை போன் பண்ணி பாத்துட்டு ஊருக்கு திரும்பிடலாம்” எண்களை

அழுத்தினாள். கிர்… கிர்… அழைப்பு செல்கிறது.

அவள் முதுகின் பின்னே “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்” பாடல்

ஒலி… திரும்பினாள்… செழியன்…

“என்ன மேடம் அவ்ளோ வாய் பேசினீங்க இப்ப இப்ப அழுறீங்க?”

“போ.. நான் ரொம்ப பயந்துட்டேன்.

நறுமுகைக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.

“சரி வாட்டி. கொஞ்சம் தள்ளி நின்னு பேசுவோம்”

“வேண்டாம் நான் தனியாலாம் வரமாட்டேன்”

“ஏ லூசு இங்க இந்த வெயிலுல இப்டி நின்னு பேசினா கருத்துப் போயிருவடி”

சற்றே தள்ளிச் சென்றனர்.

அங்கே ஒரு ஸ்கார்பியோ மகிழுந்து நின்றது. அதன் முன் சென்று நின்றான் செழியன்.

“வா… இந்த வண்டிக்குள்ள இருந்து பேசுவோம்”

“ஒனக்கு என்ன கிறுக்கா? எவன் வண்டிக்குள்ளயோ இருந்து பேசணும்ங்குற?

“இது நம்ம வண்டிதான்.”

“என்னது நம்ம வண்டியா? எங்கிட்ட சொல்லவே இல்ல?”

” ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனுதான் சொல்லல. சரி அதவிடு கொஞ்சம் வண்டிக்கு

பின்னாடி பாரு…”

கருப்புக் கண்ணாடியில் நீல நிற எழுத்துக்களில் நறுமுகை என்ற எழுத்து. வழக்கம்

போலவே நறுமுகைக்கு கண்ணீர் வடிந்தது. ஆனால் இந்த கண்ணீரில் பயம் இல்லை, குற்ற

உணர்ச்சி இல்லை, கவலை இல்லை மாறாக கணிந்துருகும் காதல் நிறைந்திருந்தது.

“ஏ லூசு அழாதேட்டி”

“சரி நான் அழல. நான் வீட்டுக்கு போறேன். வண்டி ஏத்தி விடு…

வாகனம் ஏறி வீடு வந்து சேர்ந்தாள்.

காதல் மேலும் அழுத்தமானது. இருவருக்கும் இஷ்ட தெய்வம் அலைபேசியேயானது. இரண்டு

கைபேசிகளும் கோடிக் கணக்காண முத்தங்களை பெற்றது.

இந்த சூழலில்தான் நறுமுகைக்கு திருமணப் பேச்சு வந்தது. “தூரத்து சொந்தம் நல்ல

பையன். பக்கத்து வீட்டு கண்ணகிக்கு தங்கச்சி மொவனாம். நம்ம நறுமுகைய

பாத்துருப்பான் போல ஒங்களால முடிஞ்ச நகைய போடுங்கனு கேக்காவ” என நறுமுகையின்

தந்தையிடம் தாய் கூறிக்கொண்டிருந்தாள். இதனை கேட்டுக் கொண்டிருந்தாள் நறுமுகை.

அடுத்த நாள் செழியனிடம் நடந்ததை கூறினாள். “சரி கவலை படாதே நான் எங்க அம்மய

கூட்டிட்டு உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வாரேன்” என்று தைரியம் ஊட்டினான்.

மறுநாள் செழியன் கூறினான் “எங்க அம்ம சம்மதிக்க மாட்டேங்குறாங்க. நம்ம பத்தி

எல்லாத்தையும் கேட்டாங்க நம்ம சந்திச்சது, சாஸ்தா கோவில்ல பாத்தது

எல்லாத்தையும் சொன்னேன். அவுங்க சம்மதிக்குற மாதிரி தெரியல. நான் சண்ட

போட்டுட்டு வந்துட்டேன்..”

நறுமுகையால் அழுகையை அடக்க முடியவில்லை. ஒன்றும் பேசாமல் சிவப்பு பொத்தானை

அழுத்தினாள்..

செழியன் திரும்ப திரும்ப அழைப்புவிடுத்தான் அனைத்தும் தவறிய அழைப்பானது.

அன்று இரவு முழுவதும் நறுமுகை உறங்கவே இல்லை. அழுதாள், அழுதாள், அழுதுகொண்டே

இருந்தாள். மறுநாள் செழியனின் எண்ணிலிருந்து அழைப்பு.

“என்ன? ஏன் போன் பண்ணின?”

மறுமுனையில் பெண் குரல்.

“எம்மா நீதான் நறுமுகையோ?”

“ஆமா”

“நான் செழியனுக்கு அம்ம பேசுதேன். எவளும் பைத்தியகாரி பிள்ள பெத்து

போட்டுருப்பா நேக்கா அமுக்கிபுடலாம்னு இருக்கியளோ?”

படபடக்கும் இருதயம், நெஞ்சில் பாராங்கல் விழுந்தது போன்ற கணம். என்ன

பேசுவெதென்று தெரியவில்லை நறுமுகைக்கு. செழியனின் தாயார் தொடர்ந்தாள்.

“ஒருநாள் ராத்திரியில மயங்குன நீ ஏப்பேரு பட்டவளா இருப்பா. பொம்பள புள்ளையேனு

பாக்கேன் இல்லேனா வீடுதேடி வந்து மானத்த வாங்கிருவேன் சாக்கிரதையா இருந்துக்க

சொல்லிபுட்டேன்”

இதற்கு மேலும் கேட்க இயலாது கைபேசியை அணைத்தாள் நறுமுகை.

அணைத்துவைத்த கைபேசிக்கு சில நாட்கள் உயிர் கொடுக்கவே இல்லை.

செழியன் அல்லாடிக்கொண்டிருந்தான். தன் தாயார் அவனிடம் திடமாக கூறினாள்.

“நீ எவள வேணும்னாலும் கட்டிக்க. ஆனா நான் உசுரோட இருக்க மாட்டேன். எனக்கு

உன்னய வுட்டா யாரும் கெடயாது. நான் சொல்லியவள கட்டிக்க. நம்ம குடும்பத்துக்கு

தகுந்ததா நான் பாக்குறேன். இந்த ஊருல உங்க அப்பாவுக்குனு ஒரு மறுவாத உண்டு அதை

கெடுத்துதான் நான் வாழணும்னு அவசியம் இல்ல. முடிவு பண்ணிக்க”

திகைத்தான் செழியன். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. “ஒரு ராத்திரியில

உங்கிட்ட மயங்கினவ கண்டிப்பா நல்லவளா இருக்க மாட்டா” என்ற தொனியில் பேசினாள்

அவன் தாயார்.

சரி இனி பேசி பலனில்லை. ஓடிபோய் ஏதாவது கோவில்ல கல்யாணம் பண்ணிடலாம் என

தீர்மானித்து பல முறை அலைப்பேசியில் முயன்றான். “நீங்கள் அழைத்த எண் அணைத்து

வைக்கப் பட்டுள்ளது என்ற வார்த்தையே திரும்ப திரும்ப வந்தது.

ஒரு வாரம் கழித்து நறுமுகையிடம் இருந்து அழைப்பு வந்தது.

“நறுமுகை… செல்லம்.. ஏன்டி இத்தன நாளா போன் சுவிட்ச் ஆப்ல இருந்துச்சி?

என்னால தாங்க முடியல. செத்துடலாம் போல இருக்கு” என வாய் விட்டு அழுதான்.

அழுதழுது துவண்டு போன தொண்டையில் இருந்து வரும் குரலை சற்று ஊகித்துப்

பாருங்கள். அந்த குரலில் பேசினாள் நறுமுகை “இங்க பாரு. உங்க அம்ம எது

செஞ்சாலும் உன் நல்லதுக்குதான் செய்வாங்க. பேசாம உங்க அம்மா பாக்குற பொண்ண

கட்டிக்க. எனக்கு உன்கூட வாழுற குடுப்பன இல்ல” என ஓ…வென கதறினாள்.

“ஏ கிறுக்கி என்ன சொல்லுற?”

“ஆமா… உண்மையதான் சொல்லுறேன். இனி எனக்கு போன் பண்ணாத. எனக்கு மாப்ள

பாத்துட்டாவ…”

“ஏ… ப்ளீஸ் இருடி. போன வைக்காத…

“என்னய மன்னிச்சிரு செழியா” என அழுது துடித்தாள்.

கைபேசியை அணைத்தாள்…

செழியன் துடிதுடித்துப் போனான். நாட்கள் வாரமாயிற்று, வாரம் மாசமாயிற்று.

மாதம் ஆண்டுகளாயிற்று. அவன் மீளவே இல்லை. தன் தாயாருடன் பேசவும் இல்லை…

கடந்த கால நினைவுகளை கண்ணீரில் கரைத்தவாரே ஸ்கார்பியோவில் சென்றுகொண்டிருந்த

செழியன் தற்காலத்துக்கு திரும்பினான். வாகனம் மருத்துவமனையிருக்கும்

நகரத்துக்கு வந்தடைந்தது. பிறந்த குழந்தைக்கு தேவையான சில பொருட்களை

வாங்கிக்கொண்டான்.

சரி இனி நறுமுகைக்கு போன் செய்து பார்க்கலாம்.

எண்களை அழுத்தினான். மறுமுனையில் நறுமுகை.

“என்ன செழியா எங்க இருக்க?”

ஆஸ்பத்திரி பக்கத்துலதான்.

“நீ மேலே மூனாவது மாடி, 23 ம் நம்பர் ரூம்’க்கு வா”

சடசடவென சென்றான். தொட்டிலில் குழந்தை, கட்டிலில் குழந்தைக்கு தாய் நறுமுகை,

அருகினில் நறுமுகையின் சித்தி.தாயார் இல்லை.கைகள் நிறைய பொருட்களோடு வாசலில்

நின்றான் செழியன். “ஏம்மா இது யாரு?” காதில் மெல்லிய குரலில் நறுமுகையின்

சித்தி கேட்டாள்.

“என் பிரண்ட் சித்ரா ஹஸ்பண்ட்ம்மா. சித்ராவுக்கு உடம்பு சரியில்ல… அதான்

இவரு வந்துருக்காரு.”

“உள்ள வாங்க தம்பி”

“சித்தி நீ போய் குடிக்க எதாவது வாங்கிட்டு வா. அப்டியே எனக்கு

சாப்டுறதுக்கும் எதாவது வாங்கிட்டு வா”

சரியென கிளம்பினாள்.

இருவருக்குள்ளும் சில நிமிட மௌவுனம்.

நான்கு கண்களும் நிறைந்து நின்றன..

யார் தொடங்குவெதென்று இருவருக்கும் தெரியவில்லை.

மெல்ல ஆரம்பித்தாள் நறுமுகை.

“எப்டி இருக்க?”

“ம்ம்ம் இருக்கேன். நீ சந்தோஷமா இருக்கியா?”

“ம்ம்ம் நான் சந்தோஷமா தான் இருக்கேன். உன்னய நான் ஏன் இன்னைக்கு வர சொன்னேன்

தெரியுமா? இந்த நாளுக்காக நான் பல நாளா வெயிட் பண்றேன்”

ஒன்றும் புரியாதவனாய் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அவள்

தொடர்ந்தாள்.

“எனக்கு கல்யாணமாகி மூனு மாசமா அவர்கிட்ட நா ஒழுங்கா பேச கூட இல்ல.. எந்த

ஆம்பளயும் பொறுக்க மாட்டான். ஆனா அவரு பரிபூரண அன்போடு நீ எப்ப வரியோ அப்ப

வா’னு சொல்லி வெயிட் பண்ணாரு. அப்புறம் எங்க குடும்பத்துல அவரையும், அவரு

குடும்பத்துல என்னையும் தப்பா பேச ஆரம்பிச்சாங்க. அப்ப கூட அவரு என்ன கட்டாயப்

படுத்தல. அப்புறம் ஒருநாள் நானே போயி மன்னிப்பு கேட்டேன்..

ஏத்துக்கிட்டாரு..

அப்புறம் பல மாசமா எங்களுக்கு கொழந்த இல்ல. எல்லா கோயிலுக்கும் போனோம். ஆனா

ஒரு விஷேஷ வீட்டுக்குக் கூட போக முடியாது. இந்த உலகமே ஒரு மாதிரியா

தெரிஞ்சுது. நல்லது, கெட்டது எதுலயும் என்னால கலந்துக்க முடியாது. எனக்கு

பிறகு கல்யாணமானவளாம் கொழந்த உண்டாயிட்டா. ஏக்கமா இருக்கும். அப்புறம் கடவுள்

புண்ணியத்துல கற்பமானேன். கற்பமான நாள்லேருந்து வாந்தி, மயக்கம், சாப்புட

முடியாது உமிழ் நீர் கூட வாயில தங்காது. பத்து மாசமா ரொம்ப கஷ்டபட்டேன்.

அப்புறம் இந்த பிரசவ வலி. யப்பா சாமி தாங்க முடியாது. குழந்தைய பெத்த பிறகும்

ஒரு நிமிஷம் கூட நிம்மதியா உறங்க முடியாது. எப்ப பிள்ள அழுமோனு கெதக்கடியிலேயே

இருப்பேன்.

இதெல்லாம் நான் உங்கிட்ட ஏன் சொல்றேன்னா ஒரு குழந்தைய பெத்து எடுக்கணும்னா

இவ்வளவு பாடு இருக்கு. குழந்தை பெக்குறதுக்கே இவ்வளவு பாடு. அதை வளத்து 29

வயசு வரைக்கும் ஆளாக்க எவ்வளவு பாடு படணும்? அந்த தாய்க்கு நம்ம எவ்வளவு

விசுவாசமா இருக்கணும்?

உங்க அப்பா சாவும்போது உனக்கு 13 வயசு. அதுக்கு பிறகு வேற ஒரு வாழ்க்கைய

தேடாம, நாடி நரம்பெல்லாம் கட்டுபடுத்தி உனக்காகவே வாழ்ந்தவங்க உங்க அம்மா. நீ

அவங்களுக்காக என்னய விட்டு கொடுத்தது என்ன தப்பு?

நமக்காக மட்டுமே வாழுறது வாழ்கையே இல்ல. அது சுயநலம், மிருகம் கூட அப்புடி

வாழாது. நம்ம மனுசங்க. கொஞ்சமாவது யோசிச்சி பாரு. கஷ்டம், கவலை இல்லாத

மனுசன்னு எவனுமே இல்ல. நமக்கு இந்த கஷ்டம் இல்லேனா வேற எதாவது ஒரு கஷ்டம்

வரத்தான் போகுது. புரிஞ்சிகிட்டு வாழு. சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணு, உங்க

அம்மாகிட்ட பேசு. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா?

திருச்செந்தூர் கோயிலுக்கு போயிருந்தேன். அப்ப உங்க அம்மாவ பாத்தேன். உங்க

அம்மா ரொம்ப அழுதாங்க, மன்னிப்பு கேட்டாங்க”

அனைத்தையும் கண்ணீர் ததும்ப கேட்ட செழியன் அவள் குழந்தையை வாரி முத்தமிட்டான்.

“என் வாழ்கை ரொம்ப நாளா விடியா வானமாவே இருந்துச்சி.

இன்னைக்கு தான் விடிச்சிருக்கு.

குழந்தையை பார்த்தவாறே சொன்னான். ஏலேய் நீ குடுத்து வச்சவன் அடுத்த சென்மத்துல

நான் நீயா பொறக்கணும்” என்று கண்ணீர்மல்க நன்றி கூறி விடைபெற்றான் செழியன்.

அழுகையை அடக்க முடியாமல், வாய் திறந்து பேச வக்கற்று புன்னகை பூத்தவாறே

தலையசைத்தாள் நறுமுகை…

(முற்றும்)

நன்றியுடன்

செ_இன்பா